சொகுசு வாழ்க்கையை தருவதில் சுக்கிரனின் பங்கு .
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதக கட்டத்தில் சுக்கிர பகவானை பலமாக பெற்றவர்கள் ஆடம்பரப் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கும் யோகம் பெற்றவர்களாகவும் ,ஆடம்பர வாழ்வினை மேற்கொள்பவர் களாகவும் இருப்பார்கள். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உயர்வான அந்தஸ்து பெற்றவர்களாக திகழ்வார்கள். ஆனால் மனதளவில் திருப்தியற்றவர்களாக இருப்பார்கள்.
மாளவ்யா யோகம்
பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்யா யோகமானது சுக்கிர பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர ஸ்தானமான 1,4,7 ,10-ஆம் இடங்களில் நிற்க சாதகருக்கு மாளவ்யா யோகத்தை வழங்குகிறது
* சுக்கிர பகவான் கலைக்காரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் சுக்கிரன் பலம் பெற்று நின்று அவை தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று அந்தத் திசை நடப்பில் உள்ள காலங்களில் (அதாவது சுக்கிர தசை அல்லது சுக்கிர புத்தி அல்லது பத்தாம் அதிபதி திசை)
" கனவு தொழிற்சாலை" என அழைக்கப்படும் சினிமா, தொலைக்காட்சி, போன்றவற்றில் நடிப்பு நடனம் தொகுப்பாளினி(ளர்) மற்றும் சினிமா சார்ந்த ஏதாவது தொழிலில் பணம் சம்பாதித்து புகழ் என்னும் உச்சி வானில் கொடி கட்டி பறப்பார்.
* சுக்கிர பகவானை பலமாக பெற்றவர்கள் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், மற்றவர்களை அழகுபடுத்துவதிலும் சிறந்தந்த ரசனை உடையவர்களாக இருப்பார்கள். எனவே முக அலங்காரம், சிகை அலங்காரம், மெஹந்தி போடுதல், மற்றும் உடை அலங்காரம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள் .மேற்கண்ட வகையிலான தொழிலை உண்டாக்கி பணம் ஈட்டுவார்கள். சினிமாவில் சிறந்த மேக்கப் மேன் அல்லது உமன் ஆக திகழ்வார்கள்.
* பலமடைந்த சுக்கிர பகவானை தனது ஜாதகத்தில் கொண்டவர்கள் மார்க்கெட்டுக்கு வரும் எந்த ஒரு புதிய மாடல்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதிலும் அதனை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதிலும் மற்றும் அவற்றினை வாங்கிச் சேர்ப்பதிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எனவே இது போன்றவர்கள் புதிய மாடலை அறிமுகம் செய்யும் நபராக மாறி யூடியூப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றில்
நிறைய பொருள் ஈட்டுவார்கள்.
* நுண்ணிய கைவேலைப்பாடுகளான கூடை முடைதல், பாய் பின்னுதல், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய எம்பிராய்டிங், வண்ணவண்ண கை வேலைப்பாட்டுடன் கூடிய பூங்கொத்துகள் போன்றவற்றில் சிறந்து விளங்க கூடிய தன்மை ஜாதகத்தில் பலம் அடைந்த சுக்கிரனால் ஏற்பட்டு இதன்மூலம் பொருளீட்டி சொகுசு வாழ்க்கையை அடைவார்.
* நுண்கலைகளான சிற்பம் வடித்தல், சிலை செய்தல், ஓவியம் வரைதல் , திரைச்சீலைகள் மற்றும் சிலைகளைக் கொண்டு வீடு மற்றும் மேடைகளை அலங்கரித்தல் போன்றவை சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவார்கள். இவை மட்டுமில்லாமல் சினிமாவில் புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர்களாகவும் சிறந்து விளங்குவார்கள்.
* சுக்கிரபகவான் நடன மற்றும் நாட்டிய காரகர் என்பதால் ஒருவர் பரத நாட்டிய கலைஞராகவும், சினிமாவில் நடன கலைஞர்களாகவும் சிறந்து விளங்கி பொருளீட்டி சொகுசு வாழ்க்கையை வாழ்வார்.
* சுக்கிரபகவான் வாகன காரகர் ஆவார். ஆதலால் சுக்கிரன் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து சுபத்துவமான நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சுய சாரம் மற்றும் இயற்கை சுப கிரகங்கள் தொடர்புபட்டு நிற்க பல வாகனங்களுக்கு முதலாளியாக திகழ்வார். பேருந்து இயக்கும் முதலாளியாகவும் மற்றும் லாரி வைத்து தொழில் நடத்தும் முதலாளி, ட்ராவல் ஏஜென்சி வைத்து நடத்துபவராக இருப்பார்.
* மாறாக சுக்கிரபகவான் பலமடைந்து பாவத்துவ அமைப்பு பெற்ற நிலையில் வாகனங்களை ஓட்டும் டிரைவராகவும் மற்றும் அந்த வாகனங்களை சரிபார்க்கும் மெக்கானிக்கராகவும் விளங்குவார்.
* சுக்கிர பகவானை சுபத்துவமான நிலையில் பெற்றவர்கள் விதவிதமாக சாப்பிடும் ஆர்வம் உள்ளவர்களாகவும், உணவகங்களை நடத்தும் முதலாளியாகவும் திகழ வைப்பார்.
* மாறாக சுக்கிரன் பாவ தொடர்பு பெற்று அதன் வலிமை நிலையின் அடிப்படையில் குறைவான பலம் பெற்று திகழும்போது உணவகங்களில் வேலை பார்க்கும் நபராகவும் மற்றும் சமையல் கலை, வல்லுநராகவும் விளங்குவார்.
* சுக்கிர பகவான் ஆபரணகாரகன் என்பதால் பலமாக சுக்கிர பகவானை பெற்றவர்கள் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றை விற்பனை செய்யும் ஜூவல்லரி நகை கடை நடத்தும் முதலாளியாக புகழ்பெற்று விளங்குவார்கள்.
* வளையல், பொட்டு பாசிகள் போன்றவற்றில் விதவிதமாக அணியும் ஆசை உடையவர்களாகவும் ,
ஒரே மேட்சிங்காக தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். இது போன்ற ஆசை கொண்ட நபர்கள் பேன்சி ஸ்டோர் ஜவுளி கடை வைத்து நடத்தும் முதலாளிகளாகவும் திகழ்வார்கள்.
* சுக்கிர பகவான் களத்திர காரகன் என்பதால் ஒருவருக்கு விரும்பும் வகையில் நல்ல மணவாழ்க்கை அமைய சுக்கிர பகவானின் அருளாசி தேவைப்படுகிறது. பலமான சுக்கிரனை பெற்றவர்கள் மனைவி வழியில் சொகுசு வாழ்க்கையினை பெறுவார்கள்.
* சுக்கிர பகவான் கொடுக்கல்- வாங்கல் செய்வதற்கு உரியவர் என்பதால் பைனான்ஸ், வட்டிக்கடை மற்றும் சிட்பண்ட்ஸ் வைத்து நடத்தும் முதலாளிகளாகவும் திகழ்வார்கள்.
* சுக்கிர பகவானை பலமான அமைப்பு பெற்றவர்கள் இனையத்தை அதிகம் பயன்படுத்தும் நபராகவும், கணினியை இயக்கும் அறிவு பெற்றவராகவும் திகழ்வார்கள். ஆன்லைன் வர்த்தகர்களாகவும், சமூக ஊடங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் விளங்குவார்கள்.
* சுக்கிரபகவான் ஆனவர் சாதக கட்டத்தில்
காமகாரகன் செவ்வாய் பகவான் மற்றும் பாவிகளான சனி, ராகு போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது இளைஞர்களிடம் காதல் மற்றும் கற்பனை உணர்வுகளை நிரம்பப் பெற்று காதல் கடி மணம் புரிபவர்களாகவும்,
மாறுபட்ட காம எண்ணத்தால் சிலரை தடம் மாறி செல்பவர்களாகவும் கிரக பலன்களால் மாற்றம் அடைகிறது.
* சாதக கட்டத்தில் சுக்கிர பகவான் நான்காம் இடமும் மற்றும் அதன் அதிபதியும் பலம் பெற்று திகழ ஆடம்பரமான பங்களா போன்ற வீடுகளை கட்டி அழகு பார்ப்பார்களாக விளங்குவார்.
* வீடுகளில் திரைச்சீலைகள், கம்பளங்கள், கலை நுணுக்கம் உடைய படங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை அழகாகவும் மற்றும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தவர்களாக திகழ்வதற்கு சுக்கிர பகவானே காரணமாகும்.
இவ்வாறாக மானிட குலத்திற்கு சொகுசு வாழ்க்கையை தருவதில் நவக்கிரங்களில் சுக்கிர பகவானே முழுமுதல் காரகர் ஆவார்.
நன்றி.
("ஜோதிட அரசு"- ஜனவரி-2020- மாத இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை ஆகும்.)
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(Teacher & Astrologer)
Omsakthi online astro consulting centre,
Karambakkudi,Pudukkottai District.
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
No comments:
Post a Comment