Monday, 28 October 2019

பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம்


                                       செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                                            கிரகங்கள் தங்களது வீடுகளுக்குள்  இடம் மாறி நிற்பது பரிவர்த்தனை யோகம் ஆகும்.இதனை கிரகம் மாறி யோகம் எனலாம்.

                        உதாரணமாக      மீனம் வீட்டின் அதிபதி குரு பகவான் கடகம் வீட்டிலும், கடகம் வீட்டின் அதிபதி சந்திரன் பகவான் மீனம் வீட்டிலும் இடம் மாறி நிற்பது ஆகும்.

                     இவ்வாறு பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தனது கிரக வலுவானது அதிகரிக்கிறது.இவை ஆட்சி பலத்திற்கு நிகரான பலத்தை அடைகிறது.

                        ஒருவரது சாதகத்தில் அதிகபட்சமாக மூன்று பரிவர்த்தனை அமைப்பு மட்டுமே இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.

  பரிவர்த்தனை யோகம் மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.

1) ராஜ யோக பரிவர்த்தனை

2)அவ யோக பரிவர்த்தனை

3) விபரீத யோக பரிவர்த்தனை

மேற்கண்ட மூன்று அமைப்புகளையும் விரிவாக பார்ப்போம்.

1) ராஜ யோக பரிவர்த்தனை

    கேந்திர அதிபதிகள் (1,4,7,10) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு

     கோண அதிபதிகள் (1,5,9) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு,

       கேந்திர,கோண அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு,

தன-லாப அதிபதிகள்(2,11) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு.

      ராஜ யோக பரிவர்த்தனையில் கேந்திர மற்றும் கோண அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது தேசம் ஆளும் யோகத்தை தரக்கூடியது.

 "கூசாது கோணாதி கேந்திராதி குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு திரளான தானியங்கள் கூடும் பாரு"

2)அவ யோக பரிவர்த்தனை
        கேந்திர-கோணாதிபதிகள் ,மறைவிட ஸ்தான அதிபதிகள் ( 3,6,8,12) உடன் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு கிரக வலுவினை குறைத்து அவயோக பலன்களை தரும்.

 உதாரணமாக லக்கினாதிபதியும் ,
ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் நோயாளியாகவும், வழக்குகளை சந்திப்பவனாகவும், வறுமை உள்ளவராகவும் மற்றும் மன அமைதி கொண்டவராகவும் இருப்பார்.

 லக்கினாதிபதியும் எட்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகம் அங்கஹீனம் உள்ளவனாகவும், அவமானங்களை அடிக்கடி சந்திப்பவராகவும், முரண்பாடுகள் நிறைந்தவனாகவும் இருப்பான் .பிறரை இம்சை படுத்துவதில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.

    லக்கினாதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தூக்கத்தில் விருப்பம் உள்ளவனாகவும், சஞ்சாரம் செய்வதில் ஆர்வம் உள்ளவனாகவும்,
விரயங்களைச் செய்வதில் வேகம் நிறைந்தவனாகவும் திடீர் முடிவு எடுத்து தோல்வி அடைபவன் ஆகவும் இருப்பான்.

  ஐந்தாம் அதிபதியும்,
ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகன் புத்திர தோஷம் உள்ளவனாகவும், பூர்வீகத்தில் வழக்கு உடையவனாகவும் வயிறு உபாதை உள்ளவனாகவும், பெரிய மனிதர்களின் பகையை பெற்றவனாகவும் இருப்பான்.



3) விபரீத யோக பரிவர்த்தனை.

 மறைவிட ஸ்தான அதிபதிகள் (3,6,8,12) தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பானது"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில்"விபரீத ராஜயோகத்தினை சாதகருக்கு தருகிறது.

 பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தரும் பலனை போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பானி சோதிடம் -300" என்ற நூலில் 98 வந்து பாடலில் பரிவர்த்தனை யோகம் பற்றி விளக்குகிறார்.

"தானென்ற கோள்களது மாறி நிற்க
தரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன்
ஊனேன்ற உடல் நாதன் பாம்பு கூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்
கோனேன்ற குமரியுட பூசை செய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்
மானேன்ற மறலி பயம் இல்லையில்லை
மைந்தனே இடமறிந்து வலுத்துவாயே"

பாடல் விளக்கம்

  நல்ல பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகன் நற்புகழுடனும் , செல்வத்துடனும் இருப்பான் .ஒழுக்க சீலனாகவும், பெண்தெய்வ வழிபாடு உடையவனாகவும் இருப்பான் .
எமனுக்கு பயப்படாத ஆத்ம ஞானம் பெற்றிருப்பான் .
இவைகள் யாவும் கிரகங்கள் அமரும் இடத்தை உணர்ந்து பலன் உரைப்பாய்.

 பரிவர்த்தனையில் சுபகிரக பரிவர்த்தனை, பாவ கிரக பரிவர்த்தனை, ஆண் கிரக பரிவர்த்தனை, பெண் கிரகம் பரிவர்த்தனை, அலி கிரகம் பரிவர்த்தனை மற்றும்
 நீச கிரக பரிவர்த்தனை என்று பார்க்காமல் "கிரகங்கள் பெறும் ஆதிபத்தியத்திற்க்கும், அவர்கள் அமரும் இடத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்" என்பது சோதிட ஞானிகளின் கருத்தாகும்.

பரிவர்த்தனை யோகம் பெற்ற உதாரண சாதகம்

               
                     
 முன்னாள் பாரத் பிரதமர் இந்திரா காந்தி சாதகம்.

பிறந்த தேதி : 19-11-1917
பிறந்த நேரம்: 11.00 pm
கடகம் லக்கனம்,
 மகரம் ராசி
உத்திராடம் நட்சத்திரம்.

(1 -ல் சனி,2-ல் செவ்வாய்,5-ல் சூரியன், புதன்,6-ல் சுக்கிரன் மற்றும் ராகு,
7-ல் சந்திரன்,11-ல் குரு ,12-ல் கேது)

 முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சாதகத்தில் 3 பரிவர்த்தனை அமைப்புக்கள் உள்ளன.

1) லக்கனாதிபதி சந்திரபகவான் ஏழாம் இடத்திலும் ,
ஏழு மற்றும் எட்டுக்குடைய சனி பகவான் இலக்கனத்திலும் அமர்ந்துள்ளது.

2) சுக மற்றும் லாபாதிபதியான (4,11) சுக்கிரன் பகவான் ,
ஆறு மற்றும் ஒன்பதுக்குடைய (6,9) குரு பகவன் பரிவர்த்தனை அடைந்துள்ளது. இது ஒரு வகையிலான
 கேந்திர- கோண பரிவர்த்தனைஆகும்.

3 ) இரண்டாம் இட அதிபதியான சூரியபகவான்,
 பூர்வ புண்ணிய மற்றும் ஜீவன(5,10) ஸ்தான அதிபதியான செவ்வாய் பகவான் உடன் பரிவர்த்தனை அடைந்துள்ளது.

மேற்கண்ட வகையிலான மூன்று பரிவர்த்தனை யோகங்கள் ஜாதகருக்கு அரசாளும் யோகத்தை தந்தது. இவரது பதவிக்காலத்தில் பங்களாதேஷ்க்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுத்தர இயன்றது. அவசர நிலை பிரகடனம் கொண்டுவர இயன்றது.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

‌.   செல்
  9715189647
    7402570899

                   

அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்.
 கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com

My blog

WWW.AstroRavivhandran.
blogspot.com

WWW.AstroRavichandransevvai.blogspot.com.

.................

No comments: