புனர் பூ தோஷம் -ஓர் சோதிட விளக்கம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சந்திர பகவானால் உண்டாகும் தோஷங்களில்
"புனர்பூ தோஷம்" பற்றி முதலில் நீளாராய்சி செய்து இப்பதிவில் பார்ப்போம்.
ஒரு திருமண தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் ,மாங்கல்ய தோஷம் மற்றும் புத்திர தோஷம் போன்ற பலவித தோஷங்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மிகவும் முக்கியமான புனர்பூ தோஷத்தையும் கட்டாயம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமான ஒன்றாகும்.
புனர்பூ தோஷம் என்பது ஒருவரது ஜாதகத்தில் மனோகாரகனான சந்திர பகவான், ஆயுள் காரகனான சனி பகவான் ஆகிய இருவரது தொடர்பினால் உண்டாகிறது.
"மதியுடன் மந்தன் சேர்க்கை மாறாத
புனர்பூ தோஷம்
முழு மதியில்லா
நிலையில்,
முடவனது
ஸ்தான வலு
பொறுத்தே
முடிவுகள் செய்ய வேண்டும்
புனர்பூ
தோஷமா ?யோகமா ? என்று
முடிவில்லா காளி அருளால்
கதைக்கின்றேன்
உங்கள் முன்னே"
சொற்பொருள்
மதி-சந்திரன்
மந்தன், முடவன்-சனி
சந்திரனுடன் சனி பகவானது சேர்க்கையானது புனர்பூ தோஷத்தினை உண்டாக்குகிறதா ? புனர்பூ யோகத்தை உண்டாகிறதா ? என ஆராய்ந்து பார்த்தால் அது சந்திர பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இருவரது நிலையை பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும்.
சந்திரபகவான் வளர்பிறைச் சந்திரனாக இருந்து உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தும் மற்றும் சனிபகவான் சுப ஸ்தான வலு பெற்ற நிலையில் அது யோகமாக மாறிவிடுகிறது.
சந்திர பகவான் தனது உச்ச வீடான ரிஷபத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்து அதில் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்கின்ற பொழுதும் (அதாவது ரிஷப ராசிக்கு சனிபகவான் யோகர் என்ற வகையிலும் , சந்திரபகவான் உச்சமாக இருந்தாலும் வளர்பிறை சந்திரனாக இருக்கின்ற பட்சத்தில் சந்திரன்+சனி சேர்க்கையானது புனர் பூ யோகமாக மாறிவிடுகிறது.)
சந்திர பகவானுடைய ஆட்சி வீடான கடகத்தில் வளர்பிறை சந்திரனாக இருந்து சனி சேரும் நிலையிலும் ,
சனி பகவான் தனது உச்ச வீடான துலாத்தில் சந்திரனுடன் சேர்ந்திருந்து சந்திரன் பகவான் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் பட்சத்தில் .. இதுபோன்ற அமைப்பு பெற்று இருக்கும்பொழுது புனர்பூ தோஷமானது யோகமாக மாறி விட வாய்ப்பு உண்டாகிறது என்பது எனது சோதிட குருமார்களின் கருத்தாகும்.
பொதுவாக மனோகாரகன் சந்திரனுடன் , சனிபகவானுடைய சேர்க்கையானது சாதகருக்கு சற்று மனக் குழப்பத்தை உண்டாக்கி தெளிவான மனநிலை அற்றவராக, தேவையில்லாத மனப்பயம் உடையவராக மற்றும் உறுதியான, தானாக முடிவுகள் எடுக்கும் நிலை அற்றவராக ஜாதகரை மாற்றிவிடும் என்பது சோதிட கலை அறிந்த அனைவருக்கும் சாதாரணமாகவே தெரிந்த ஒன்றாகும்.
எந்த வகையில் இவ்விரு கிரகங்கள் தொடர்பு கொள்வதால் புனர்பூ தோஷம் உண்டாகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் விரிவாகப் பார்ப்போம்.
1) சனிபகவானும் , சந்திர பகவானும் ஒரே ராசியில் சேர்ந்து நிற்பது,
2) சனி பகவானும், சந்திர பகவானும் சம சப்தமாக பார்த்துக்கொள்வது,
3) சனி பகவான் தனது மூன்றாம் மற்றும் பத்தாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பது,
4) சனி பகவான் வீட்டில் சந்திரனும், சந்திர பகவான் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று நிற்பது,
5) சனி பகவான் சந்திர பகவான் நட்சத்திர சாரத்தில் இருப்பது, சந்திர பகவான் சனி பகவான் நட்சத்திர சாரத்தில் இருப்பது,
6) நீசம் பெற்ற சனி,
சந்திர பகவானை பார்ப்பது அல்லது நீசம் பெற்ற சந்திரன் சனிபகவானை பார்ப்பது,
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு
" புனர் பூ தோஷம்" உண்டாகிறது.
இதில் சனியும் சந்திரனும் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பதும் இதேபோல சமசப்தமாக பார்த்துக்கொள்வதும், மற்றும் நீச சந்திரன் சனிபகவானை பார்ப்பது, அல்லது நீச சனி சந்திரன் பகவானை பார்ப்பது இது கடுமையான புனர்பூ தோஷத்தை சாதகருக்கு உண்டாக்கி விடுகிறது.
எவ்வளவு கடுமையான புனர்பூ தோஷம் இருந்தாலும் குரு பகவானுடைய பார்வை இந்த அமைப்பின் மீது விழும் பொழுது புனர்பூ தோஷத்தின் பாதிப்பு குறைந்து விடுகிறது.
கடக வீட்டில் சந்திரன் சனி சேர்க்கை தொடர்பு புனர் பூ யோகமாக மாறிவிடுகிறது. அதே நேரத்தில் கடக லக்கின காரருக்கு அஷ்டம ஸ்தானமான கும்பம் வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கை அந்த லக்னத்திற்கு மட்டும் கடுமையான புனர்பூ தோஷத்தை உண்டாக்கியுள்ளது.
இதற்கான காரணம் என்ன என யூகித்து பார்க்கும்பொழுது சனி பகவான் அஷ்டமாதிபதி என்ற வகையில் இருக்கலாம்.
அதேபோல சந்திரன் நீசம் பெறும் விருச்சக வீட்டில் சந்திரன் மற்றும் சனி சேர்க்கையும்,
சனி நீசம் பெறும் மேஷ வீட்டில் சந்திரன் சனி சேர்க்கை கடுமையான புனர்பூ தோஷத்தை தர வாய்ப்புண்டு.
இந்த புனர் பூ தோஷத்தால் வரும் பாதிப்புகளாவன
1) ஜாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகிக் கொண்டே செல்லும் வாய்ப்பு உண்டாகிறது.
2) ஜாதகருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து அதற்குப்பின் அவர்களது உறவினர்களால் எழும் பிரச்சனைகளால் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று விடல்.
3) திருமணம் நடந்த பிறகு தம்பதிகளுக்கிடையே அன்னோன்யம் இல்லாமல் அவருடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நேரங்களில் பிரிந்து வாழும் சூழல் உண்டாகலாம்.
4) தம்பதிகளில் யாரோ ஒருவருக்கு உடல்நலக் குறைபாடுகளால் மன நிம்மதி இல்லாத சூழல் உருவாகலாம்.
5) இன்றைய நவீன அலைபேசி பயன்படுத்தும் நாகரிகம் வந்த பிறகு திருமணத்திற்கு முன்பே திருமண தம்பதிகள் பேசிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களது பேச்சில் கருத்து மாறுபாடு ஏற்படுவதலோ அல்லது திருமணத்திற்கு முன்பு தங்களைப் பற்றி மிதமிஞ்சிய கற்பனை வாழ்க்கைத் துணைவன் அமைத்துக் கொள்ளும் வகையில் பேசிவிட்டு உண்மை நிலையை திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பொழுது அதனை சகித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குள் பிரிவு வருவதற்கும் மற்றும் மனக்கசப்பு உருவாவதற்கும் காரணமாக அமைகிறது. இதுவும் ஒரு வகை புனர்பூ தோஷம் பலனாக அமையலாம்.
பரிகாரங்கள்
குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
1) புனர்பூ தோஷம் பாதிப்பில் இருந்து விலக தைப்பூசம் விரதமிருந்து திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.
2) திருவண்ணாமலை பொளர்ணமி அன்று கிரிவலம் வரலாம்.
3) சனி பகவான் மற்றும் சந்திரன் பகவான் காயத்ரி மந்திரம் சொல்ல தோஷ பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blog