Wednesday, 19 June 2019

பொருத்தம் பார்க்கும் போது திருத்தம் செய்ய வேண்டியது தான்

பொருத்தம் பார்க்கும்போது திருத்தம் செய்ய வேண்டியது


                       

                                                          செவ்வாய்ப்பட்டி
                                             ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                     '' ஒரு தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்க வரும் போது அவர்கள் கொண்டு வரும் ஜாதகத்தினை நன்றாக கணக்கீடு செய்து உள்ளார்களா ? '' என ஆய்வு செய்ய வேண்டியது ஜோதிடர்களுக்கு முதல் கடமையாகும்.

                         பெரும்பாலும் தம்பதிகள் இருவருடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை கொண்டு  இரண்டு சாதக  கணித முறைகளில்( வாக்கிய அல்லது திருகணித முறை) ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்து சாதகம் கணித்து அவசியமாகும். தம்பதிகள் இருவரது சாதகமும் ஒரே கணித முறையில் கணக்கீடு செய்யப்பட்டு பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.

                   தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு திருக்கணித முறையிலும், மற்றவருக்கு வாக்கிய முறையிலும் கணக்கீடு செய்து இவர்களுக்கிடையே இந்த கணக்கீட்டுடினை கணக்கில் கொண்டு பொருத்தம் பார்ப்பது சரியான பொருத்தமாக அமையாது.

   என்னைப் பொருத்தவரையில் தம்பதிகள் இருவரது சாதகங்களையும் திருக்கணித முறையில் கணக்கில் எடுத்துக்கொண்டு பிறகு திருமணம் பொருத்தம் பார்ப்பது சாலச் சிறந்ததாக கருதுகிறேன் என்  சோதிட அனுபவத்தில் நன்றாக உணர்ந்துள்ளேன்.

 பொருத்தம் பார்க்கும்போது முதலில் தம்பதிகள் இருவரது சாதகங்களையும்  நன்கு ஆய்வு செய்து சாதக கட்ட அடிப்படையில் அவர்களுக்கு இடையே பொருத்தம் உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டபின் நட்சத்திர பொருத்தம் பார்க்கப்பட வேண்டும். நட்சத்திரப் பொருத்தத்தை விட கட்ட பொருத்தமே சிறந்ததாக நான் கருதுகிறேன். இதில் மற்றவருக்கு கருத்து மாற்றம் இருக்கலாம்.

  ஒரு சமயம் நட்சத்திர அடிப்படையில் உத்தமம் பொருத்தம் இருப்பினும் கட்ட அடிப்படையில் இருவருக்குமிடையே நல்ல விவாகப் பொருத்தம் இல்லையெனில் திருமணம்  நிகழ்த்துவதை தடுத்து விடுவது நல்லது ஆகும்.

  கட்ட அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானமான 7ம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் இவற்றுடன் புத்திரகாரகன் குரு மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகியோரது  நிலையையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டியது சோதிடர்களான நமது மிக முக்கிய கடமையாகும்.

     மேற்கண்ட ஸ்தானங்களும் கிரகங்களும் அரவுகளான ராகு ,கேது மற்றும் சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்களுடைய தொடர்பும் மற்றும் ஆறு மற்றும் எட்டாம் ஸ்தான அதிபதிகளுடைய தொடர்பும் இருக்கிறதா? என்பது கவனிக்கப்பட வேண்டும்.

  மேற்கண்ட ஸ்தான அதிபதிகளும், கிரகங்களும் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் மறைவிட இடங்களுக்குச் செல்லுதல் போன்ற வகைகளில் பலமிழந்து உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

    திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான லக்கனம், இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகி அதிபதிகள் பலம் அடைந்து  இயற்கை சுபரால்‌ பார்க்கப்பட்டு நவக்கிரகங்களில் குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் கிரகங்களும் பலவீனப்படாமல் உள்ள ஜாதகத்தை பாதிக்கப்பட்ட அமைப்பு உள்ள சாதகத்துடன் இணைத்து பொருத்தம் உள்ளது என கூறி இணைப்பது உகந்தது அல்ல.

     நட்சத்திரம் மற்றும் சாதக கட்ட பொருத்தம் இருப்பினும் அவர்களுக்கு நடைபெறும் திசையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்.

    ஒருவருக்கு கேந்திர கோணாதிபதிகள் திசைகள் நடந்து மற்றவருக்கு மறைவிட ஸ்தான அதிபதிகள் அல்லது கெட்ட ஸ்தானம் ஏறிய பாவிகளான ராகு ,கேது திசை அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகள் திசைகள் நடப்பில் இருப்பின் ஒருவரது திசை மற்றவரது வளர்ச்சியினை பாதிக்கும் என்ற வகையில் நன்கு கவனித்து பொருத்தம் போடுதல் அவசியம் ஆகும்.

ராகு தோஷம் சனி தோஷம்

   திருமணப்பொருத்தம் பார்க்கும் சாதகத்திற்கு ராகு அல்லது சனி இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருந்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது.

     இந்த தோஷத்திற்கு மற்ற சாதகத்தில் சமதோஷம் இருத்தல் வேண்டும். ராகு பெண் ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழில் இருந்தால் ஆண் ஜாதகத்தில் சனி இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருக்கலாம்.

    சனி பெண் ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருந்தால் ராகு ஆண் ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் இருக்கலாம் .

   இதில் விதிவிலக்கு என்னவெனில் ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் இலக்கனம் ,இரண்டாம் இடம், 7-ஆம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகிய வீடுகளும் அவற்றிற்குரிய கிரகங்களும் பலமுள்ளவராக இருந்தால் இந்த தோஷம் இருப்பினும் பயப்படாமல் தம்பதிகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்.

 சுக்கிர தோஷம்

சுக்கிரன் களத்திரகாரகர் ஆவார். மனைவியை அல்லது கணவனை குறிக்கும் வீடு ஏழாம் இடம் ஆகும்.

களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இருந்தால் இந்த சுக்ர தோஷம் ஏற்படுகிறது. இதற்கு சுக்கிரன் பெண் அல்லது ஆண் ஜாதகத்தில் ஏழில் இருந்தால் ஆண் சாதகத்தில்  ஆறு ,ஏழு எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும் .மேலும் ஒன்று அல்லது 7க்குரிய அதிபதி சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்க வேண்டும் ‌.

  தம்பதிகள் இருவரும் ஜாதகத்திலும் புத்திர தோஷம் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   ஏனைய தோஷங்களுக்கு தம்பதிகளுக்கு இடையே சமதோஷம் வேண்டும். ஆனால் புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு புத்திர தோஷம் உள்ள இல்லத்துணையை இணைக்கக் கூடாது.

 தம்பதியர் இருவருக்கும் புத்திர தோஷம் இல்லாது இருக்க வேண்டும் அல்லது யாராவது ஒருவருக்கு புத்திர தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லை எனில் அவரது யோகத்தில் புத்திர பாக்கியம் உருவாக வாய்ப்பு உண்டு.

  தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் புத்திரஸ்தானமான ஐந்தாம் இடம், ஐந்தாம் இடம் அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியவை நீசம், அஸ்தமனம் மற்றும் வக்கிரம் மற்றும் மறைவிட ஸ்தானங்களுக்கு செல்லுதல் கூடாது.

   இதேபோல மேற்கண்ட புத்திர ஸ்தானம் மற்றும் அதன் அதிபதியுடனும், புத்திரகாரகன் குரு உடனும ராகு ,கேது சேர்க்கையோ அல்லது அதன் நட்சத்திர சாரமோ பெறக்கூடாது.

 திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் மேற்கண்ட வகையில் பலவாறு ஆராய்ச்சி செய்து விவாகப் பொருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நன்றி

( தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில்  அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் )

                                                             


அன்புடன்
சோதிடர்
சோ.ப ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
 (ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: