Tuesday, 22 January 2019

திருமண வாழ்வு பற்றி சோதிட அடிப்படையில் ஓர் ஆய்வு .

              

திருமண  வாழ்வு பற்றி சோதிட அடிப்படையில் ஓர் ஆய்வு .


கிரகங்கள் படுத்தும் பாடு -( 30 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்..

     ஒரு மனிதனுக்கு தனது இணையான ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கிரகங்களின் பங்கு என்ன ?  என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

      இதில் முதலில் ஒரு மனிதனுக்கு தனது சாதக கட்டத்தில் ஆண் /பெண் இருபாலருக்கும்
 ஏழாமிடம் என்பது களஸ்திர ஸ்தானம் ஆகும்.

      இரண்டாமிடம் என்பது குடும்ப ஸ்தானம் மற்றும் அவருடைய சாதகத்தில் உள்ள மனைவி ஸ்தானத்திற்கு ஆயுள் ஸ்தானமான
 எட்டாமிடம் ஆக வருவதால் இந்த இரண்டாமிடமும் அவசியம் ஆகும்.

      அடுத்து  ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாமிடம் ஆகும்.இவை மனைவி ஸ்தானத்திற்கு இரண்டாமிடம் அதாவது குடும்ப ஸ்தானம் ஆகும்..

      எனவே ஒருவர் தனது திருமண வாழ்வு குறித்து தன்னிடம் சாதகம் பார்க்க வருவோர்கள் வினா எழுப்பும்போது முதலில் அவர்களது சாதகத்தில் மேற்கூறிய இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

                               

   மேலும் லக்கனத்தில் அமரும் கிரகம் தனது ஏழாம் பார்வையால் களஸ்திர ஸ்தானத்தை பார்ப்பதால் இவற்றையும் கவனிக்கவேண்டும்.

     மேற்கண்ட இந்த ஸ்தானங்களில் அசயர்களான ராகு ,கேது ,செவ்வாய் மற்றும் சனி போன்ற பாவிகள் பலம்பெற்று நிற்க சாதகருக்கு திருமண வாழ்வு தடைபடுவதோடு மனம் ஒத்த மனைவி அமைவது சிரமம் ஆகிறது.

      இவை லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்கும் உள்ள 1,2,7,8 ஆம் ஸ்தானங்களையும் கவனிக்கப்படவேண்டும்.

     மேலும் ஏழாமாதிபதி மற்றும் குடும்பாதிபதி ஆறு ,எட்டு போன்ற ஸ்தானங்களில் அமர்ந்தாலோ அல்லது இவற்றுடன  சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது ஆறு,எட்டாம் அதிபதிகள் ஏழாமிடத்தில் அமர்ந்தாலோ திருமண வாழ்வு தடைபெறுகிறது.

.     மேலும் குடும்பம் மற்றும் களஸ்திரஸ்தானதிபதிகள் ஆறு மற்றும் எட்டாமாதிபதியின் நட்சத்திர சாரம் பெறக்கூடாது.மேலும் இவைகளுக்கிடையே பரிவர்தனை அடையகூடாது.

                           


      ஒருவருடைய சாதகத்தில் இரண்டு ,ஏழு மற்றும் எட்டாமிடத்தில் உச்சம்பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.மேலும் இவற்றின் அதிபதிகள் நீசம்,அஸ்தமனம்,பகை மற்றும் மறைவு பெறக்கூடாது.

       இதேபோல ஆண் சாதகருக்கு களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிர பகவானும் ,பெண் சாதகத்தில் களஸ்திரகாரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானும் ஒருவருடைய சாதகத்தில் பாவிகள் ஆளுகைக்கு உட்படக்கூடாது.இவ்வாறு அசயர்களான ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெறாமல் இருத்தல் நலம்.

     இவ்வாறு லக்கனம்,ராசி மற்றும் களஸ்திரகாரகருடன் ராகு ,கேது சேர்க்கை களஸ்திர தோஷத்தை உண்டு பண்ணுகிறது.

                          

களஸ்திர தோஷ பரிகார வழிபாடு:-


ராகு ஸ்தலங்களான திருநாகேஸ்வரம் ,
திருப்பாள்புரம்,பேரையூர் மற்றும் காளஸ்தி போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வெள்ளியால் செய்யப்பட்ட பாம்பு படம் வைத்து ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம்.

    துர்கை ,காலபைரவர் மற்றும் அனுமான் போன்ற தெய்வ வழிபாடு உகந்தது.

                          

    காரக பாவ நாஸ்தி


    ஒருவருடைய சாதகத்தில் காரகர் ஆனவர் காரகஸ்தானத்தில் இருப்பின் காரக பாவ நாஸ்தி ஆகும்.

      எனவே ஏழாமிடத்தில் களஸ்திரகாரகன் சுக்கிரன் அமர்ந்தால் காரக பாவ நாஸ்தி பெற்று அந்த ஸ்தானத்தை பாதிக்கும்.எனவே அந்த ஸ்தான பலனான திருமண வாழ்வை பாதிக்கும்.

     பொதுவாக சுக்கிரன் ,சனி ஆகிய இரு கிரகங்களும் ஏழாமிடத்தில் இல்லாமல்  இருத்தல் நலம் ஆகும்.அதற்கான பாடல்கள் பின்வருமாறு

"சுக்கிரன்தான் கேந்திரத்தில் இருந்தாலப்பா சொல்லுகிறேன் சாதகருக்கு தாரம் இரண்டு "

"சட்டமாய் சனி ஏழாமிடத்தில் இருந்தால் தாரம் இரண்டு தப்பாமல் செய்யுவான் "

என்கிறது சாதக பாடல்.

                           

       எனவே ஏழாமிடத்தில் சனி ,சுக்கிரன் இருப்பவரெல்லாம் இரண்டாம் தாரம் செய்வார் என உறுதியாக கூற முடியாது.அதற்கான வேறு சில அமைப்புகள் உள்ளது.அதுபோன்ற அமைப்பை பெற்று மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களுக்கு மட்டுமே தாரதோஷம் உண்டு.இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து பார்ப்போம் .

குறிப்பு ;-ஏழாமிடம் மற்றும் இரண்டாமிடம் ,சுக்கிரன் பலம்பெற்று சுபர்பார்வை பெறின் மேற்கண்ட பலன் மாறுபடும்.

வாழ்க மகிழ்வுடன்..


                           

       அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட  ஆலோசனை நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.


(தங்களுடை சாதகத்தினை ஆய்வு செய்து போனின் வழியாக சாதகபலன்,திருமணபொருத்தம்  பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்,கட்டணம் உண்டு .
  தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம் )

No comments: