சந்திரபகவான்-(1)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதக கட்டத்தில் 27 நட்சத்திரங்களும் ஒரு ராசிக்கு 21/4 வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்து தரப்படுகின்றன. ஒரு நட்சத்திரத்தை நான்கு பாதங்களாக பிரிக்கப்படுகிறது.
பாதம் அடிப்படையில் ஒரு ராசிக்கு 9 பாதங்களாக பிரிக்கப்படுகிறது. மொத்தம் பன்னிரண்டு ராசிகளுக்கும் 12×9= 108 பாதங்கள் ஆகும்.
ஒருவர் ஜெனிக்கும்போது பால்வீதியின் தொடுவானத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது.
ஜென்ம நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதனை சந்திரன் இருக்கும் இடமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது .
எந்த ராசியில் சந்திரன் இடம் பெறுகிறதோ அதனை "ஜென்ம ராசியாக"கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கோச்சார அடிப்படையிலான குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி போன்ற இடம் பெயர்ச்சி பலன்களை ராசி அடிப்படையில் பார்க்கப்படவேண்டும்.
தின பலன்கள் மற்றும் மாத பலன்கள் சந்திரன் இருக்கும் இடமான ராசியை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.
இலக்கனத்தை உயிர் என்றும் ராசியை உடல் என்றும் அழைத்தனர். லக்னமும், ராசியும் உயிர்+உடல் போன்றவர்கள். உயிரின்றி உடல் தனித்து இயங்காது. எனவே ஜாதகத்திற்கு பிரத்யோகமான கிரகம் லக்கனாதிபதி ஆகும்.
சந்திரன் இருக்கும் ராசியைக் கொண்டே அஷ்டமச்சனி ,கண்டச்சனி ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச்சனி போன்றவை வகைப்படுத்தப்படுகிறது.
சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் தங்கும் .இந்த வகையில் சந்திரபகவான் சூரியன் உடன் தங்கும் நாட்களை அமாவாசை காலமாகக் கொள்ளப்படுகிறது.
சந்திரபகவான் சூரியனை விட்டு அதன் ஏழாம் இடத்திற்கு வரும் காலத்தை பௌர்ணமி காலமாக கருதப்படுகிறது.
சந்திரபகவான் அமாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கி நகரும் காலத்தை வளர்பிறை காலம் அல்லது சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்கிறோம். இது சூரியன் இருக்கும் இடத்திற்கு இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம் வரை நகரும் காலம் ஆகும்.
ஏழாமிடத்திலிருந்து சந்திரன் பகவான் சூரியன் இருக்கும் இடத்திற்கு வரும் காலம் தேய்பிறை காலம் அல்லது கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்கிறோம் இது பெரும்பாலும் சூரியன் இருக்கும் இடத்திற்கு எட்டாவது ராசியில் இருந்து பதினொன்றாம் ராசி வரை நீடிக்கும்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்று அழைக்கிறோம்.
வளர்பிறை காலங்களில் உள்ள திதியை பூர்வ பட்சம் திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேய்பிறை காலங்களில் உள்ள திதியை அமர பட்ச திதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சந்திர பகவானை மனநிலை காரகன் என்று அழைக்கிறோம்.நிறைமதி காலங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பைத்திய தன்மை அதிகமாகி விடுவதை காணலாம். சந்திரனுக்கும், மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் நீசம் என்ற வகையில் பலம் இழந்து காணப்பட்டாலும், அவர்களுடன் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும் அவர்கள் மனநிலையில் சற்று குழப்பம் உடையவர்களாகவும், தான் கொண்ட கொள்கையில் உறுதித்தன்மை அற்றவராக இருப்பார்.
சந்திரன் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெற்று இருக்கும்பொழுது உறுதியான மனநிலை உடையவர்களாக எவ்வித மனக்குழப்பம் அற்றவராக திகழ்வார்கள். இவர்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவாகவும் அமையும்.
சாமரை யோகம்
சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் சுபகிரகங்கள் அமர்ந்தால் "சாமரை யோகம் "ஆகும்.
குரு-சந்திர யோகம்
"கேளப்பா குமரனுக்கு குருச்சந்திர பலனைக்கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையும் கிட்டும் ஜெனித்ததொரு மனை தனிலே தெய்வம் காக்கும் கூறப்பா கோதையரால் பொருளுஞ் சேரும்
குவலயத்தில் போர் விளங்கும் கடாட்ஷம் உள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தோனானால் அப்பனை அறையாதே
இப்புவியில் உள்ளோர்க்கு"
சந்திர பகவான் குருவுடன் இணைந்து காணப்பட்டால் "குருச்சந்திர யோகம்"ஆகும். இணைந்திருக்கும் கிரகம் இரு கிரகங்களில் ஒரு கிரகம் பலம் இழக்க கூடாது.குரு-சந்திரன் இணைந்து இருக்கும் பாவ நாதன் மறையகூடாது.
கஜகேசரி யோகம்
சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு கேந்திரங்களில் குரு பகவான் அமர்ந்திருந்தாலும்(4,7,10) சந்திரனுடன் குரு இணைந்திருந்தாலும் மற்றும் சந்திரனை குரு பார்த்தாலும் "கஜகேசரி யோகமாகும் "
கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம் ஆகும்.
ஆயிரம் யானை வந்தாலும் ஒரு சிங்கம் எதிர்கொண்டு அத்தனையையும்
வீழ்த்துவது போல தனி ஒரு நபராக இருந்து எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும்.
சசி மங்கள யோகம்
சந்திரபகவான் உடன் செவ்வாய் பகவான் இணைந்து இருப்பது
" சசிமங்கள யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவித யோகம் என்றாலும் மனநிலை காரகன் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது மன அடிப்படையில் போராட்டங்களும், பிரச்சினைகளும் இருந்து கொண்டே இருக்கும்.
சுனபா யோகம் மற்றும் அனபா யோகம்
சுனபா யோகம்
"இந்துவுக்(கு) இரண்டாம் வீட்டில்
இனிய கோள் இருந்த காலை
முந்திய சுனபா யோகம் இதன்பலன் மொழியும் காலை
சந்ததம் தனவான் ராஜ சன்மானன் புத்தி யுள்ளான்
சுந்தர புவிகள் எங்கும்
துதித்திடும் கீர்த்தி மாறாய் "
-சாதக அலங்காரம் (298)
சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாமிடத்தில் சூரியனைத் தவிர குரு, சுக்கிரன் ,புதன் ,செவ்வாய் சனி ஆகிய பஞ்ச மகா புருஷ கிரகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் சுனபா யோகம் ஏற்படும் .
சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் சூரியனைத் தவிர குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் ,சனி ஆகிய பஞ்ச மகா புருஷ கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களோ நின்றால் அனபா யோகம் எனப்படும்.
அதியோகம்
"சோமனுக்(கு) ஆறேழ் எட்டில்
சுபக்கிர கங்கள் நின்றால்
பூமலி அதிக யோகம்
இதன்பலன் புகலுங் காலை
நேமியான் சவுரி யங்கள்
நிறைசீவன் பலமு முள்ளான்
தீமையாம் பகையை வெல்லும்
சேனாதி பதியு மாவான் !"
சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் வரிசையாக சுபக்கிரகங்கள் நின்றிருந்தால் அதியோகம் என அழைக்கப்படுகிறது.
அதியோகத்தில் பிறந்தவன் திருமாலைப் போல் அழகு ,ஆற்றல், அறிவு ,ஐஸ்வரியம்
ஆகியவற்றையும் பெற்றுள்ள ஜீவாத்மா ஆவான். மிகவும் கொடிய விரோதிகளை வெற்றி கொள்ளும் தளபதியுமாக இருப்பான்
சகடையோகம்
சந்திரனுக்கு ஆறு ,ஏழு எட்டில் குரு பகவான் அமையப் பெற்றாலோ அல்லது குருபகவானுக்கு ஆறு ஏழு எட்டில் சந்திரபகவான் அமைந்தாலும் "சகடை யோகம்" என்று அழைக்கப்படுகிறது.
"அகடின் மன்னனுக்(கு) ஆறேட் டொடுவியத்(து)
இகடி லாமதிஎய்தி இருந்திடின் சகட யோகம் இதில்பிறந் தார்க்கெலாம்
விகட துன்பம் விளையும் அரிட்டமே"
-சாதக அலங்காரம்
"யாருடா தம்பி கேளாய் ஆசானுக்கு ஈராறு எட்டில் நிலவு நிற்க பயனில்லா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார் பெற்றோர் வேறடா வெறுப்பார்
துன்பம் வேறூன்றும்
வாழ்நாளெல்லாம்"
_ -- ஜோதிட சிந்தாமணி
சகடை யோகம் பெற்றவன் வாழ்வு ஒரே சீராக இருக்காது. வண்டிச்சக்கரமானது எவ்வாறு கீழும், மேலும் நகர்ந்து செல்கிறதோ அதே போல அவனது வாழ்க்கை தரமும் ஒரு நேரத்திற்கு கீழ்நோக்கி மற்றொரு நேரத்தில் மேல்நோக்கியுமாக இருக்கும்.
தொடரும்
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My blogspot
AstroRavichandran .blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com
My email
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment