Tuesday, 16 November 2021

நோய் வரும் காலம் பற்றி ஜோதிட விரல் கருத்து என்ன?

                           


நோய் வரும் காலம் பற்றி அறிய சோதிடவியல் தரும் கருத்து என்ன? 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவரது ஜாதகத்தில் நோய் பற்றி தெரிந்து கொள்ள ருண , ரோக ஸ்தானமான ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதி பற்றி ஆய்வு செய்து பார்க்கப்படவேண்டும்.


   ஜாதகத்தில் ஆறாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் வலுப்பெற கூடாது. அவ்வாறு வலுப்பெற்று அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகருக்கு அந்த கிரகம் சார்ந்த மற்றும் அந்த கிரகம் இடம்பெற்ற வீடு  தொடர்புடைய உடல் உறுப்புகளில் நோய்  உண்டாகும்.


  ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறாம் இட அதிபதி வலுப்பெற்றுள்ள நிலையில் அந்த தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த நோய் பாதிப்பிற்கு ஜாதகர் உள்ளாகுவார்.


  ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடமும் அதன் அதிபதியும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு வலுப்பெற கூடாது. அவ்வாறு வலுவடைந்த  நிலையில் அதன் தசை காலங்களில் சாதகற்கு பிணி ,கடன்,சத்ரு போன்றவற்றால் பாதிப்பை தரும்.


  ரிஷபம் ,விருச்சிகம் லக்னங்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர் லக்னாதிபதியாகவும் மற்றும் ஆறாம் இட அதிபதியாகவும்  வருவதால் அதன் தசை காலங்களில் பெரும் நோய் பாதிப்பை தந்து விடுவதில்லை. அதிலும் குறிப்பாக இலக்கனத்தில் அமரும்பொழுது முழுவதும் லக்கனாதிபதியாகவே அதிகம் செயல்படுவார். ஆறாமிட பாதிப்பை அதிகமாக தருவதில்லை. மாறாக ஆறாமிடத்தில் நின்று ஆட்சி பெறும் பொழுது அவை இலக்கனாதிபதி பலனை விட அதிகமான ஆறாம் இட பாதிப்பான நோய், கடன் ,சத்ரு தொல்லைகளையே அதிகமாக ஜாதகருக்கு தருவார்.


  கும்ப லக்கினத்திற்கு ஆறாமிட அதிபதியாக வரும் சந்திரனுக்கு வேறு எந்த ஸ்தான ஆதிபத்தியம் கிடையாது. எனவே கும்ப லக்னத்திற்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடிய சந்திரதசை வந்து அதுவும் கடகத்திலே நின்று ஆட்சி பெற்ற நிலையில் தேய்பிறை சந்திரனாக இருக்கக் கூடிய நிலையில் அதிகமான பாதிப்பை சாதகருக்கு தருவார்.


 கும்ப லக்கினத்திற்கு சந்திரன் அதிக வலு பெறக்கூடாது என்று கூறினாலும் அதே நேரத்தில் சந்திரன் பலவீனம் அடைந்த நிலையில் சந்திரனுக்கு காரகனான தாய் மற்றும் மனநிலை போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்கும்.


  மீன லக்கினத்திற்கு ஆறுக்குடையவர்  சூரிய பகவான் ஆறாமிடத்தில் நின்று ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் அதிகமான நோய் பாதிப்புகளை சாதகற்கு தருவார் அதிலும் சூரியனுக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள்  உண்டாகும்.


  ஆறாம் இட அதிபதியான சூரியன் நீசம் போன்ற பலவீனமான நிலையில் இருப்பின் நோய் பாதிப்புகளை தராவிட்டாலும்,

ஜாதகரது தந்தை, அரசு வேலை கிடைப்பதில தாமதம் ,ஆளுமை தன்மை போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்குவார் .


 பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதி பலவீனம் அடைந்தால் நோய் பாதிப்பில் இருந்து ஜாதகர் தப்பித்தாலும், வேறு வகையில் பாதிப்படைவார்கள். அதாவது ஒருவர் மேற்கொண்ட தொழிலில் வெற்றி அடைய ஆறாமிட அதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும். ஆதலால் ஆறாமிட அதிபதி பலம் இழக்கும் போது தான் மேற்கொண்ட தொழிலில் வெற்றியடைய கூடிய நிலையில் பாதிப்பை உண்டாக்கும்.


 ஒருவரது ஜாதகத்தில் ஆறாமிட அதிபதியாக சூரியன் பகவான் வந்தால் ஜாதகருக்கு 

வயிறு வலி, அறையாப்பு, சொறிசிரங்கு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி போன்றவை உண்டாகும். 


   சந்திரனாக இருந்தால் அஜீரணம், சீதம், வயிற்றுப்போக்கு ,உதிரம் சம்பந்தப்பட்ட வியாதிகள்  உண்டாகும் .


செவ்வாய் பகவான் ஆக இருந்தால் 

வாந்தி தலைவலி, மண்டையிடி, புரடி வெட்டு, கத்தி காயம் போன்றவற்றால் பாதிப்பு உண்டாகும் .


ஆறாம் அதிபதி புதன் எனில் கை,கால் முடக்கம் எனும் வாயு சம்பந்தப்பட்ட வியாதி, கழுத்தில் புண் போன்றவை உண்டாகும்.


 குரு பகவானின் எனில் மர்மஸ்தான வியாதி, உதிரப்போக்கு, அரசர்களால் காயம், நெஞ்சிலிருந்து அடி, வயிற்று வலி போன்றவை உண்டாகும்.


 சுக்கிரன் பகவான் எனில் கட்டி பிளவை ஸ்ரீ மூலநோய்,

 பெண்களால் புருஷ நோய், சூலை நோய் போன்றவை உண்டாகும்.


 சனி பகவான் எனில் 

வாத நோய், சூலை நோய், எலும்புருக்கி நோய்,

 வாதம், வாதக் கடுப்பு, வாத நீர் போன்றவை உண்டாகும்.


  ஆறாமிடத்தில்  ராகு-கேது  தொடர்பு உண்டானால்  விஷம் பசித்தல், மயக்கம், பிசாசு, பீடை, துற் பிணி முதலியவை வரும்.


 பாதகாதி தசையில் ஆறாம் இட அதிபதி புத்தி, மாரகாதிபதி தசையில் ஆறாம் இட அதிபதி புத்தி, அஷ்டமாதிபதி தசையில் ஆறாமிட அதிபதி புத்தி அல்லது ஆறாம் இட அதிபதி தசையில் மாரக அல்லது பாதக அல்லது அஷ்டமாதிபதி புத்தி நடப்பில் இருக்கும் காலங்களில் ஜாதகர் நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கின்ற நிலை உண்டாகும். லக்கினாதிபதி வலுவாக இருக்கக் கூடிய சூழலில் உயிர் பாதிப்புகள் ஏதும் கிடையாது.


நன்றி.


     வாட்ஸ் அப்

     9715189647

        செல்

     9715189647

      7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் சாதகம் எழுதி கொரியரில்  அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டண விவரங்களை பெறலாம்)

                             


அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

     M.Sc,M.A,BEd

( ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: