நிழல் கிரகங்கள் தரும் சூட்சும உண்மைகள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சந்திர கிரகணம்
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். பிறகு மெல்ல நகரும்போது நிழல் விலகிவிடும். இவ்வாறு பூமியின் நிழலால் சந்திரனின் ஒளி சிறிது நேரம் மங்கி இருப்பது "சந்திர கிரகணம்" ஆகும்.
பூமியின் மீது இந்த நிழல் சிறிது நேரம்
விழுவதற்கான காரணம் நிழற் கிரகங்களான இந்த ராகு மற்றும் கேது சந்திரனை விழுங்குவதாக நம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள்.
பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சந்திரனும் ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது.
இப்படி பூமியை சுற்றி வரும் சந்திரன் பூமியின் வட்டப்பாதையில் மேல் நோக்கி செல்லும் போது ஒரு முறையும், கீழ்நோக்கி செல்லும் போது மற்றொரு முறையும் ஆக இருமுறை வெட்டுகிறது. இவ்வாறு சந்திரன் மேல் நோக்கி செல்லும் போது( acending node), பூமியின் பாதையை சந்திப்பது "ராகு" என்றும்,
கீழ்நோக்கி வரும்போது பூமியின் பாதையை சந்திப்பது (decending node) "கேது "என்றும் நவீன விஞ்ஞானம் கூறுகிறது.
புராண ஜோதிட நூல்களின் படி சாயா (நிழல்) கிரகங்கள் என்பதையே அறிவியலின்படி மாயத்தோற்றம் ஆக உள்ளதாக விஞ்ஞானம் கூறுகிறது.
நவக்கிரகங்களை பாம்பு தலையும் ,மனித உடம்பும் கொண்டவர் கேது பகவான் ஆவார்.
மனித தலையும், பாம்பு உடலும் கொண்டவர் ராகு பகவான் ஆவார்.
ராகு பகவானை "கரும்பாம்பு" என்றும் கேதுவை "செம்பாம்பு" என்றும் அழைக்கப்படுகிறது.
மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து போகங்களையும் வாரி வழங்குபவர் " ராகு பகவான் ஆவார்".
ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தினை அள்ளி வழங்குபவர் "கேது பகவான் ஆவார்.
ஒருவரது ஜாதகத்தில் ராகு பகவான் இருக்கும் இடத்திற்கு ஏழாம் கட்டத்தில் கேது பகவான் வாசம் செய்கிறார். அதாவது ராகு பகவானுக்கு 180 பாகை வித்தியாசத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
எல்லாக் கிரகங்களும் முன்னோக்கி நகர இந்த அரவுகளான ராகு-கேது பகவான்கள் மட்டும் பின்னோக்கி நகரும் தன்மை கொண்டதாக உள்ளது . இதன் அடிப்படையில் இவ்விரு நிழல் கிரகங்கள் மற்ற கிரகங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது.
ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இவ்விரு நிழல் கிரகங்கள் பின்னோக்கி நகரும் தன்மை உடையதால் இவ்விரு கிரகங்களுக்கு வக்கிரம் அடைவது கிடையாது.
ராகு பகவான் அமரும் பாவத்தினை கெடுத்து அப்பாவத்தில் உள்ள கிரகங்களின் பலனை தர விடமால் தடுப்பது போல கேதுபகவான் செய்வதில்லை.
ராகு மற்றும் கேது ஆகிய இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் பதினெட்டு மாதங்கள்( ஒன்றரை வருடம்) வாசம் செய்கிறது. எனவே பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றி வர பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
ராகு பகவானைப் போல யோகத்தை தரக்கூடிய கிரகம் வேறு எதுவும் இல்லை.
எனவே தான் "இராகுவை போல கொடுப்பாரில்லை, கேதுவை போல கெடுப்பாரில்லை என்றும்" ராகு கெடுத்துக் கொடுக்கும் என்றும்,
கேது கொடுத்துக் எடுக்கும் என்றும் சொல்லோடை உண்டு.
ராகு பகவான் மேஷம் முதலாக கன்னி வரை உள்ள முதல் ஆறு வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தருவார் என்றும், கேது பகவான் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு வீடுகளுக்குள் இருப்பின் நல்ல பலன்களைத் தருவார் என கூறப்படுகிறது.
ராகு பகவான் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் நற்பலனை தருவார்.இவ்வாறு நல்ல பலனை ராகு தர வேண்டும் எனில் ராகு பகவான் இருக்கும் வீட்டிற்கு கேந்திர ஸ்தானமான 1,4,7,10 சுப கிரகங்கள் அமர்ந்து இருக்க வேண்டும்.
இதேபோல கேது பகவான் ஆனவர் மேஷம், கடகம், சிம்மம், விருட்சிகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய லக்னங்களுக்கு கேதுபகவான் தனது தசை காலங்களில் நற்பலனை தர கூடியவராகவும், சுபராகவும் உள்ளார். ஆகவே இவ்வீடுகளில் கேது பகவான் நன்மையைத் தரவல்லவர் ஆவார்.
ராகு பகவான் ஆனவர் சனியைப் போலவும் ,
கேது பகவான் ஆனவர் செவ்வாயைப் போலவும் செயல்படுவார்.
ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வழிபடுவது போல கேது பகவானை வழிபட உகந்த நேரம் எமகண்ட காலமாகும்.
ராகுபகவான் ஆனவர் தன்னோடு சேர்ந்த கிரகங்கள் தன்மையையே மாற்றிவிடும் தன்மை உடையது. குருபகவானின் தன்மையான ஆன்மீக எண்ணத்தினை ராகுபகவான் உடன் நெருங்கி இணையும்போது (8 பாகைக்குள் ) ஜாதகரை கடவுள் நம்பிக்கை அற்றவராக மாற்றிவிடுகிறது.
புத்திர காரகன் என பெருமையாக புகழப்படும் குருபகவான் உடன் சேரும் ராகு பகவான் புத்திர தோஷத்தை உண்டாக்கி விடுகிறது.
மனநிலை காரகன் எனப்படும் சந்திர பகவானுடன் ராகு பகவான் சேர உறுதியான மனநிலை அற்றவராகவும், மனக்குழப்பம் உடையவராகவும் மற்றும் தெளிவான முடிவு எடுக்க தடுமாறும் மனநிலை உடையவராகவும் மாற்றிவிடுகிறது. இவை மட்டுமல்லாமல் சந்திரனே மாதுர்காரகன் என்ற வகையில் தாயின் உடல் சுகத்தை குறைக்கிறது. தாயாரால் பலன் அடையும் யோகம் அற்றவராக மாற்றிவிடுகிறது.
களத்திரகாரகன் எனப்படும் சுக்கிர பகவான் உடன் ராகு பகவான் சுபத்துவம் பெறாத நிலையில் சேரும்போது களத்திர தடையை தருவதுடன் சாதகர் காம எண்ணம் மிகுதியாக உடையராக்கி வேலி தாண்டிய வெள்ளாடு போல மனதினை காம அலையில் தள்ளாட வைக்கிறது. ஒரு சிலருக்கு காதல் மணம் மற்றும் கலப்பு மணத்தை தருகிறது.
காம கிரகம் அல்லது மங்களநாயகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானுடன், ராகுபகவான் சேரும்போது சாதகர் காம எண்ணம் மிகுதி உடையவராக மாற்றுகிறது மற்றும் வீரமில்லாத கோழையாகவும் மாற்றிவிடுகிறது. பூமி காரகனான செவ்வாய் பகவானுடன் சேரும் ராகு பகவான் பூமி சேரும் யோகம் அற்றவராக தனது சேர்க்கையில் உருவாக்கிவிடுகிறது.
ஆத்மகாரகன் சூரிய பகவானுடன் ராகு பகவான் சேரும்போது ஆன்மீகத் தன்மை அற்றவராக மாறுவதோடு சூரியனின் காரக பலனான அரசாங்க யோகம் மற்றும் தந்தையால் யோகம் ஆகியவற்றில் யோக பங்கத்தை உருவாக்கி விடுகிறது.
வித்தை காரகனான புதன் பகவானுடன் ராகு சேர்க்கை தனது வித்தையை நேரிய வழியில் பயன்படுத்தாதவனாக மாற்றிவிடுகிறது. மாமன் வழி உறவுகளால் பயனற்ற தன்மையை தந்துவிடுகிறது.
ராகு பகவானை போல சேர்ந்த கிரகங்களின் இயல்பான பலன்களை கேதுபகவான் மாற்றுவது கிடையாது கேதுபகவான் தன்னுடன் சேர்ந்து உள்ள கிரகங்களின் பலனை உயர்த்தி பெருமைப்பட வைக்கிறது.
கேது பகவான் ஆனவர் குரு, சனி உடன் சூட்சும வழியில் தொடர்பு கொள்ளும்போது போது ஆன்மீக வழியில் உயரிய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இதர கிரகங்களான சூரியன்,சந்திரன்,
செவ்வாய் சுக்கிரன் புதன் உடன் சேர்ந்தாலும் அதன் இயல்பான பலன்களை கெடுப்பதும் இல்லை.
ராகுபகவான் ஆனவர் லக்கினம் எனப்படும் சாதகர் , குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகியவற்றில் இடம்பெறும்போது திருமணத்தடையை தருகிறார். இதே போல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருக்கும்பொழுதோ அல்லது புத்திர காரகனான குருபகவான் உடன் தொடர்பு கொள்ளும்பொழுது புத்திர தோஷத்தை உருவாக்குகிறார்.
மாறாக கேது பகவான் மேற்கண்ட ஸ்தானங்களில் இடம்பெறுவது பாவ கிரகம் என்ற வகையில் நல்லதல்ல. மற்றபடி அந்த ஸ்தானங்களை ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் கெடுத்து விடுவதில்லை.
ராகுபகவான் நவீன யுகத்தில் சினிமாவில் நடித்தல், நாடகம் மற்றும் தொலைக் காட்சி போன்ற நேரடி ஊடங்களில் தோன்ற வைத்து புகழ் கொடியில் அமர வைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் சுபத்துவம் பெற்ற நிலையில் ராகு தசை மற்றும் புத்தி நடப்பில் உள்ள காலங்களில் சாதகரை அந்நிய தேசம், அந்நிய மொழி மற்றும் அந்நிய நபருடன் பழகி பொருளீட்டும் நிலையை தருகிறார்.
கணிப்பொறி இயக்கும் அறிவு நிரம்ப பெற்று இணைய வழி வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்றவற்றின் மூலமாக நிரம்ப அறிவு பெற்று அதன் வழியாக மிகுந்த பொருளீட்டும் யோகம் உடையவராக திகழ்வார்.
ஜாதகத்தில் ராகு பகவான் பலம் பெற்று செவ்வாய் பகவானும் சுபத்துவம் பெற்று நிலையில் அறுவை சிகிச்சை நிபுணராக சாதகரை மாற்றி அழகு பார்க்கிறார்.
சமூக ஊடகங்கள் (facebook,youtube,twitter,instagram,blog and website) வழியாக மக்களை சந்தித்து அதன் வழியாக பொருளீட்டும் யோகமும் பெறுவார்.
ராகுபகவான் ஆனவர் கண்ணுக்கு தெரியாத விஷயங்களையும் பிரமாண்டமாக காட்டக்கூடிய வல்லமை படைத்தவர் ஆவார்.
லாட்டரி சீட்டு போன்ற சூதாட்டம் , அரசுக்கு விரோத தொழில், நாகரிகமாக ஏமாற்றுதல் பங்குச்சந்தை, நிதி நிறுவனங்கள் நடத்தி கவர்ச்சியாக விளம்பரம் செய்து ஏழை மக்களை பங்குதாரர் ஆக்கி இறுதியில் ஏமாற்றி விடுதல் போன்றவற்றிற்கு காரணகர்த்தா ராகு பகவானாவார்.
ஒரு சிலரை ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வத்தை உண்டாக்கி அதில் ஈடுபட வைப்பவர். ராகுவானவர் ஒருவர் மந்திர தந்திர வித்தைகளில் ஆர்வத்தை உண்டாக்கி பில்லி ,சூனியம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைப்பார்.
ராகு பகவான் ஒருவர் மற்றவரை தெரிந்தே ஏமாற்றக் கூடிய வல்லமை படைத்தவர். ராஜ தந்திரம், சூழ்ச்சி, கபடதன்மை, சிறந்த பேச்சாற்றல் போன்றவற்றை பெற்று விளங்குபவர்.
கேது பகவான் ஆனவர் மற்றவரை ஏமாற்ற விரும்பாதவர், தன்னளவில் தாழ்வுமனப்பான்மை உடையவராகவும், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவராகவும் மாற்றும் தன்மை உடையது.
கேது பகவான் ஆனவர் ஞானத்தினை வழங்கக் கூடியவர். ஒருவரை அருள்வாக்கு சொல்பவர் ஆகவும், குறி சொல்லும் பூசாரி ஆகவும், நல்ல சோதிடர் ஆகவும், ஆலய திருப்பணி செய்பவராகவும் ,ஆலய வாசலில் இறைவனுக்கு உகந்த பூசை மற்றும் புனர்ஷ்கார பொருட்களை விற்கும் கடைக்காரர்களாகவும் மாற்றி அழகாக செயல்பட வைப்பார்.
சிலநேரங்களில் விரக்தி, தாழ்வுமனப்பான்மை, கபட எண்ணத்திற்கும், அகங்காரத்திற்கும் உரியவர். இவரே சந்நியாசம், கணபதி உபாசனை, புண்ணிய ஸ்தல யாத்திரை மேற்கொள்ள செய்பவர் ஆவார்.
கேது பகவான் பாட்டியருக்கு காரகத்துவம் உடையவராகவும், வைராக்கியத்தை மோட்சத்திற்கு உரியவர்.போதை தரக்கூடிய பானங்களான கஞ்சா, அபின் போன்றவற்றிக்கும் காரகன் ஆவார்.
ராகுபகவான் ஆனவர் போகக்காரகர் ஆவார். பாட்டனுக்கு உரியவர் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு (take it easy ) வாழ்க்கையில் செயல்படுபவர்.
கேது பகவான் ஆனவார் ஆணவம், திமிர் மற்றும் சிறைவாசம் போன்றவற்றிற்கு முதியவர் புண்ணிய தலங்களையும்,
மகான்களையும் தரிசிக்கும் வாய்ப்பையும் மற்றும் சந்தர்ப்பத்தையும் தரக்கூடியவர் ஆவார். நல்லவற்றிற்காக மாந்திரீகம் செய்தல் ஆகியவற்றிற்கும் இவரே காரகர் ஆவார்.
இவர்கள் சக்தியின் அருள் பெற்றவராவார். அந்நிய மனிதர்களிடம் தொடர்பு ,அந்நிய மொழி, அந்நிய தேசத்தில் வசித்தல் போன்றவற்றை தரக்கூடியவராவார்.இவை மட்டுமில்லாமல் தரித்திர யோகம் போன்றவற்றினை அளிப்பவரும் இவரே ஆவார்.
நிழல் கிரகங்களுக்கு(ராகு மற்றும் கேது பகவான்) சொந்த வீடு கிடையாது.இவ்விரு கிரகங்கள் இருக்கும் வீட்டையே தனது சொந்த வீடாக கருதி பலன் தர ஆரம்பிக்கிறது.
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் தனது தசை காலங்களில் முதலில் தான் இருக்கும் வீட்டின் பலனையும், பிறகு தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலனையும், இத்துடன் தன்னை பார்க்கின்ற கிரகங்களின் பலனையும் மற்றும் தான் பெற்ற நட்சத்திர சார நாதன் பலனையும் அதன் திசை காலங்களில் கலந்து தர முயற்சிக்கும்.
நிழல் கிரகங்கள் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு தந்து அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் கொண்டு செல்லும்.
நிழல் கிரகங்கள் கேந்திர மற்றும் கோண அதிபதிகளின் நட்சத்திரங்களை பெற்றிருக்கும் பொழுது அதன் திசை காலங்களில் கேந்திர கோணாதிபதிகள் போல் செயல்பட்டு யோக பலனை ஜாதகருக்கு தந்து விடுகிறது.
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் தரும் பலன்களை கணிப்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும்.இதன் பலனை கணிக்க ஜோதிடருக்கு மிகுந்த ஞானமும் மற்றும் அனுபவ அறிவும் தேவைப்படுகிறது.
நன்றி!
(ஜோதிட அரசு மாத இதழில் செப்டம்பர்- 2018-ல் வெளிவந்த எனது கட்டுரை)
(தங்களது ஜாதக பலன் திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் எண்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
My email
masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.