ஜாதகத்தில் பலனளிக்கும் போது கவனிக்க வேண்டியவை விதிமுறைகள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதகம் பார்க்க வருபவர்கள் கேட்கும் கேள்விக்கு ஜாதகத்தில் பதிலளிக்க வேண்டுமாயின்,
அந்த ஜாதகத்தில் ஜாதகர் கேட்கும் குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க ஜோதிடர்களாகிய நாம் மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
1) ஜாதகர் கேட்கும் குறிப்பிட்ட கேள்விக்கு தொடர்புடைய "பாவகம்",
2) அந்த குறிப்பிட்ட "பாவகத்தின் அதிபதி",
3) அந்தக் குறிப்பிட்ட கேள்விக்கு தொடர்புடைய "காரகன்",
ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். இவ்வாறாக பார்க்கப்படும் மூன்று வழிமுறைக்கும் மொத்தமாக 120 மதிப்பெண் அளித்தால், ஒரு வகைக்கு 40 மதிப்பெண் வீதம் மதிப்பெண் வழங்கி,
அந்த கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைக்கும் மொத்த மதிப்பெண்களை பொறுத்து தரக்கூடிய பதிலின் வீரியம் அமைகிறது.
உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் தந்தையின் நிலை தொடர்பான கேள்விகளை சாதகர் எழுப்பும்போது பதிலளிக்க கீழ்க்கண்ட மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்படுகிறது.
1)தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம்,
2) ஒன்பதாம் இட அதிபதி
மற்றும்
3)தந்தைக்கு காரகனான சூரியன்
ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்படுகிறது.
1) ஒன்பதாம் இடம்
ஒன்பதாமிடத்தில் கீழ்க்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்க்கப்படுகிறது.
அவையாவன,
a) முதலில் ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்களை கவனிக்கப்பட வேண்டும். அந்த இடத்தில் உள்ள கிரகங்கள் இயற்கை சுப கிரகமா? அல்லது இயற்கை பாவக்கிரகமா ? என பார்க்கப்பட வேண்டும்.ஒன்பதாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் இடம் பெறுவது நல்லது ஆகும்.
b ) ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்கள் பெற்ற நட்சத்திர சாரம் மற்றும் சாரநாதன் ஜாதக கட்டத்தில் உள்ள நிலை.
c ) ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்களின் ஸ்தான நிலை மற்றும் ஒன்பதாம் பாவத்துடன் அந்த கிரகத்தின் உறவு நிலை போன்றவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
d ) ஒன்பதாம் இடத்தில் எந்த கிரகங்கள் பார்வை செய்கிறது. இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறைச் சந்திரன் மற்றும் தனித்த புதன் ஆகியோரின் பார்வை அந்த இடத்தில் உள்ள கிரகங்களையும் மற்றும் அந்த ஒன்பதாம் இடத்தையும் சுபத்துவபடுத்தி வலிமையுடைய கிரகமாக மாற்றி நற்பலன்களை தர செய்கிறது.
மாறாக இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய் போன்றவை பார்வை செய்யும்போது அந்த இடத்தையும் மற்றும் அந்த இடத்தில் உள்ள கிரகங்களையும் பாவத்துவமாக்கி கெடுபலனைத் தர வைக்கிறது.
e ) ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகங்கள் ஷட்பலம் வரிசையில் திக்பலம் பெற்று உள்ளதா? என்றும் வர்கோத்தமம் அடைந்து உள்ளதா? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட எல்லா வகையிலும் பலம் பெற்று இருப்பின் அந்த ஒன்பதாம் இடத்திற்கு 40 மதிப்பெண் தரப்பட வேண்டும்.
2) ஒன்பதாம் இட அதிபதி
ஒன்பதாம் வீட்டு அதிபதி தந்தை ஸ்தானாதிபதி அல்லது பிதுர் ஸ்தானாதிபதி என்றும் அழைக்கப்படுகிறது.
ஒன்பதாம் இட அதிபதியினை கீழ்க்கண்டவாறு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
a ) ஒன்பதாம் வீட்டு அதிபதி இயற்கை பாவ கிரகமா ? அல்லது இயற்கை சுப கிரகமா ? அந்த ஒன்பதாம் இட அதிபதி ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்றுள்ளதா? அல்லது வேறு எங்கேனும் கேந்திரத்தில்(1,4,7,10) அல்லது கோணத்தில் (1,5,9) அல்லது மறைவிடங்களில் (3,6,8,12) அல்லது உபஜெய ஸ்தானத்தில் (3,6,11 ) ஆகிய எந்த ஸ்தான நிலையில் உள்ளது என்று பார்க்கப்பட வேண்டும்.
b ) ஒன்பதாம் இட அதிபதி உடன் இணைந்து மற்றும் பார்க்கும் கிரகங்களுடைய தன்மையைப் பொருத்தும், அதன் வலிமை உறுதி செய்யப்படுகிறது.
இயற்கை சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை கிரகத்தின் வலிமையை உயர்த்துகிறது .
இயற்கைப் பாவக்கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை அந்த கிரகத்தின் வலிமையை குறைக்கிறது.
மேற்கண்ட வகையில் ஒரு கிரகம் முழு வலிமை பெற்றிருப்பின் அந்த கிரகத்திற்கு நாப்பது மதிப்பெண் அளிக்கப்படுகிறது.
3) காரகன்
கேட்கப்பட்ட கேள்வி தந்தை ஸ்தானம் என்பதால் தந்தைக்குக் காரகன் சூரியன் பகவான் ஆவார். எனவே சூரிய பகவானுடைய வலிமை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
a) சூரியன் சாதக கட்டத்தில் எங்கு உள்ளார்(கேந்திரமா, கோணமா, மறைவிடமா மற்றும் உபஜெய ஸ்தானமா)
b) எந்த ஸ்தான நிலையில் (உச்சமா, மூலத்திரிகோணம், ஆட்சியா, நட்பா, பகையா மற்றும் நீசமா) இருக்கிறார்.
c ) சூரியனை எந்த கிரகங்கள் பார்க்கிறது. எந்த கிரகங்கள் சூரியனுடன் இணைந்து உள்ளது என்பதைப் பொருத்தும் சூரியனுடைய வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒளி கிரகமான சூரியனுடன் இருள் கிரகமான சனி பகவான் மற்றும் சாயா கிரகமான ராகு மற்றும் கேது சேர்க்கை பெறுவது உகந்தது அல்ல .
அது அந்த கிரகத்தின் வலிமையை குறைக்கும்.
சூரியபகவானை இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை செய்வது அந்த கிரகத்தின் வலிமையை உயர்த்தும்.
அதிலும் குறிப்பாக சூரியனை வளர்பிறைச் சந்திரன் சமசப்தமமாக பார்வை செய்யும் பொழுது பௌர்ணமி யோகம் பெற்று அந்த சூரியன் முழு வலிமை பெறுவார்.
மேற்கண்ட வகையில் சூரியன் முழு பலம் பெற்றிருப்பின் அதற்கு மதிப்பெண் நாற்பது ஆகும்.
மேற்கண்ட மூன்று வகைகளில் ஆய்வு செய்து பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்து தந்தை பற்றிய வினாவிற்கு விடையளிக்க வேண்டும். விடையளிக்கும் போது லக்னாதிபதியின் வலிமை , நடப்பு தசை புத்தி மற்றும் கோச்சார பலன்களை வைத்தும் பலன் அளிக்க வேண்டும்.
தந்தையை மட்டும் உதாரணமாக எடுத்து நான் விளக்கியது ஒரு உதாரணம் மட்டுமே இதேபோன்று கேட்கப்படும் கேள்வியை பொருத்து வினாவிற்கு விடை அளிக்க வேண்டும்.
தாய் பற்றிய கேட்கப்படும் கேள்விக்கு தாய் ஸ்தானமான நான்காம் இடம் ,அதன் அதிபதி மற்றும் மாதுர்காரகன் சந்திர பகவான் மூவரையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
சகோதரனைப் பற்றி அறிய மூன்றாமிடம், அதன் அதிபதி மற்றும் சகோதர காரகன் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று நிலைகளில் ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.
தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையைப் பற்றி ஆராய்ந்து பார்க்க லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள், களத்திர காரகன் சுக்கிரன் போன்றவற்றை செய்து பார்க்க வேண்டும்.
மேற்கண்ட இந்த ஸ்தானங்கள் மற்றும் அதன் அதிபதி ,களத்திர காரகனான சுக்கிரன் பகவானுடனும் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் தொடர்பு மற்றும் ராகு ,கேது சேர்க்கை காலதாமதம் திருமணத்தை அல்லது இளவயது திருமணம் நடந்தால் அவருடைய இல்லற வாழ்வின் சில அன்யோன்யம் இல்லாத தன்மையை தருகிறது.
மாணவனின் கல்வி நிலை பற்றி கேட்கப்படும் கேள்விக்கு வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் , கல்வி ஸ்தானமான நான்காம் இடம், புத்தி ஸ்தானமான 5-ஆம் இடம், ஞான ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் கல்வி காரகனாக திகழக்கூடிய குரு மற்றும் புதன் பகவானை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
புத்திரபாக்கியம் பற்றி ஆய்வு செய்து பார்க்க புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் ,புத்திர காரகன் குரு மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
நிறைவாக ஒரு வீட்டில் இணைந்து உள்ள கிரகங்களின் பாகை நிலை அடிப்படையில் அக்கிரக வலிமை முடிவு செய்யப்படுகிறது.
உதாரணமாக தந்தைக்குக் காரகனான சூரியன் உடன் இயற்கை பாவ கிரகமான சனி அல்லது ராகு எத்தனை பாகையில் இணைந்து உள்ளது என்பதை பொறுத்து அதன் பாவத்துவம் முடிவு செய்யப்படுகிறது.
ஒரு ராசிக்கு 30 பாகை வீதம் ஒன்பது நட்சத்திர பாதங்களை கொண்ட ஒரு ராசிக்கு ஒரு நட்சத்திர பாதம் 3 பாகை 20 கலைகள் ஆகும்.
சூரியன் உடன் இணையும் சனி அல்லது ராகு மூன்று நட்சத்திர பாதத்திற்குள் இருப்பின்(10 பாகைக்குள்) சூரியன் உடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவமடைய செய்துள்ளது என்றும், ஒரு நட்சத்திர நான்கு முழு பாதம் கடந்து இருப்பின் (13 பாகை 20 கலைகள்) 50 சதவீதத்திற்கு சூரியனை பாவத்துவம் அடையச் செய்கிறது.
நட்சத்திரத்தின் ஏழு பாதம் கடந்து இருப்பின் 22 பாகை 20 கலைகள் தாண்டி இருப்பின் இணையும் பாபக் கிரகமான சனி, ராகு சூரியனை பாவத்துமடைய செய்யாது என எடுத்துக் கொண்டு பலன் அளிக்க வேண்டும்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்