Saturday, 11 July 2020

திருமண வாழ்வில் இன்பநிலை எய்திட...(2)

திருமண வாழ்வில் இன்ப நிலை எய்திட.....(2)


                            

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

சுப கல்யாணம் தருவதில் கிரகங்களின் பங்கு.


     ஏழாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற 2,4 ,5, 9, 11 ஆம் அதிபதிகள் ஆகிய இவர்கள் திசையில் சுப கல்யாணம் நிச்சயம் நடக்கும் .மேலும் சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் ஏழில் நின்று திசையை நடத்தினால் சுப‌கல்யாணம் தருவார்கள் என்பது திண்ணம் ஆகும்.

  மேலும் ஏழாம் அதிபதியுடன் சேர்ந்த 3, 6, 8 ,12-ஆம் அதிபதிகளின் திசை நடந்தால் திருமணத்தில் வில்லங்கம், விவகாரம், வழக்கு, வீண் விரயம் போன்ற துர்ப்பாக்கிய நிலையை பெற்று துயர்பட நேரிடும்.

                         

   திருமணத்தை நிர்ணயிக்க குருபகவானின் பங்கு.


  ஒருவருக்கு திருமணம் இளவயதில் கைகூடி வர வேண்டுமாயின் வாழ்வில் குருபலம் இன்றியமையாததாக அமைகிறது.

 குருபகவான் சந்திரனுக்கு 2, 5 ,7 ,9, 11-ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் வந்து விட்டது என்பது பொருளாகும் இது பொது விதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

 பலருக்கு குரு பலம் நடைமுறைக்கு வந்தும் திருமணம் நடைபெறாமல் காத்திருப்பதும், சிலருக்கு குரு பலம் இல்லாமல் திருமணம் இனிதே நடந்து முடிவதும் நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.

  ஒருவருக்கு திருமண காலத்தை நிர்ணயம் செய்வதற்கு எனது அனுபவத்திற்கும், ஆய்வுக்கும் மிகச் சரியாக ஒத்து வருகின்ற பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"ஏழினுக்குடையோன் தன்னோ டேகிய கிரகம் ஏழின்
வாழ்வெனுங் கிரகமின்னோர் வருதிசை அபகாரத்தில்
ஊழ்வினையான பெண்டீர் உதவுமாம்
இரண்டிற்கோளான்
சூழ்நிலை அபகாரத்தில் சுப கல்யாணம் சொல்லே"

 இப்பாடல்" ஜாதக பாரிஜாதம்" என்ற பழம் பெரும் நூலில் இடம்பெற்றுள்ளது.

 திருமண காலத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏழாம் வீட்டின் அதிபதி, ஏழில் உள்ள கிரகம், ஏழாம் இடத்தை அதிபதியோடு கூடியவர்கள், இரண்டாமிடம், இரண்டாமிடத்து அதிபதி இவர்களுடன் கூடியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

   ஒரு ஜாதகத்தில் குரு பெயர்ச்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் ஜெனன கால ஜாதகத்தில் குரு திசையோ அல்லது குரு புத்தியோ அல்லது குருவின் சாரம் பெற்றவர் திசையோ அல்லது புத்தியோ நடைபெற வேண்டும் என்பது நடைமுறை விதியாகும்.

   குரு பகவான் என்ன ஆதிபத்தியம் பெற்று திசை நடத்துகிறாரோ அதற்கு ஏற்ற பலனை தருவார். சுப ஆதிபத்தியம்  பெற்றிருந்தால் சுப பலனையும்,  அசுப ஆதிபத்தியம் பெற்றிருந்தால் அசுப பலனையும் தருவார்.

  திருமணத்தை தீர்மானிக்க குருபகவான் இலக்கனம் அல்லது ராசிக்கு இரண்டாம் அதிபதியாகவோ அல்லது ஏழாம் அதிபதியாகவோ வரவேண்டும்.

 குருபகவான் இரண்டு அதிபதியாகவும் அல்லது  ஏழாம் அதிபதியாகவும் அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் இரண்டாம் இடத்தை அல்லது ஏழாம் இடத்தைப் பார்க்கும் போது குடும்ப உறவையும் மற்றும் களத்திர சுகத்தையும் தவறாமல் தருவார்.

  குரு பகவான் ஐந்தாம் அதிபதியாகவும் அல்லது ஒன்பதாம் அதிபதியாகவும் அமைந்து லக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் 5-ஆம் இடத்தையும் மற்றும் அதன் அதிபதியையும் மற்றும்  ஒன்பதாம் இடத்தையும் மற்றும் அதன் அதிபதியையும் பார்க்கும்போது புத்திர பாக்கியத்தை தருவார். புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.

   குருபகவான் பதினொன்றாம் அதிபதியாக அமைந்து லக்கனம் அல்லது ராசிக்கு  பதினொன்றாம் இடத்தை அல்லது பதினொன்றாம் அதிபதியை பார்க்கும்போது சாதகரின் அபிலாசைகளையும், நீண்ட நாள் கனவுகளையும் மற்றும்  புத்திர பாக்கியத்தையும் தருவார்.
   
முக்கியமாக புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் தொடர்பு பெற்ற தசா புத்தி காலங்களில் மட்டுமே குருபலம் திருமணத்தை தரும்.

                         

  புத்திர பாக்கியம்


   ஒரு திருமண வாழ்வின் வெற்றியே அடுத்த தலைமுறைக்கு அடித்தள இட்டுச் செல்வதுதான் முதல் முக்கிய காரணமாக அமைகிறது.

    பருவ வயதை நெருங்கிய ஆடவருக்கும், பெண்டிருக்கும் ஒருவித ஈர்ப்பு விசையை மனதில்  தந்து கண்களில் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியை வைத்து "அன்னளும் நோக்கினால் அவனும் நோக்கினான் "  என்ற ஏகாந்த உணர்வினை தந்து மனம் துள்ளி குதித்து தனக்கு இணையான வாழ்க்கை துணை வாயிலாக ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும்  காம ரசம்  என்ற உணர்வினை பருகுவதன் இறை நோக்கமே அடுத்த சந்ததியினரை இவ்வுலகிற்கு கொண்டு வரக்கூடிய வாழ்வின் சக்கரம் ஆகும்.

  திருமணமான ஒரு சில மாதங்கள் கழித்து தம்பதியை பார்த்து சமூகம் கேட்கக்கூடிய கேள்வி "முதலில் சொத்து சுகம் மற்றும் வீடு ,வாசல் அல்ல .மாறாக அவர்களிடம் கேட்க கூடிய கேள்வி "உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் உண்டா ? "என சூசகமாக குழந்தை பாக்கியம் உருவாகி உள்ளதா? என்பது தொடர்பான கேள்வியாகத்தான் இருக்கும்.

  ஆதலால் திருமண பொருத்தம் பார்க்கும்போது புத்திர பாக்கியம் உண்டா? என்பதை தம்பதிகள் இருவர் உடைய  ‌ஜாதகங்களையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  நட்சத்திர அடிப்படையிலான பொருத்தத்தில் பால் பொருத்தமானது இல்லை என்றாலும் கூட  ,
கட்ட அடிப்படையில் தம்பதிகள் இருவரில் யாருடைய ஜாதகத்தில் புத்திர தோஷம் இல்லை எனில் விவாகம் செய்யலாம்.

  புத்திர பாக்கியம்  சாதக கட்டத்தில் ஆய்வு செய்ய லக்னம் அல்லது இராசிக்கு 5-ம் இடம் , அதன் அதிபதியான புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு பகவான் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவிகள் இடம்பெறாமல்,  ஐந்தாமிடம் அதிபதியானவர் உச்சம், ஆட்சி, நட்பு போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர மற்றும் திரிகோணங்களில் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும், புத்திர காரகன் குருபகவான் சுபஸ்தானம் ஏறி அரவான ராகு ,கேது தொடர்பு அற்ற அமைப்பைப் பெற்றவர்களுக்கு யோகமான அமைப்பு உடைய புத்திர பாக்கியம் இளவயதில் நிரம்ப பெறுவார்கள்.

                         

  புத்திர தோஷம் உடைய ஜாதகம்:-

   ஒருவருக்கு புத்திர தோஷம் என்பது புத்திர பாக்கியமே உருவாகாத நிலை மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே பெற்றெடுக்க கூடிய நிலை ஆகும் .

 புத்திர தோஷம் உருவாக ஜோதிட அடிப்படையான காரணங்கள் பின்வருமாறு காணலாம்.

1) புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு, கேது இடம்பெற்று பாவியான சனி செவ்வாய் பார்வையை பெறுதல்.

2)புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாம் இட அதிபதியானவர்  மறைவிடங்களில் நின்று பகை பெற்று நின்றாலோ   ,

       அல்லது   

    சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவிகளுடன் தொடர்பு பெற்றிருந்தாலோ,

     அல்லது

      புத்திர ஸ்தானாதிபதி நீச்சம் அடைந்து நீசபங்கம் பெறாமல் நின்றாலோ,

      அல்லது

     புத்திர ஸ்தானாதிபதி வக்ரம் போன்ற நிலையை அடைந்து சுகம் பெறாமல் நிற்றல்.

   3)புத்திரகாரகன் குரு பகவானுடன் சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது தொடர்பு பெற்று பலவீனமடைந்து பங்கபடுதல்,

      அல்லது

   நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் நட்சத்திர சாரம் பெற்று நிற்றல்

     அல்லது

குரு பகவான் மறைவு இடங்களுக்குச் சென்று சுபத்துவம் அடையாமல் இருத்தல் ஆகும்.

  புத்திர தோஷம் போக்கும் பரிகாரங்கள்

  புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம், ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு பகவான மூன்று அமைப்புகளுடன் நிழல் கிரகங்களான ராகு, கேது தொடர்பு பெற்றவர்கள் கீழ்க்கண்ட நாக ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலத்தில் சர்ப்ப சாந்தி செய்து பாலாபிஷேகம் செய்ய தோஷம் விலகி புத்திர பாக்கியம் உண்டாகும்.

1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் இடம்பெற்றுள்ள நாகநாத சுவாமி திருக்கோவில்.

2) திருவாரூர் மாவட்டத்தில் திருப்பாம்புரம் என்னும் ஊரில் இடம்பெற்றுள்ள சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்.

3) புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் இடம்பெற்றுள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.

4) ஆந்திரா மாவட்ட மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள காளத்தியப்பர் திருக்கோயில்.

 இவை தவிர புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் ராகு பகவான் இடம்பெற்றிருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ, பொட்டு மஞ்சள், குங்குமம் மற்றும் வஸ்திரம் அடங்கிய பொருட்களை ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக வழங்க புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் உண்டாகும்.

(இந்த பதிவின் தொடர்ச்சி அடுத்த பதிவில் காணலாம்.)

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

     செல்
  9715189647
     7402570899

‌.                         

    அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email

masterastroravi@gmail.com

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com

...... ......   ....... .......    .........

No comments: