Thursday 28 November 2019

சோதிட புதையல்

                   

சோதிட புதையல்


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  ஜோதிட நூல்களிலும், முகநூல் மற்றும் யூட்யூப் வழியாகவும் தாங்கள் பெறப்படும் சோதிட கருத்துக்கள் அனைத்துமே அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப மூல நூல்களில் பெறப்பட்ட அடிப்படைக் கருத்தை கொண்டு அனுபவ ஆராய்ச்சி கொண்டு தரப்படும் சோதிட பொதுப்பலன் ஆகும்.

 கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் உச்சம், மூலதிரிகோணம் ,ஆட்சி மற்றும் நட்பு போன்ற வரிசையில் அதன் கிரக வலிமை நிர்ணயம்  செய்யப்படுகிறது. இவை ஒளி அளவை அடிப்படையாகக் கொண்டது.

 இவை மட்டுமல்லாமல் கிரகங்கள் ஸ்தான பலம், திருக் பலம், நைசர்கிக பலம், ஜேஷ்டா பலம்,திக் பலம் மற்றும் கால பலம் போன்ற வகையிலும் ஒரு கிரகங்களின் வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது.

 ஒரு சில சமயங்களில் மேற்கண்ட வகையில் ஒரு கிரகம் பலமடைந்து இருப்பினும் அதனுடன் சேரும் கிரகங்கள் தன்மையைப் பொருத்தும் அந்த கிரகங்கள் பெரும் நட்சத்திர சாரத்தைப் பொருத்தும் மற்றும் அந்த கிரகங்கள் பெறக்கூடிய வக்கிரம் மற்றும் அஸ்தமன நிலையை பொருத்தும் ஒரு கிரகத்தின் கிரக வலிமையானது முடிவு செய்யப்படுகிறது.

  ஒரு கிரகம் ஆனது பாவர் சேர்க்கை,பார்வை மற்றும் நட்சத்திர சாரம் ,பகை வீடு ஏறுதல்,மறைவிட ஸ்தான அதிபதிகளுடான தொடர்பு, வக்கிரம் மற்றும் அஸ்தமனம் நிலை போன்றவைகளால் ஒரு கிரகமானது பலவீனமடைகிறது.

 ஒரு கிரகத்துடன் பாவர் சேர்க்கை என்பது இரண்டு வகையில் வகைப்படுத்தலாம்.

  1) இயற்கையிலேயே பாவ கிரகமான சனி, செவ்வாய், ராகு, கேது மற்றும் சூரியன் சேர்க்கை.

 2 அவரவர் சாதக கட்டத்தில் உள்ள மறைவிட ஸ்தான அதிபதிகள் சேர்க்கை.

 ஒரு சிலரது சாதகங்களில் கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருப்பினும் அதன் தசை அவரது வாழ்வில் உரிய காலத்திற்கு வராமல் கஷ்டப்படக் கூடிய சூழல்கள் அமைவதை  பார்க்கிறோம்.

ஒரு சிலரது சாதகங்களில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் எவ்வித கிரகங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உரிய காலத்தில் நல்ல தசை நடப்பில் வந்து அவரது வாழ்வினை உயர்நிலைக்கு கொண்டு செல்வதை பார்த்திருக்கிறோம்.

  ஒரு ஜாதகம் யோக பலனை தர வேண்டுமாயின் அந்த ஜாதகத்தில் "உயிர் "என்று அழைக்கப்படும் லக்கனமும், அதன் அதிபதியும் இதேபோல "உடல்"  என்று அழைக்கப்படும் இராசியும்,ராசி நாதனும்  பலம் இழக்காமல் இருக்க வேண்டும்.

  "உயிரின்றி உடல் தனித்து வாழ இயலாது" .ஒரு முழு மனித வாழ்விற்க்கு உயிரும், உடலும் அவசியம் ஆகும்.இருப்பினும் ராசி நாதனை விட லக்கன நாதனே சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழக்கூடியவர் ஆவார்.

 ஒருவரது ஜாதகத்தில் லக்னமும், ராசியும் இரண்டும் பலம் பெற்று நிற்கும் பொழுது அவரது வாழ்வு 100% எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் தன்மையை சாதகருக்கு தரும் வாய்ப்பு உண்டு.

  ஒருவர் ஜாதகத்தில் பலன் பார்க்க முற்படும்போது உயிர் என்று அழைக்கப்படும் இலக்கனத்தை அடிப்படையாகக் கொண்டே சாதக பலனை ஜாதகருக்கு விளக்க முயல் வேண்டும்.

 இலக்கண அடிப்படையாகக்கொண்டு சாதகப் பலன் பெறுவதை "விதி" என்று அழைக்கிறோம். ஒரு சமயம் விதி கெட்டால்"மதி" என்ற வகையில் ராசியை லக்கனமாக கொண்டும் சாதக பலன் விளக்கலாம்.

இலக்கனம் மற்றும் ராசியை வெவ்வேறாக கொண்டவர்களுக்கு இலக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளிலும் கிரகங்கள் பலம் பெற்று இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகம் படைத்த சாதகராக இருப்பார்.

 இலக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளில் ஏதேனும் ஒரு வகையில் கிரகங்கள் பலமடைந்து நின்றால் சாதகர் ஐம்பது சதவீதம் யோக பலன் பெற்றவராக இருப்பார்.

 இலக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளிலும் கிரகங்கள் பலம் இழந்த நிலையில் இருப்பின் "கதி" என்று அழைக்கப்படும் சூரியனை அடிப்படையாகக் கொண்டு சாதக பலன் பெற முயலலாம்.
இவ்வகையிலும் பலம் இழந்து நிற்பின் தரித்திர சாதகம் ஆகும்.விதிப்பலன் என்ன செய்வது.

   ஒரு சாதகத்தில் குரு பகவான் லக்கனம், ராசி, லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதி இவற்றில் ஏதாவது ஒரு சிலவற்றை பார்க்க அது யோக சாதக வரிசையில் சேரும் வாய்ப்பு உண்டு.

 ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தான அதிபதிகளின் திசையை விட , கோண அதிபதிகளின் திசையே மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு தரும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 லக்னாதிபதிக்கு நட்பாகவும் மற்றும் லக்கனாதிபதி இருக்கும் இடத்திற்கு கேந்திர, கோணங்களில் இடம் பெறும் கிரகங்கள் தனது திசையில் சாதகருக்கு யோக பலன்களை தருகிறது.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
      செல்
   9715189647
    7402570899

 அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

 எனது மின்னஞ்சல் முகவரி
masterastroravi@gmail.com.

My blogspot 
 AstroRavichandran .blogspot .com

AstroRavichandransevvai .blogspot .com.

                      

சாதக பலன் உரைக்கும் பாங்கு

         

சாதக பலன் உரைக்கும் பாங்கு


                   
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 சோதிடர்களாகிய நம்மிடம் பலன் பெற வரும் சாதகர்களுக்கு எவ்வாறு பலன் அளிப்பது?" என்பதனை
" சாதக அலங்காரம்" சோதிட நூல் தரும் பாடல் வழிநின்று விளக்கும் நோக்கோடு இப்பதிவை கொண்டு செல்கிறேன். இது ஆரம்ப நிலையில் உள்ள  சோதிடர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

பாடல்
"சாற்றிய துவா தசமாம்
லக்கினம் தன்னை ஓர்ந்து
நேர்த்தியாய் சுபரும் பாவர்
நிறையோக மார கங்கள் போற்றியே அவர்தம் வீட்டில்
பொதுப் பலன் உரைக்கும் நூலின்
தேற்றமே அறிந்து கொண்டு
செய்பலன் உரைப்பாய் தானே"

பொருள் ;-

   மேசம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு லக்கினங்களுக்கும் அந்தந்த லக்னத்திற்குரிய சுபர் யார்? பாவர் யார்? யோகர் யார்? மாரகர் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
பின்னர் இவற்றின் அடிப்படையில் பலன் உரைக்கும் முறைகளைக் கூறும் நூல்களை கற்றுத் தெளிந்து ஆராய்ந்து பலன் சொல்ல பழக வேண்டும்.

  விரிவாகப் பார்ப்போமானால் துவாதசம் என்பது பன்னிரெண்டு ஆகும். ஒரு கிரக  வலிமையை கண்டறிவதற்கு ராசி, அம்சம் திரேக்காணம்  நவாஅம்சம்.... என்ற வகையில் 12 வகையான கட்டமைப்புகளையும் ஆராய வேண்டும்.

   பலன் சொல்ல முற்படும் ஒவ்வொரு ஜோதிடரும் முதன்முதலில் ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் யார் சுபர், பாவர், மாரகர் என்பதை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 பொதுவாக எந்த ஒரு லக்னத்திற்கும் திரிகோண ஸ்தானமான லக்கினம் ,ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம்  இட அதிபதிகள் இயற்கையிலேயே சுப கிரகமாக இருந்தாலும், பாவ கிரகமாகவே  இருந்தாலும் அந்த லக்கினத்தின் யோகர்களாக கருதப்படவேண்டும்.
 இவர்கள் நல்ல பல யோகமான பலன்களை தன் தசையில் தருவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

   ஒரு ஜாதகருக்கு மறைவிட ஸ்தான அதிபதிகளான 3, 6, 8, 12 ஆம் இடத்துக்குரியவர்கள் அந்த லக்கினத்தின் பாவர்களாக கருதப்படுவார்கள். இவர்கள் தனது திசையில் பொதுவாக தீய பலன்களை தருவார்கள் என்றே கருத வேண்டும் இதில் ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் மேற்கூறியவாறு முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் விதிவிலக்காக 3 மற்றும் பன்னிரெண்டாம் இடத்துக்கு உரியவர்கள் அதிக தீய பலனை தருவதில்லை என கருதப்படுகிறது.

ஒரு கிரகமே 
யோகராகவும், பாவராகவும் செயல்பட வாய்ப்பு உண்டு அதனையும் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக கடக லக்னத்தை எடுத்துக் கொண்டால் குரு பகவான் ஆறுக்கு உடையவராகவும், ஒன்பதாம் இடத்திற்கு உரியவராகவும் ஆகிறார். இந்த நிலையில் அந்த கிரகத்தை  9-க்கு உரியவர் என்ற வகையில் யோகா ராகவும், 6-க்குடையவர் என்ற வகையில் தீயவர் ஆகவும் கருதப்பட வேண்டும் . தீய ஆதிபத்தியத்திற்கான தன்மைகளையும் அந்த கிரகம் பிரதிபலிக்கச் செய்யும் என்ற போதிலும், யோகா ஆதிபத்திய தன்மையே மேலோங்கி நிற்கும் என்பதால் குருபகவானை யோகர் என்றே கூறவேண்டும்.

 லக்னாதிபதிக்கு நண்பராக வருபவரை பாவர் என்று கூறிவிட முடியாது .
 சுபர்,பாபர் இரண்டுக்கும் இடைப்பட்ட "நடுநிலையாளர் "என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை உதாரணம் மூலம் விளக்குகிறேன் பாருங்கள் .

 உதாரணமாக மிதுன லக்னத்திற்கு சூரியன் மறைவிட ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு அதிபதி என்ற போதிலும் அவர் லக்னாதிபதிக்கு நண்பர் ஆவார் என்பதால் அவரை நடுநிலையாளர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

  பொதுவாக ஒரு ஜாதகருக்கு கோண அதிபதிகளை " யோகர்" என்றும், மறைவிட ஸ்தான அதிபதிகளை "பாவர்" என்றும் கருதுகிறோம்.

 கோண மற்றும் மறைவிடத்தை அதிபதிகளை தவிர்த்து 
 2, 4 ,7, 10, 11 ஆகிய இடங்களின் அதிபதிகளை சுபர் என்ற வரிசையில் அடக்கலாம் .ஆனால் இவர்கள்  யோகர்களைபோல் பெருமளவு நன்மைகளை செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்களால் ஓரளவுக்கு நன்மைகளும் உண்டு .அதேநேரத்தில் இவர்களுக்கு வேறு தீய ஆதிபத்தியம் இருக்குமானால் இவர்களை சுபர் என்று கருதி விடவும் முடியாது.அந்தநேரத்தில் இவர்களை பாவர் என்றே கூற வேண்டும்.

 இவைதான் ஒரு லக்கனத்திற்கு பாவர்,சுபர் மற்றும் யோகர் என்று அறிவதற்கான பொதுவான விதியாகும்.

  சிலர் இதில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர் அதாவது 11-க்குடையவர் எல்லா இலக்கினங்களுக்கும்  பவராக கருதப்பட வேண்டும் என்று கூறுகின்றனர் .ஆனால் இது பொருந்தாது. அனுபவத்தில் அது சரியாக வரவில்லை.

 அடுத்து மாரகர்கள் அதாவது மரணத்தை ஏற்படுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் என்று பொருள்.

 பொதுவாக எல்லா இலக்கனங்களுக்கும் 
2 ,7-க்கு உரியவர்கள் மாரகர்கள் ஆவார்.

 சிறப்பாக
 சர லக்னங்களுக்கு 
2 ,7 க்குரியவர்களும், ஸ்திர லக்கினத்திற்கு 3, 8 க்குரியவர்களும், உபய லக்னங்களுக்கு 7, 11 க்குரியவர்களும் மாரகர்களாக கருதப்படுவார்கள்.
ஆனால் அதே நேரத்தில் மாரகாதிபதிகள் லக்னாதிபதிக்கு நண்பனாக இருப்பின் மாறாக செய்யும் வாய்ப்பு குறைவு.

    இவர்களைத் தவிர ஒரு லக்னத்திற்கு பாவிகளாக வருபவர்களும் மாரகம் செய்ய அதிகாரம் படைத்தவர்கள் ஆவார்.
 இவர்கள் தங்கள் திசையில் மாரகம் செய்வார்களா? என்பதை சாதகரது ஆயுள் பலம் என்ன? என்பதை கண்டறிந்த பின் தான் முடிவு செய்ய வேண்டும்.

 மரணத்தை ஏற்படுத்தும் அதிகாரம் படைத்த மாரகாதிபதிகள் கஷ்ட, நஷ்டங்களை மட்டுமே நல்குவர் என்று கூறிவிடமுடியாது.
 சாதக அமைப்பைப் பொறுத்தும் பலவித நன்மைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

  இதனை பின்வரும் உதாரணம் மூலம் பார்க்கலாம் .
உதாரணமாக சர ராசியான கடக ராசிக்கு
 2, 7-க்கு உடையவர் மாரகாதி ஆவார்.
  ஆதலால் இரண்டிற்கு உரிய சூரியன் பகவான் மாரக ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அந்த இலக்கனத்திற்கு பெருமளவு நன்மைகளையே செய்வார் .
காரணம் அவர் லக்னாதிபதியான சந்திர பகவானுக்கு நெருங்கிய நண்பராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு கிரகங்களை யோகர், சுபர், பாவர் என்ற பிரித்த போதிலும் சாதகத்தில் கிரகங்கள் நின்றிருக்கின்ற நிலையைப் பொறுத்து யோகர்கள் ஆனவர் யோக பலனை தராமலும் போய்விடலாம்.
அதேநேரத்தில் பாவர்கள் விபரீதமாக செயல்பட்டு யோக பலன்களை தரக்கூடியவராகவும் மாறலாம் .

     ஆமாம் இதனை நன்றாக கூர்ந்தாய்வு செய்து கவனிக்கப்பட வேண்டும். மறைவிட ஸ்தான அதிபதிகள் என்று சொல்லக் கூடிய கிரகங்கள் தன் திசையில் பாவராக இருந்தாலும் யோக பலன்களை தரக் கூடிய வாய்ப்பு உண்டு . எவ்வாறெனில் மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு நிற்கும் பொழுது எதிர்பாராத விபரீத ராஜ யோகத்தை தரலாம்.

இவ்வாறாக சாதக பலன்களை துல்லியமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சி அறிவு மட்டுமல்லாமல் ஜாதகருக்கு அனுபவ அறிவும் மற்றும் இறைபக்தியும் கண்டிப்பாக தேவை.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
     செல்
   9715189647
   7402570899
    
   அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot 

 AstroRavichandran .blogspot .com

AstroRavichandrannsevvai.blogspot .com

                                   

சந்திர பகவான்--(1)

       சந்திரபகவான்-(1)


                      

 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  ஒருவரது ஜாதக கட்டத்தில் 27 நட்சத்திரங்களும் ஒரு ராசிக்கு 21/4 வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்து தரப்படுகின்றன. ஒரு நட்சத்திரத்தை நான்கு பாதங்களாக பிரிக்கப்படுகிறது.
பாதம் அடிப்படையில் ஒரு ராசிக்கு 9 பாதங்களாக பிரிக்கப்படுகிறது. மொத்தம் பன்னிரண்டு ராசிகளுக்கும் 12×9= 108 பாதங்கள் ஆகும்.

ஒருவர் ஜெனிக்கும்போது  பால்வீதியின் தொடுவானத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது.

  ஜென்ம நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதனை சந்திரன் இருக்கும் இடமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது .
எந்த ராசியில் சந்திரன் இடம் பெறுகிறதோ அதனை "ஜென்ம ராசியாக"கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 கோச்சார அடிப்படையிலான குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி போன்ற இடம் பெயர்ச்சி பலன்களை  ராசி அடிப்படையில் பார்க்கப்படவேண்டும்.

 தின பலன்கள் மற்றும் மாத பலன்கள் சந்திரன் இருக்கும் இடமான ராசியை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.

இலக்கனத்தை உயிர் என்றும் ராசியை உடல் என்றும் அழைத்தனர். லக்னமும், ராசியும் உயிர்+உடல் போன்றவர்கள். உயிரின்றி உடல் தனித்து இயங்காது. எனவே ஜாதகத்திற்கு  பிரத்யோகமான கிரகம் லக்கனாதிபதி ஆகும்.

 சந்திரன் இருக்கும்  ராசியைக் கொண்டே அஷ்டமச்சனி ,கண்டச்சனி ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச்சனி போன்றவை வகைப்படுத்தப்படுகிறது.

 சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் தங்கும் .இந்த வகையில் சந்திரபகவான் சூரியன் உடன் தங்கும் நாட்களை அமாவாசை காலமாகக் கொள்ளப்படுகிறது.

 சந்திரபகவான் சூரியனை விட்டு அதன் ஏழாம் இடத்திற்கு வரும் காலத்தை பௌர்ணமி காலமாக கருதப்படுகிறது.

 சந்திரபகவான் அமாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கி நகரும் காலத்தை வளர்பிறை காலம் அல்லது சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்கிறோம். இது சூரியன் இருக்கும் இடத்திற்கு இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம் வரை நகரும் காலம் ஆகும்.

  ஏழாமிடத்திலிருந்து  சந்திரன் பகவான் சூரியன் இருக்கும் இடத்திற்கு வரும் காலம் தேய்பிறை காலம் அல்லது கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்கிறோம் இது பெரும்பாலும் சூரியன் இருக்கும் இடத்திற்கு எட்டாவது ராசியில் இருந்து பதினொன்றாம் ராசி வரை நீடிக்கும்.

  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்று அழைக்கிறோம்.

வளர்பிறை காலங்களில் உள்ள திதியை பூர்வ பட்சம் திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேய்பிறை  காலங்களில் உள்ள திதியை அமர பட்ச திதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சந்திர பகவானை மனநிலை காரகன் என்று அழைக்கிறோம்.நிறைமதி காலங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பைத்திய தன்மை அதிகமாகி விடுவதை காணலாம். சந்திரனுக்கும், மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

 ஒரு ஜாதகத்தில் சந்திரன் நீசம்  என்ற வகையில் பலம் இழந்து காணப்பட்டாலும், அவர்களுடன் சனி, ராகு போன்ற  பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும் அவர்கள் மனநிலையில் சற்று குழப்பம் உடையவர்களாகவும், தான் கொண்ட கொள்கையில் உறுதித்தன்மை அற்றவராக   இருப்பார்.

 சந்திரன் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெற்று இருக்கும்பொழுது உறுதியான மனநிலை உடையவர்களாக எவ்வித மனக்குழப்பம் அற்றவராக திகழ்வார்கள். இவர்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவாகவும் அமையும்.

சாமரை யோகம்

 சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் சுபகிரகங்கள் அமர்ந்தால் "சாமரை யோகம் "ஆகும்.

குரு-சந்திர யோகம்

 "கேளப்பா குமரனுக்கு குருச்சந்திர பலனைக்கேளு
 சீரப்பா செம்பொன்னும் மனையும் கிட்டும் ஜெனித்ததொரு மனை தனிலே தெய்வம் காக்கும் கூறப்பா கோதையரால் பொருளுஞ் சேரும்
 குவலயத்தில் போர் விளங்கும் கடாட்ஷம் உள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தோனானால் அப்பனை அறையாதே
இப்புவியில் உள்ளோர்க்கு"

 சந்திர பகவான் குருவுடன் இணைந்து காணப்பட்டால் "குருச்சந்திர யோகம்"ஆகும். இணைந்திருக்கும் கிரகம் இரு கிரகங்களில் ஒரு கிரகம் பலம் இழக்க கூடாது.குரு-சந்திரன் இணைந்து இருக்கும் பாவ நாதன் மறையகூடாது.

கஜகேசரி யோகம்

சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு கேந்திரங்களில் குரு பகவான் அமர்ந்திருந்தாலும்(4,7,10) சந்திரனுடன் குரு இணைந்திருந்தாலும் மற்றும் சந்திரனை குரு பார்த்தாலும் "கஜகேசரி யோகமாகும் "
கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம் ஆகும்.

 ஆயிரம் யானை வந்தாலும் ஒரு சிங்கம் எதிர்கொண்டு அத்தனையையும் 
வீழ்த்துவது போல தனி ஒரு நபராக இருந்து எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும்.

சசி மங்கள யோகம்

சந்திரபகவான் உடன் செவ்வாய் பகவான் இணைந்து இருப்பது
" சசிமங்கள யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவித யோகம் என்றாலும் மனநிலை காரகன் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது மன அடிப்படையில் போராட்டங்களும், பிரச்சினைகளும் இருந்து கொண்டே இருக்கும்.

சுனபா யோகம் மற்றும் அனபா யோகம்

சுனபா யோகம்

 "இந்துவுக்(கு) இரண்டாம்    வீட்டில் 
இனிய கோள் இருந்த காலை 
முந்திய சுனபா யோகம் இதன்பலன் மொழியும் காலை 
சந்ததம் தனவான் ராஜ சன்மானன் புத்தி யுள்ளான்
 சுந்தர புவிகள் எங்கும் 
துதித்திடும் கீர்த்தி மாறாய் "
 -சாதக அலங்காரம் (298)

  சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாமிடத்தில் சூரியனைத் தவிர குரு, சுக்கிரன் ,புதன் ,செவ்வாய் சனி ஆகிய பஞ்ச மகா புருஷ கிரகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் சுனபா யோகம் ஏற்படும் ‌. 

 சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் சூரியனைத் தவிர குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் ,சனி ஆகிய பஞ்ச மகா புருஷ கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களோ  நின்றால் அனபா யோகம் எனப்படும்.

அதியோகம்

 "சோமனுக்(கு) ஆறேழ் எட்டில்
சுபக்கிர கங்கள் நின்றால்
பூமலி  அதிக யோகம்
இதன்பலன் புகலுங் காலை
நேமியான் சவுரி யங்கள்
நிறைசீவன் பலமு முள்ளான்
தீமையாம் பகையை வெல்லும் 
சேனாதி பதியு மாவான் !"

 சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் வரிசையாக சுபக்கிரகங்கள் நின்றிருந்தால் அதியோகம் என அழைக்கப்படுகிறது.

அதியோகத்தில் பிறந்தவன் திருமாலைப் போல் அழகு ,ஆற்றல், அறிவு ,ஐஸ்வரியம் 
ஆகியவற்றையும் பெற்றுள்ள ஜீவாத்மா ஆவான். மிகவும் கொடிய விரோதிகளை வெற்றி கொள்ளும் தளபதியுமாக இருப்பான்

 சகடையோகம்

சந்திரனுக்கு ஆறு ,ஏழு எட்டில் குரு பகவான் அமையப் பெற்றாலோ அல்லது குருபகவானுக்கு ஆறு ஏழு எட்டில் சந்திரபகவான் அமைந்தாலும் "சகடை யோகம்" என்று அழைக்கப்படுகிறது.

"அகடின் மன்னனுக்(கு) ஆறேட் டொடுவியத்(து)
இகடி லாமதிஎய்தி இருந்திடின் சகட யோகம் இதில்பிறந் தார்க்கெலாம்
விகட துன்பம் விளையும் அரிட்டமே"
  -சாதக அலங்காரம்

"யாருடா தம்பி கேளாய் ஆசானுக்கு ஈராறு எட்டில் நிலவு நிற்க பயனில்லா சகடயோகம்
 கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார் பெற்றோர் வேறடா வெறுப்பார்
துன்பம் வேறூன்றும்
 வாழ்நாளெல்லாம்"
_ -- ஜோதிட சிந்தாமணி

சகடை யோகம் பெற்றவன் வாழ்வு ஒரே சீராக இருக்காது. வண்டிச்சக்கரமானது எவ்வாறு கீழும், மேலும் நகர்ந்து செல்கிறதோ அதே போல அவனது வாழ்க்கை தரமும் ஒரு நேரத்திற்கு  கீழ்நோக்கி மற்றொரு நேரத்தில் மேல்நோக்கியுமாக இருக்கும்.

  தொடரும்

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647

   செல்
   9715189647
   7402570899

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My blogspot
AstroRavichandran .blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com

My email
masterastroravi@gmail.com

                           

கேது பகவான்

                கேது பகவான்

                           

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார் .இவர் சக உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற  நிலையெல்லாம் மீறி ஓரறிவு படைத்த புல் , பூண்டு வாடினாலும் தன் மனம் வாடுவதாக குறிப்பிடுகிறார்.

      இப்பிரபஞ்சத்தில் "எவ்வுயிரையும் தம் உயிராய் நேசிக்கும் ஞானிகள், மகா தபஷிகள்,
தவப்புருஷர்கள்  மற்றும் சித்தர்கள் போன்றவர்களை உருவாக்கக்கூடிய பங்கு நவகிரகங்களில்  நிழல் கிரகமான செந்நிற பாம்பு மற்றும் ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவானே முதல் முக்கிய காரணமாகும். 

  கேது பகவானுடைய அருளாசி கிடைக்க அவரது ஜாதகத்தில் குரு பகவான் ஒத்துழைப்பு அவசியம் ஆகும்.

   பலமடைந்த கேது பகவானை  குருபகவான் பார்ப்பதால் அல்லது சேர்ந்திருக்கும் தன்மையால் பலன்கள் பல மடங்காக இயலும்.

     கையைப் பிடித்துப் பார்த்து வைத்தியம் சொல்லும் வைத்தியரையும்,
 முகம் பார்த்து மன ஓட்டத்தை கணிக்கும் நபர்களையும் உருவாக்கித் தருவது கேது பகவானின் அருளாசி ஆகும்.

  கேது பகவான் அருளாசி உடையவர்கள் மட்டுமே  மிக அரிதான மூலிகை தாவரங்களை  ஞானக் கண்களால் கண்டறியமுடியும்.

 இது போன்ற அரிய மூலிகைகளிடம்  இருந்து ஒரு சில இலைகளை பறித்து வைத்தியம் பார்ப்பதற்கு அந்த மூலிகை தாவரங்களிடம் அனுமதி பெற்றே பறிப்பவர்கள் உள்ளார்கள்.

 அதாவது மூலிகை இலையையோ அல்லது அதன் கிளை போன்ற பகுதியையோ அல்லது வேரினையோ  பறிப்பதற்கு முதல்நாள் விரதமாக இருந்து அந்த மூலிகை செடிக்கு முன்பு அமர்ந்து உலக நன்மைக்காக ஒரு நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக உன்னிடமிருந்து ஒரு சில பகுதியை சிதைக்க வேண்டியதாக உள்ளது.

   இவ்வாறு சிதைக்கப்பட்ட உமது பகுதியானது அவருடைய நோயை குணப்படுத்த வேண்டும் என வேண்டி பிறகு மறுநாள் காலையில் பறித்துதான் வைத்தியம் பார்ப்பார்கள்.

 இதுபோன்ற ஞான வைத்தியர்கள் நமது தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர்.  போகரின் சீடரான புலிப்பாணி கூட "புலிப்பாணி சோதிடம் 300" என்ற நூலை போல வைத்தியத்திற்கும் "புலிப்பாணி 500" எனும் வைத்திய நூலை எழுதியுள்ளார்.

இதுபோன்ற ஞானப் புருஷர்களை உருவாக்கக்கூடிய தன்மை கேது பகவானுக்கு மட்டுமே உரியது.

 முன்னுணர்வு(intution) தன்மையை அளிக்கக் கூடியவர் கேது பகவான் ஒருவரே ஆவார்.எனவே அருள் வாக்கு சோதிடர்களை உருவாக்குகிறார்.

 கேது பகவான் ஒருவரது சாதகத்தில் பலமடைந்து நின்றால் நன்மைகள் பல தரக்கூடியவராக உள்ளார். ஒருவர் பிரபஞ்ச ரகசியங்களையும் மற்றும் சூட்சும உண்மைகளையும் வெளிப்படுத்த கூடிய தன்மை கேது பகவானுக்கு உண்டு.

 மனிதனாக பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை (Seventh sense)  தரக்கூடியவர் கேது பகவானே ஆகும்.ஏழுலக இரகசியங்களை அறிந்து கொள்ள கேது பகவான் காரண கர்த்தாவாக உள்ளார்.

  மரம்,செடி,கொடிகளுடன் பேசக்கூடியவராக இருப்பர்.பஞ்சபூத தத்துவங்களை அறியவும்,வேத விசாரணை செய்யவும் வைக்கிறது.இரசவாத வித்தைகளை தெரிந்து கொள்ளவும்,புதியன படைக்கும் எழுத்தாளராகவும் திகழச்செய்கிறது.

 ஜோதிட சாஸ்திரத்தில் கேது பகவானுக்கு "மாற்றங்களை தரக்கூடியவர்" என்ற புனைப்பெயரும் உண்டு. அவருடைய திசை, புத்தி மற்றும் அந்தரங்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது போல நல்ல செய்தி தருவதும் ,அதே தசை, புத்தி மற்றும் அந்தரங்களில் ஒருவருக்கு வேலையை பறிகொடுப்பதும் இது எதிர்பாராத ஏற்றம் மற்றும் இறக்கங்களை தர வல்லவர்.நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் இவருடைய தசை, புத்தி அந்தரங்களில் தரக்கூடியவர் ஆதலால் இவள் மாற்றங்களை தரக்கூடியவர் என அழைக்கப்படுகிறார்.

 எதிர்பாராத பயணங்கள் இவருடைய திசை, புக்தி மற்றும் அந்தரங்களில் நடைபெறும். ஒரு சிலர் எதிர்பாராத விதமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்

சர ராசிகளான மேஷம் கடகம் துலாம் மற்றும் மகரம் போன்ற ராசிகளில் கேது பகவான் அமர்ந்து 8 மற்றும் 12ஆம் இடம் தொடர்பு பெரும்பொழுது அதன் தசை புத்தி காலங்களில் வெளிநாடு செல்ல வைப்பார்.

  தான் இருக்கும் இடத்தை ராகு பகவானைப் போல கேது பகவான் கெடுப்பவர் இல்லை.எனவேதான் "ராகுவைப்போல கெடுப்பார் இல்லை,கேதுவைப்போல கொடுப்பவர் இல்லை"-எனலாம்.

 திருமண ஸ்தானமான 1,2,7,8 போன்ற இடங்களில் கேது பகவான் அமர்ந்தால் ராகு பகவானைபோல கெடுபலன் அதிகம் தருவதில்லை. 

   இதேபோல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமரும் போது ராகு பகவான் அளவிற்கு புத்திர தோஷத்தை தருவதில்லை.

 கடகம்,  தனுசு ,மீனம் மேஷம் மற்றும் விருச்சிகம் லக்கனங்களுக்கு கேது பகவான் சுப சூட்சும வலுவுடன் சுபர்களின் தொடர்பு பெற்று நிற்கும் நிலையில் நல்ல பலன்களை தருவார்.

 குரு பகவான் உடன் இணைந்த கேதுபகவான் கேளா யோகத்ததை தருகிறது. கேது பகவானை குருபகவான் மற்றும் சனி பகவான் பார்த்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் சாதகரை ஆன்ம ஞானப் பாதையில் செயல்பட வைக்கிறது.

  கேது பகவான் 1,2,5,9,10 மற்றும் 12 உடன் இடம்பெற்ற குரு மற்றும் சனி பகவான் தொடர்பு பெற்ற நிலையில் சாதகரை ஆன்மீக பாதையில் இட்டுச் செல்கிறது.

 கேது பகவான் பற்றிய அடிப்படை தகவல்கள்

காரக அம்சம் ; ஞான காரகன்

தேவதை: இந்திரன்

பிடித்த தானியம் ; கொள்ளு

உலோகம் ; துருக்கல்

பிடித்த நிறம் ; சிவப்பு (செந்நிறம்)

குணம்: தாமஸ்

பிடித்த சுவை ; புளிப்பு

திக்கு : வடமேற்கு

உடல் அம்சம் ; உள்ளங்கால்

நோய் ; பித்தம்

பாலினம் ; அலி

உப கிரகம்: தூம கேது

விரும்பும் சமித்து : தர்ப்பை

உரிய ரத்னம்: வைடூரியம்

அதிதேவதை : விநாயகர், சரஸ்வதி, பிரம்மா,சித்ர குப்தர்

மனைவி பெயர் ; சித்ரலேகா

காலம் : எம கண்டம்

பஞ்ச பூதம் ; நீர்

பாலினம் ;. அலி

உகந்த கிழமை ; சனி கிழமை

நட்சத்திரம் : அசுபதி , மகம், மூலம்

திசை இருப்பு ; 7 வருடங்கள்

நட்பு ராசி: மிதுனம், கன்னி, துலாம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்.

சம ராசி ; இல்லை

நீச ராசி: ரிஷபம்

உச்சம் ராசி: விருச்சிகம்

பகை ராசி; மேஷம்,கடகம் மற்றும் சிம்மம்

நட்பு கிரகம்; சுக்கிரன், சனி

சமம் ; புதன், குரு

பகை கிரகம் ; சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்

 ராகுவுக்கு ஏழாம் இடத்தில் அதாவது 180 பாகை வித்தியாசத்தில் கேது பகவான் ஒரு ராசியில் பதினெட்டு மாதங்கள் வாசம் செய்கிறார்.

 பன்னிரெண்டு ராசிகளை கடக்க பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.

பாம்பு தலையும்,  மனித உடலும் கொண்டது.

ஆட்சி வீடு கிடையாது.கேது இடம் பெறும் வீட்டினையே சொந்த வீடாக எண்ணி வாசம் செய்யும்.மூல திரிகோணம் கிடையாது.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

  செல்
   9715189647
    7402570899

  அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
       M.Sc,M.A,BEd
(ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

                           
                  

   சனி பகவான் தரும் கோச்சார பலன்கள்


(2020 இல் சனிப்பெயர்ச்சி வாக்கியப்படி 26 டிசம்பர் 2020
திருக்கணிதப்படி 24 ஜனவரி 2020)

செவ்வாய்ப்பட்டி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
                         


  கோச்சார அடிப்படையிலான கிரக பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சி என்பது மிக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சியாக கருதப்படுகிறது.

   ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகம் எது ? என பார்த்தால் சனிபகவானே முதலிடம் பெறுகிறது.

  ஒரு ராசியில்  இரண்டரை ஆண்டுகள் தங்கி வாசம் செய்யும் கிரகம் சனி பகவான் ஒருவர் மட்டுமேயாகும்.

  ஒரு ராசியில் சந்திரனுக்கு அதாவது ராசிக்கு நான்காம் இடத்தில் சனிபகவான் வருங்காலம் அர்த்தாஷ்டமச் சனி என்று அழைக்கப்படுகிறது.

அர்த்தாஷ்டமச் சனி

   ராசிக்கு 4-ஆம் இடம் என்பது சுகஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம், வீட்டில் சுகம், மற்றும் களவியல் சுகம் போன்றவற்றைக் குறிக்கும் ஸ்தானம் என்பதால் இந்த இடங்களில் சனி பகவான் அமரும் காலங்களில் மேற்கண்ட வகையான பாதிப்புகளை சாவதற்கு தர வாய்ப்புண்டு.

கண்டச்சனி

ஒரு ராசியில் சந்திரனுக்கு ஏழாமிடத்தில் சனிபகவான் வரும் காலம் கண்டச்சனி என்றழைக்கப்படுகிறது.

  பொதுவாக கண்டச்சனி யானது ஒருவருக்கு தண்டச் செலவுகளை தரும் என்பது ஒரு சொல்லோடை ஆகும்.

 ராசிக்கு ஏழாம் இடம் என்பது தனது வாழ்க்கைத் துணையையும், நட்பு நிலையையும், தனது வாழ்க்கைத் துணையோடு  அனுபவிக்கக்கூடிய இன்ப சுகத்தையும் ஆராய்ந்து அறியக்கூடிய பாவம் ஆகும்.

 எனவே ஏழாம் இடத்தில் சனி இருக்கும் காலங்கள் இந்த வகையில் தேவையில்லா செலவுகள் தரக் கூடிய வாய்ப்பு உண்டு .

   ஏழரைச் சனி

  ஒரு ஜாதகத்தில் ராசிக்கு அதாவது சந்திரன் இருக்கும் இடத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் சனி பகவான் தேர்ச்சி அடைந்தால் அப்பொழுது அந்த ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது என்று அர்த்தம்  ஆகும்.

  ராசிக்கு 12-ஆம் இடம் "விரய ஸ்தானம்" என்பதால் அந்த இடத்தில் அவரும் சனியை "விரயச்சனி "என்று அழைக்கிறோம்.

   இக்காலங்களில் ஜாதகருக்கு தேவையில்லாத வீண், விரயச் செலவுகளை தரக் கூடிய வாய்ப்பு உண்டு. இந்த வீண் விரயச் செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ள ஒருசிலர் வீடு கட்டுதல், பெண்ணிற்கு திருமணம் செய்தல் .. போன்ற சுப விஷயங்களில் ஈடுபட்டு சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம்.

 பிறகு ராசியிலேயே அதாவது சந்திரன் இருக்கும் வீட்டிலேயே சனி பகவான் இடம்பெயர்ந்து வந்த அமர்வதை "ஜென்மச்சனி" என்றழைக்கிறோம் .

ஒரு ஜாதகரை வழிநடத்தக்கூடிய கேப்டனாக விளங்க கூடியவர் உயிர் என்றழைக்கப்படும் லக்கனமும், உடல் என்று அழைக்கப்படும் ராசியுமே ஆகும்.

  இந்த மதி என்றழைக்கப்படும் ராசியில் சனிபகவான் வரும்பொழுது இது ஜாதகரை தேவையில்லாமல் குழப்பங்களைத் தந்து சாதகர் சார்ந்த விஷயங்களில் மனக் குழப்பங்களைத் தந்து விளைவிக்கும். 

 சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாமிடத்தில் சனிபகவான் வரும் காலம் "பாதச் சனி" என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாம் இடம் தனம், வாக்கு ,கல்வி ,குடும்பம் மற்றும் நேத்திரம் போன்ற விஷயங்களை குறிக்கும் இரண்டாம் இடத்திற்கு வரும் பொழுது இது சார்ந்த விஷயங்களில் ஒரு சில கஷ்டங்களை தர வாய்ப்புண்டு.

 ஒரு மனிதனுக்கு ஏழரைச்சனி யானது மூன்று முறை சுற்றி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

   ஒருவர் பிறந்தவுடன் முதன்முதலாக வரக்கூடிய ஏழரைச் சனியை 
"மங்கு சனி "என்றும், இரண்டாவது சுற்று வரக்கூடிய ஏழரைச் சனியை "பொங்கு சனி" என்றும்,
 மூன்றாவது சுற்று வரக்கூடிய ஏழரைச் சனியை "மங்கு சனி" என்றும் அழைக்கிறோம்.

 ஒருவருக்கு ஏழரைச்சனி வந்தால் அதற்காக பயப்படத் தேவையில்லை. ஏழரைச் சனி என்பது ஏழழரை ஆண்டுகளும் ஒருவருக்கு துன்பங்களையே தந்து விடுவதில்லை.

  ஒருசிலருக்கு ஏழரைச் சனி காலங்களில் தான் வாழ்வின் உயர்ந்த நிலையை நோக்கி இட்டுச் சென்றுள்ளது .

 ஏழரைச்சனியானது முதல் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே கஷ்டங்களை தந்து பிறகு அடுத்த மூன்றரை ஆண்டுகள் அந்த கஷ்ட அனுபவத்தினை வாழ்க்கையில் பயன்படுத்தி முன்னேற வழிவகுக்கும்.

 பொதுவாக ஏழரை சனி போன்ற கோச்சார காலங்களில் ஒருவருக்கு நல்ல திசை அமைப்பு இருந்தால் ஏழரைச்சனி தரக்கூடிய கஷ்டங்களை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  கோச்சார காலங்களில் ஏழரைச் சனியும் நடைபெறும் திசையும் உகந்ததாக அமையாத பட்சத்தில் மட்டுமே ஏழரைச்சனி மிகுந்த கஷ்டங்களை தருவதற்கு வாய்ப்பு உண்டு.

 ஏழரைச்சனியானது  சனிக்கு பகை கிரகமான செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சூரியனுடைய வீடுகளான சிம்மம் இதுபோன்ற ராசிகளுக்கு அதிக கஷ்டங்களை தருவதை நான் அனுபவப்பூர்வமாக பார்த்துள்ளேன்.

  இதேபோல ஏழரைச் சனி நடைபெறும் காலங்களில் சந்திர தசை, ராகு தசை நடப்பில் இருப்பின் ஜாதகர் மிகுந்த இன்னல்களை அனுபவிக்க நேரிடலாம்.

 அஷ்டம சனி

  சந்திரன் இருக்கும் இடத்திற்கு எட்டாம் இடத்தில் சனி வரும் காலம் அஷ்டமச் சனி என்று அழைக்கப்படுகிறது அஷ்டமச்சனி காலத்தில் ஆடு, மாடு விரயம், விவசாயத்தில் நஷ்டம் , கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை,சிறை செல்லல் மற்றும் ஆயுள் பங்கம் போன்றவை தரலாம்.

 சனி பகவானின் வேறு பெயர்கள்
 மந்தன், மகேசன்,ரவிபுத்ரன்,
நொண்டி, முடவன்,ஜடாதரன் மற்றும் ஆயுள் காரகன்.

 சனி பகவானுக்கு நட்பு கிரகங்கள்
   புதன், சுக்கிரன், ராகு மற்றும் கேது
சமம்-குரு
பகை கிரகம்-சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்

    சனிபகவான் ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகமாகும்.

   வாகனம்: காக்கை,எருமை
பாஷை: அந்நிய பாஷை
உலோகம்: இரும்பு
வஸ்திரம் ; கருப்பு
நிறம்: கருமை
திசை: மேற்கு
தேவதை : எமன்,சாஸ்தா
சமித்து : வண்டி
தானியம்; எள்
புஷ்பம்: கருங்குவளை
சுவை: கசப்பு

  சனி பகவான் சூரியன் பகவானின் மைந்தன் ஆவார்.பொதுவாக தந்தை மகனுக்கும் இடையே ஒற்றுமை இருக்கும் ஆனால் சூரியனும் சனியும்  ஜென்ம பகைவர்கள்ஆவார்.

 பூசம்,அனுஷம், உத்திரட்டாதி சனிபகவான் நட்சத்திரம்

சனி திசை 19 ஆண்டுகள்.

 சனி பன்னிரண்டு ராசிகளையும் ஒருமுறை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது.

 சனிபகவான் ஸ்தோத்திர பிரியர் ஆவார்.சனி பகவான் தரும் இன்னல்களில் இருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து  சனிபகவான் சந்நிதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி,எள் அன்னம் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

சனி கவசம்,சனி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து மனமுருக சொல்லலாம்.

  ஏழைகளுக்கு அல்லது பிராமணர்களுக்கு எள் அன்னம் , கருப்பு வஸ்திரம் தானம் செய்யலாம்.

 சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட்டாமல் பக்கவாட்டில் நின்று வழிபடலாம்.

  திருநாளன்று சென்று நளதீர்தத்தில் நீராடி மேற்கண்டவாறு வழிபடலாம்.இங்கு உள்ள தர்பணேஷ்வரர்,அம்பாள் மற்றும் சனிபகவானை மும் வழிபடலாம்.

  சனி தோஷம் போக்க காக்கைக்கு தினந்தோறும் அன்னம் வைத்தல்,உளுந்து  தானியத்தை தானம் செய்வது, கோவில்களில் நவகிரகங்களை 9 முறை சுற்றி வருதல், நீலக்கல் மோதிரம் அணிதல் போன்ற வகைகளில் ஏழரைச்சனி தோஷத்தை போக்கலாம்.

 சனிக்கிழமை அதிகாலை எழுந்து சுந்தர காண்டம் பாராயணம் செய்தல்.

  சனி பகவான் தரும் அதிக இன்னல்களில் இருந்து விடுபட கருப்பு தோல் நீக்காத முழு உளுந்தினை தலையாணைக்கு அடியில் வைத்து படுத்திருந்து, மறுநாள் காலை நதியில் நீராடி சனிபகவானை 108 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம்ம் வந்தவுடன் ஒரு கருப்பு முழு உளுந்தை இடவேண்டும். சனி தோஷம் போக்க முழு உளுந்து தானம் செய்தல் சிறந்தது ஆகும்.

 சனி பகவான் கேந்திர ஸ்தானமான 1 4 7 10 இடங்களில் உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெற்று இருக்கும்பொழுது சச யோகத்தை ஜாதகருக்கு தருகிறது.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

    செல்
 9715189647
  7402570899

                    



   அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
      M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
 கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com

My blogspot
 WWW.AstroRavichandran.blogspot.com

WWW.AstroRavichandransevvai.blogspot.com
....................................