பரிவர்தனை யோகம்
செவ்வாய்பட்டி
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒரு மனிதன் எவ்வளவுதான் அறிவுநிரம்பப பெற்று இருந்தாலும்,
கெட்டிகாரனாக இருந்தாலும் அவனுக்கு குறைந்த அளவாவது யோகம் என்பது இருக்க வேண்டும்.இதனைதான் நமது முன்னோர்கள் அழகாக ஒற்றைவரியில் எடுத்துகூறியிருப்பார்கள்.
அதாவது "மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவாது இருக்கவேண்டும் " என்பர்.நமது சோதிட சாத்திரத்தில் எண்ணற்ற ராஜயோகங்கள் உள்ளது.இதில் அன்றாட வாழ்வில் நடைமுறையில் அனுபவித்து பார்க்கின்ற அனுபவிக்கின்ற யோகங்களில் ஒன்றான "பஞ்சமகா யோகங்களை "பார்ப்போம்.
செவ்வாய் பகவான் கேந்திர ஸ்தானமான 1 ,4 7, 10 ல் உச்சம், ஆட்சி போன்ற பலம்பெற்றால் #ருசக யோகம் ஆகும்.
இதேபோல புதன் பகவான் கேந்திர ஸ்தானங்களில் உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெறுமெனில் பத்ரயோகமும்,
சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 1 ,4 ,7 ,10 இடங்களில் உச்சம், ஆட்சி போன்ற பலம்பெற்றால் #மாளவீகாயோகம் தருகிறது.
மேற்கண்ட வகையில் குரு பகவான் பலம்பெற்றால் ஹம்சயோகமும்,
சனி பகவான் பலம்பெறும்போது #சசயோகமும் கொடுக்கிறது.
இந்த ஐந்தும் சிறந்த இராஜயோகங்களாகும்.
இவை நற்பலனை அதன் தசைகளில் தரவேண்டுமெனில் அக்கிரகங்கள் பாதகாதிபதியாகவோ அல்லது ஆறு அல்லது எட்டாமாதிபதி போன்ற கெட்ட ஸ்தானங்கள் பெறக்கூடாது.மேலும் வக்ரம் மற்றும் அஸ்தமனம் பெறக்கூடாது.
இவைமட்டுமல்லாமல் குருசந்திரயோகம்,கெஜகேசரியோகம்,குருமங்களயோகம்,பிருகுமங்கள யோகம்,சசிமங்கள யோகம்,தர்ம-கர்மாதிபதி யோகம்,கேந்திரகோணாதிபதியோகம்,நீசபங்க யோகம்,அஷ்டலெட்சுமி யோகம்,சந்திர அதியோகம்,இலக்கன அதியோகம், வஸூமத் யோகம்,புஷ்கலாயோகம்,கேஸரியோகம்,நரபதியோகம்,அமலயோகம்,சக்கரவர்த்தியோகம்,கர்மயோகம்,மிருகயோகம்,தூபயோகம்,வீணையோகம்,மனவிஷ்ணுயோகம்,மந்தாகினியோகம்,பூபயோகம்,பாசகயோகம்,சுக்கிரயோகம் மற்றும் கிரகமாறி யோகம் இதுபோன்ற எண்ணற்றயோகங்கள் உள்ளது.
இந்த பதிவிலும் அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளிலும் ஒவ்வொறு ராஜ யோகங்களையும் விரிவாக அலசி ஆராய்ந்து பார்ப்போம்.
இதில் முதலில் சாதாரன மனிதனையும் சாதனையாளன் ஆக்கும் முக்கியமான யோகங்களில் ஒன்றான " பரிவர்தனை யோகம் "-பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
பரிவர்தனை யோகம் அல்லது கிரகமாறி யோகம்:-
ஒரு வீட்டின் கிரகம் மற்றொரு வீட்டிலும்,மற்றொரு வீட்டின் கிரகம் முதல் வீட்டிலும் இடம் விட்டு இடம் மாறி உட்கார்ந்து கொள்வது இவ்விதயோகமாகும்.
பழனிமலை முருகனின் அருள்பெற்ற சித்தர் போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் மருத்துவம் பற்றி புலிப்பாணி -500,என்ற நூலும்,சோதிடம் பற்றி புலிப்பாணி -300 எனும் நூலும் எழுதியுள்ளார்.
அவர் தனது புலிப்பாணி -300 என்ற நூலில் கிரகங்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வதாடல் உண்டாகும் யோகத்தை அழகாக கவிவடிவில் தந்து இருப்பார்.படித்து ருசியுங்கள்.
"தானேன்ற கோள்களது மாறி நிற்க தரணிதனில் போர்விளங்கும் தனமுள்ளோன் ஊனேன்ற உடல்நாதன் பாம்புகூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன் கோனென்ற குமரியுட பூசை செய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான் மானென்ற மறலி பயம் இல்லையில்லை மைந்தனே இடமறிந்து வழுத்துவாயே"
பாடலின் விளக்கம்:-
நல்ல பரிவர்தனை யோகம் பெற்றவன் நற்புகழுடன்,செல்வத்துடனும் இருப்பான்.ஒழுக்கசீலனாகவும்,பெண்தெய்வ வழிபாடு உடையவனாக இருப்பான்..எமனுக்கே பயப்படாத ஆத்ம ஞானம் நிறைந்தவனாக இருப்பான்.இவை யாவும் கிரகங்கள் அமரும் இடத்தை உணர்ந்து பலன் உரைப்பாயாக.
பரிவர்தனை யோகத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1)ராஜயோக பரிவர்தனை
2)அவயோகபரிவர்தனை
3)விபரீத யோக பரிவர்தனை
மேற்கண்ட மூன்று வகையான பரிவர்தனை யோகத்திற்கான விளக்கங்களை பெறுவோம்.
இராஜயோக பரிவர்தனை:-
திரிகோணதிபதிகள் (1,5,9) தங்களுக்குள் பரிவர்தனை பெறுவதும்,கேந்திராதிபதிகள்(1,4,7,10) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும்,கேந்திர கோணாதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறிக்கொள்வதும் ஆகும்.
இப்படி அமர்ந்த இவர்களுக்குள் தனலாபாதிபதி பரிமாறிக்கொண்டால் முதல் தரமான ராஜயோகமாகும்.
இதேபோல தன-பாக்கியாதிபதி பரிமாறிக்கொள்ளுதலும் மிகுந்த தனயோகத்தை அத்திசை காலங்களில் கொடுக்கும்.
பாக்கியாதிபதி எனப்படும் தர்மாதிபதியும்,ஜீவனத்தான் எனப்படும் கர்மாதிபதியும் பரிமாறிக்கொள்வது இதனை "தர்ம-கர்மாதிபதி யோகம்"என்பர்.
பாக்கிய, லாபாதிபதி பரிமாறிக்கொள்வது பாக்கியயோகம் நிரம்ப பெற்றவனாவான்.
லக்கனாதிபதியும்,புத்திரஸ்தானதிபதிகள் பரிமாறிக்கொள்வதும்,நான்கு மற்றும் ஐந்தாமாதிபதி பரிமாறிட்கொள்வதும் நல்லது.இது ஒரு சிறந்த யோகமாகும்.நல்ல அறிவாற்றலையும்,கல்விநிலையையும் அளிக்கும்.
இதனை தொடர்ந்து அடுத்து நாம் பார்க்க இருப்பது
அவயோக பரிவர்தனை:-
திரிகோணாதிபதிகளுடனும்,கேந்திராதிபதிகளுடனும் துர்ஸ்தானாதிபதிகளான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் அதிபதிகள் பரிவர்தனை பெறுவது ஆகும்.
அவயோக பரிவர்த்தனைகளை சற்று விரிவாக பார்ப்போம்.
லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் சாதகன் நோயாளியாகவும் வழக்குகளை சந்திப்பவனாகவும், வறுமை உள்ளவனாகவும், மன அமைதி குறைந்தவனாகவும் இருப்பான்.
லக்கினாதிபதியும், எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் அங்க ஹீனம் உள்ளவனாகவும், அவமானங்களை அடிக்கடி சந்திப்பவனாகவும், முரண்பாடுகள் நிறைந்தவனாகவும், இருப்பான் . பிறரை இம்சை படுத்துவதில் ஆர்வம் உடையவனாகவும் இருப்பான்.
லக்கினாதிபதியும், பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தூக்கத்தில் விருப்பம் உள்ளவனாகவும், சஞ்சாரம் செய்வதில் ஆர்வம் உண்டாகும், விரயங்களை செய்வதில் வேகம் நிறைந்தவனாகவும் ,திடீர் முடிவு எடுத்து தோல்வி அடைவனாககவும் இருப்பான் .
ஐந்தாம் அதிபதி ,ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் புத்திர தோஷம் உள்ளவனாகவும், பூர்வீகத்தில் வழக்கு உடையவனாகவும் , வயிறு உபாதைகள் உள்ளவனாகவும் , பெரிய மனிதர்களின் பகையை பெறுபவனாகவும், இருப்பான் .
5ஆம் அதிபதியும் , 8ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் விபரீத சிந்தனை வில்லங்கமான புத்தி நிறைந்ததாகவும், தன் குழந்தைகளால் அவமானத்தை அடைபவனாகவும், அதனால் மனநிம்மதியை இழப்பவனாகவும், பூர்வீகத்தில் தீர்க்கமுடியாத வழக்குகளை சந்திப்பவனாகவும் இருப்பான் .
5ஆம் அதிபதியும், பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் பூர்வீகத்தை விட்டு விலகி செல்பவனாகவும், பூர்வீகவத்தை விற்று கடன் அடைபவனாகவும், புத்திரர்களை விட்டு பிரிந்து இருப்பவனாகவும், எதிர்மறையான சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.
ஒன்பதாம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் குலப்பகை உடையவனாகவும், நாத்திக சிந்தனை மிகுந்தவனாகவும், தந்தையின் வெறுப்பை பெறுபவனாகவும் , ஆதி சொத்தை அனுபவிக்க இயலாதவனாகவும் இருப்பான். மேற்கல்வியில் தடையை சந்திப்பவனாகவும் இருப்பான்.
ஒன்பதாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் சபைகளில் அவமானம் அடைபவனாகவும் ,கவுரவ பதவியை இழப்பவன் ஆகவும், தந்தைக்கு
அங்ககீனத்தை கொடுப்பவனாகவும், தந்தையின் செல்வத்தைப் இழப்பவனாகவும் , அரசின் எதிர்ப்பை சந்திப்பவனாகவும் இருப்பான் .
ஒன்பதாம் அதிபதியும், பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் வெளியூர்களில் அல்லது அந்நிய தேசங்களில் ஜீவனம் செய்பவனாகவும், இளமையில் தந்தை இழப்பவனாகவும் , சுபச் செலவு செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும் யாத்திரை செல்வதில் தீராத வேட்கை உடையவனாகவும், ஆதி சொத்தை விரையம் செய்யத்தக்கவனாகவும் திகழ்வான்.
நான்காம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தாயின் உடல் நலமும், உறவு வளமும் குறைந்தவனாக இருப்பான். குற்றமுள்ள மனையில் குடியிருப்பான் கல்வி தடையும், பந்துகளையும் சந்திப்பவன் . பழுதுகள் நிறைந்த வாகனத்தை உடையவன் .
நான்காம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அடிக்கடி வாகன விபத்துகளை சந்திப்பவனாகவும், இன் சன பந்துகளால் அவமானத்தையும் துக்கத்தையும் உடையவனாகவும், தாயின் அன்பையும் ஆதரவையும் இழந்தவனாகவும், அரசாங்கத்துக்கு தன் சொத்தை பறி கொடுப்பவனாகவும் இருப்பான் .
நான்காம் அதிபதியும், பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அடிக்கடி புதுக்குடியிருப்பை மாற்றி கொள்பவனாகவும், இளமையில் தாயை இழப்பவனாகவும் ,அகால நித்திரையும் ,அகால போஜனமும் உடையவனாகவும் இருப்பான் .
இளமையில் வறுமையும் சுகவீனமும் உடையவனாக வாழ்வான். கால்நடைகள், வாகனங்களை இழப்பவனாக இருப்பான்.
ஏழாம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மனைவி நோயாளியாகவும், பகையாளியாகவும் மாறுவாள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மனைவியாக அமைவாள். நண்பர்களால் கடனும் பகையும் நஷ்டமும் உண்டாகும். அரசு ஒப்பந்தத்தால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும் .
ஏழாம் அதிபதியும், 8ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மனைவியால் அவமானமும் வில்லங்கமும் வழக்கம் ஏற்படும் . கூட்டாளிகளால் பொருள் இழப்பு ,அபராதம் கட்டுதல் ,விபத்தில் சிக்குதல் ஏற்படும் .அரசு அதிகாரிகள் அவமானப்படுவது தண்டனைக்கு உள்ளாகும் ஏற்படும் .
ஏழாம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் மனைவிக்கும் , மனைவி வர்க்கத்திற்கும் தன் விரயங்களை செய்வான் நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி பயணங்கள் செய்து செல்வத்தை அளிப்பான். மனைவியின் ஆரோக்கியத்தை காக்க தண்ணீர் போல் செலவு செய்வான்.
பத்தாம் அதிபதியும் ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தனது தொழில் ஸ்தானத்தில் எதிரிகளை சந்திப்பனாகவும், வழக்குகளை சந்திப்பது கனவுகளை பெருக்கிக் கொள்வதும் ,கடின உழைப்பு இருந்தும் வெற்றி பெற இயலாத வண்ணமிருப்பான்.
பத்தாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தனது ஜீவன ஸ்தானத்தில் பல தடைகளையும் அவமானங்களையும் சந்திப்பவனாகவும், வீண் தண்டங்களையும், விவகாரங்களையும் தேடி கொள்பவனாகவும், அரசாங்க தலையீட்டால் பொருட்களை இழப்பவனாகவும் இருப்பான்.
பத்தாம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தன் தொழிலையும் தொழில் ஸ்தானத்தையும் அடிக்கடி மாற்றிக் கொள்வான். தொழிலை பெருக்குவதன் மூலம் விரயங்களை சந்திப்பான். நாட்டுப்பணி அல்லது வியாபாரம் செய்வதின் மூலம் பொருளாதாரத்தை இழப்பான் .
இதுவரை குறிப்பிட்டுள்ள அவயோக பரிவர்த்தனைகளில் ஒன்றாவது ஒருவரின் ஜாதகத்தில் இருந்து அவர்களுடன் லக்கனாதிபதி சம்பந்தப்பட்டு அவர்களில் ஒருவரின் திசையானது நடைபெறும் காலம் சாதகன் மேலே குறிப்பிட்டுள்ள அவயோக பலன்களை முழுமையாக அனுபவிப்பான்.
குறிப்பாக பரிவர்த்தனை பாவ கிரக, பரிவர்த்தனை ஆண் கிரக பரிவர்த்தனை, பெண் கிரக பரிவர்த்தனை, அலி கிரக பரிவர்த்தனை, நீச கிரகம் பரிவர்த்தனை, உச்ச கிரகம் பரிவர்த்தனை என்று மட்டுமே பார்க்காமல் கிரகங்கள் பெறும் ஆதிபத்தியம் அவர்கள் அமரும் இடத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது ஞானிகளின் கருத்தாகும்.
சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்து லக்ன சுபர்களின் பார்வையோ, சேர்க்கையோ அவர்களுக்கு கிடைத்து விட்டால் சாதகன் உறவுகளாலும் உரிமைகளாலும் நண்பர்களாலும் பெரும் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடைவான்.
துர்ஸ்தானாதிபதிகள் எனப்படும் 6 8 12ம் அதிபதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தன்னுடைய உறவுகளையோ, உரிமைகளையோ, உடமைகளையோ, நண்பர்களையோ இழந்துதான் நற்பலன்களை பெற முடியும் என்பது திண்ணம்.
நன்றி.
(தங்களது சாதகப் பலன், திருமண பொருத்தம், ஜனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்).
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன் ஆசிரியர் சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம் சக்தி ஜோதிடம் online ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.