Tuesday, 19 July 2022

ஜோதிட சூத்திரங்கள் -(6) 🌙 சந்திரன் பகவான்

 ஜோதிட சூத்திரங்கள் -(6)

  (சந்திரன் 🌙 பகவான்)

                


செவ்வாய்ப்பட்டி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நவகிரகங்களில் சந்திர பகவானை ஒளி கிரகமாக கருதப்படுகிறது. சந்திர பகவானை மனநிலை காரகன் என்றும் மற்றும் மாதுர் காரகன் என்‌றும் அழைக்கப்படுகிறது.


  கடகத்தை சொந்த ஆட்சி வீடாகவும், ரிஷபத்தில் உச்சம் மற்றும் மூலதிரிகோணம்  வீடாகவும் மற்றும் விருச்சிகத்தில் நீசம் என்ற ஸ்தான பலத்தை பெற்றுத் திகழ்கிறது. சந்திரன் பகவான் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் தவிர  எல்லா கிரகங்களையும் நட்பு கிரகமாக கருதுகிறது.


 சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாள் தாங்குவார் எனவே சந்திரன் நாள் கோள்  வரிசையில் வருவார். சந்திரன் பகவானுக்கு வக்கிரம் மற்றும் அஸ்தமனம் கிடையாது .


சந்திரன் சூரியனைப் 12 பாகைக்குள்ளாக நெருங்கும் போது அமாவாசை யோகம் பெறுகிறது. சந்திரன் பகவான் சூரியனுக்கு சம சப்தமாக வருகின்ற வேளையில் பௌர்ணமி யோகம் தருகிறது.


 வளர்பிறை மற்றும் தேய்பிறை போன்ற அமைப்புகள் சந்திரனுடைய நகர்வை அடிப்படையாகக் கொண்டே பிரிக்கப்படுகிறது.


 பொதுவாக அமாவாசை விட்டு விலகி அதாவது அஸ்தமன கதியிலிருந்து விலகி உதய கதிக்கு வரும் சந்திரன் இரண்டாம் பாவத்தில் இருந்து ஏழாம் பாவம் வரை உள்ள சந்திரன் வளர்பிறைச் சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. இதனை சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என அழைக்கப்படுகிறது.

 

    அதே போல பொளர்ணமி நிதியிலிருந்து விலகி அமாவாசையை நோக்கி  அதாவது ஜாதக கட்டத்தில் எட்டாம் பாவம் முதலாக பன்னிரெண்டாம் பாவம் வரை வரும் சந்திரன் தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது. கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்றழைக்கப்படுகிறது.


 பொதுவாக விதிகளுக்குள் சில விதிவிலக்குகள் உண்டு என்ற வகையில் அமாவாசை விட்டு விலகிய சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தாலும் சஷ்டி திதி வரை அதனை தேய்பிறைச் சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 அதேபோல பௌர்ணமி விட்டு விலகிய சந்திரனை தேய்பிறை சந்திரன் ஆகவே கருதினாலும் சஷ்டி திதி வரை வளர்பிறைச் சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில் சுபமுகூர்த்தங்கள் வைக்கலாம்.


 வளர் பிறைச் சந்திரனை இயற்கை சுபராகவும் மற்றும் தேய்பிறைச் சந்திரன் இயற்கை பாவராகவும்  கருதப்படுகிறது .


  சந்திரன் பகவான் குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம் , கடகம் மற்றும்  சிம்மம் ஆகிய லக்கனங்களுக்கு வளர்பிறை சந்திரனாக இருக்கும் பட்சத்தில் நல்லதை தரக் கூடிய கிரகமாக கருதப்படுகிறது.


 சந்திர பகவான் ஒரு ராசியில் இடம்பெறும்போது அதனையே "ஜென்ம ராசியாகக்" கருதப்படுகிறது. சந்திர பகவான் இடம்பெறும் நட்சத்திரத்தை "ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தின் தசை நாதனை ஜாதகரின் துவக்க தசையாக கருதப்படுகிறது.


  சந்திர பகவான் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் தசா நாதன் ஆக  திகழ்கிறார். மனித வாழ்வில் சந்திர தசை வரும்போது 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.


 சந்திர பகவானுடன் நிழல் கிரகமான ராகு பகவான் அல்லது இருள் கிரகமான சனிபகவான் இணைவது மனதளவில் உறுதி இல்லாத நிலையினை ஜாதகருக்கு தரும். சந்திரனுடன் ராகு பகவான் எட்டு  பாகை அளவில் நெருக்கமாக இணைந்து சனி பார்க்கின்ற அமைப்பு அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு தருகிறது  தாய்க்கு  பாதிப்பு உண்டாகிறது. சுபத்துவம் ஒன்றே மாற்று வழியாகும் இந்த அமைப்பில் குரு பகவான் ,தனித்த புதன் மற்றும்  சுக்கிரன் ஆகியவற்றின்  தொடர்பு வரும் பொழுது இந்த பாதிப்பில் இருந்து சாதகர் விடுபடுகிறார்.


  குருவுடன் இணையும்போது "குருச்சந்திர யோகத்தையும் "

சந்திர பகவான் செவ்வாய் உடன் இணையும் போது "சசிமங்கள யோகத்தையும்"

 சந்திரன் பகவான் சுக்கிரன் உடன் இணைந்து  "பிருகு மங்கள யோகத்தையும்" தருவார்.


  சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் இயக்கும் பொழுது சோதிட  ஞானத்தைச்  தருவார்.


 சந்திர பகவானுக்கு கேந்திரத்தில் குரு பகவான் இருந்தால் கஜ-கேசரி யோகத்தை தருகிறார்.


 சந்திர பகவான் சம சப்தமாக சனி பார்க்கும் அமைப்பு புணர்பூ தோஷத்தை தருவார்.சந்திரனுக்கு மறைவிட ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது 

"சகடை யோகம்" ஆகும் இது ஏற்ற, இறக்கம் நிறைந்த வாழ்வு தரும்.


  சந்திரனுக்கு 6, 7 மற்றும் 8ஆம் இடங்களில் இயற்கை சுப கிரகங்களான குரு ,புதன், சுக்கிரன் அமர்ந்து இருப்பது சந்திராதி யோகம் ஆகும். 

சந்திராதி யோகம் பெற்ற கிரக தசைகள் யோகத்தையும் அள்ளித் தரும்.


  ராசிக்கு அதாவது சந்திரனுக்கு  இரண்டு புறங்களிலும் சுப கிரகங்கள் அமர்ந்து இருந்தால்  அது "சுப கர்த்தாரி யோகம்" ஆகும்..


 சந்திரனுக்கு  இரண்டில் சுப கிரகங்கள் இருப்பது" அனபா யோகம் "என்றும், சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுப கிரகங்கள் இருப்பது" சுனபா யோகம்" என்றும் அழைக்கப்படுகிறது.


 கும்பம் லக்கனத்திற்கு சந்திர பகவான் ஆறாம் அதிபதி என்ற வகையில் அதன் தசை காலங்களில் ‌கடன் , பிணி, எதிர்ப்பு, அசிங்கம் ,கேவலம்  மற்றும் அவமானம் போன்றவற்றை தருவார.


 ஜெனன கால ஜாதகத்தினை வைத்து பலனறிவதற்கு இலக்கணம் முதன்மையானது. அதே நேரத்தில் கோச்சர அடிப்படையில் பலன்களை அறிய ராசியே முதன்மையானது ஆகும்.


  லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் அறிவதே "விதி "என்றும், ராசியை அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு பலனறிவது  மதி என்றும் மற்றும் சூரியனை அடிப்படையாக கொண்டு பலனை அறிவது "கதி "என்றும் அழைக்கப்படுகிறது.


 ஒருவருக்கு சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி வரும் காலங்கள் ஏழரை சனி ஆரம்பமாகிறது.

பனிரெண்டாம் இடம் சனியை 

"விரயச் சனி" என்றும், 

ராசியில் இருக்கும் சனியை

 "ஜென்ம சனி "என்றும்  மற்றும் இரண்டாம் இடத்தில் வரும் சனியை "பாதச்சனி" என்றும் அழைக்கப்படுகிறது.


   இதேபோல் சந்திரனுக்கு நான்காம் இடத்தில் வரும் சனியை" அர்த்தாஷ்டமச் சனி" என்றும், 

ஏழாமிடத்தில் வரும் சனியை 

"கண்டச் சனி" என்றும் மற்றும் எட்டாம் இடத்திற்கு வரக்கூடிய சனியை

 " அஷ்டமச் சனி" என்றும் அழைக்கப்படுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

  9715189647


   செல்

  9715189647

   7402570899


Email :  masterastroravi@gmail.com


                          



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd,

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: