கிரக பார்வை நுணுக்கங்கள்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதக பலனை மாற்றுவதில் கிரகங்களின் பார்வை பலனின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.
இதனைத் தான் நாம் "திருக் பலம்" என்று அழைக்கிறோம்.
எல்லா கிரகங்களும் ஏழாம் இடத்தை பார்வை செய்வது உண்டு. தனது ஏழாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்க்க கூடிய கிரகங்கள் பார்வை வலிமையானது 100% இருக்கும்.
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுக்களுக்கு எவ்வித பார்வையும் கிடையாது.
குரு பகவான் சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் தன் ஏழாம் பார்வையை தவிர்த்து சில சிறப்பு பார்வைகள் உண்டு. குரு பகவானுக்கு ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையும் ,
சனி பகவானுக்கு மூன்று மற்றும் பத்தாம் பார்வையும் மற்றும் செவ்வாய்க்கு நான்கு மற்றும் எட்டாம் பார்வையும் உண்டு.
இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் ஒரு பாவகத்தினையையோ அல்லது கிரகத்தினையையோ சுபத்துவப்படுத்தி அந்தபாவகத்தையோ அல்லது கிரகத்தினையையோ வலுப்படுத்துகிறது.
மாறாக இயற்கை பாவ கிரகங்களால் பார்க்கப்படும் பாவமும் அதில் உள்ள கிரகங்களும் பாவத்தும் ஆக்கி அந்த தசை காலங்களில் கெடு பலனைத் தருகிறது பொதுவாக அந்த கிரகமும் அல்லது அந்த பாவமும் வலுவிழக்கிறது.
குரு பகவான் இருக்கும் வீட்டையும்,பார்க்கும் கிரகத்தையும் மற்றும் பார்க்கப்படும் ஸ்தானத்தினையும் சுபத்துவப்படுத்தும்.
சனி பகவான் இருக்கும் வீட்டையும் மற்றும் சனி பகவான் பார்க்கப்படும் கிரகத்தையும் மற்றும் அதன் ஸ்தானத்தையும் தனது தொடர்பால் கெடு பலனைத் தர செய்வார்.
ஒரு கிரகத்துடன் சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.பாவத்துவ தன்மையை அடைய செய்யும்..இந்த அமைப்பில் ராகு பகவான் சேர்ந்து இருப்பின் கூடுதலான பாவத்துவ நிலையினை அடைய வைக்கும். ஒரே ஒரு குரு பகவான் பார்வை செய்தால் ஒட்டுமொத்த பாவத்துவ தன்மையை நீக்கி விட்டு சுப பலன்களை தர ஆரம்பித்து விடும் என்பது விதியாகும்.
ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது முதலில் அதன் பாவத்துவ நிலையினை கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவாக அதன் சுபத்துவ நிலையினை நாம் அவசியம் பார்க்க வேண்டும்.
உதாரணமாக கும்பத்தில் சூரியன், புதன் ,சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் சேர்ந்திருந்தால் இதனுடைய நிலையை ஆராய்ந்து பார்க்க ஒருவேளை கடகத்தில் இருந்து சனிபகவான் இவர்களைப் பார்த்தால் ஒட்டுமொத்த கிரக அமைப்புகளும் பாவத்துவ நிலையை அடைந்துவிடும்.அந்த பாவகத்தில் உள்ள கிரகங்களின் ஆதிபத்தியம் மற்றும் காரக பலன்கள் பாதிக்கப்படும்.
மாறாக சிம்ம வீட்டிலிருந்து குரு பார்த்தாலும் அல்லது மிதுனத்தில் இருந்த குரு பார்த்தாலும் ஒட்டுமொத்த கிரகத்தையும் சுபத்துவமடைய செய்துவிடும். ஆதிபத்திய பலன்களை சிறப்பாக தனது தசையில் தரும்.ஜாதக கட்டத்தில் உள்ள ஒரு கிரகம் ஆதிபத்திய பலனை தனது தசை காலங்களில் மட்டும் தரும் ஆனால் காரக பலன்களை மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் தரும்.
குருவின் பார்வை சுபத்துவ வலிமையின் சதவீத அளவை பொறுத்தமட்டில் கும்பத்தில் உள்ள கிரகங்களை மிதுனத்தில் உள்ள குரு பகவான் பார்ப்பதை விட சிம்மத்தில் உள்ள குரு பகவான் பார்ப்பது அதிக சதவீதம் குருவின் பார்வை வலிமை இருக்கும்.
இதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது இரண்டு வகைகளாக கருதலாம்.
1) குருவின் சமசப்தம பார்வைக்கு 100% வலிமை அதிகம் .
மற்றொன்று
2)குருபகவான் சிம்ம வீட்டில் இருந்து பார்க்கும் பொழுது தனது நட்பு வீட்டிலிருந்து பார்வை செய்கிறார். மிதுனத்தில் இருந்து குருபகவான் பார்ப்பது தனது பகை வீட்டில் இருந்து குரு பகவான் பார்வை செய்கிறார் என்கிற அளவிலும் பார்வை சுபத்துவ சதவீத தன்மை மாறுபடும்.
சிம்ம வீட்டில் சந்திர பகவான் இருந்தால் கும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களும் பௌர்ணமி யோகத்தால் முழுமையான சுப நிலையை அடைகிறது.
ஒரு சில நேரங்களில் குரு பகவானுடைய பார்வை மற்றும் சனிபகவானுடைய பார்வை நிலையை ஆராயும் போது அவை அந்த இடத்தைப் பார்ப்பது போல் தோன்றினாலும் , பாகை(degree) அடிப்படையில் ஆராய்ந்து கவனிக்காமல் பார்த்தால் அதன் பார்வை குறிப்பிட்ட இடத்திற்கு விழுவதுபோல் தெரிந்து அந்த இடத்தில் உள்ள கிரகத்தையும் மற்றும் பாவத்தையும் சுபத்துவ நிலையை அடையவோ அல்லது வலிமை நிலையினை அடையவோ செய்யும் எனா பலனளிப்போம். இதுபோன்ற நிலையில் பலன் அளிக்கும் போது அவற்றின் பலாபலன் தவறுதல் அடைய வாய்ப்பு உண்டு.
உதாரணமாக மீனத்தை லக்கினமாக கொண்டு மீனத்தில் குரு பகவான் இருந்து திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருந்தால் பாகையை அடிப்படையாக கொண்டு அதன் பார்வை நிலையை ஆராய்ந்து பார்க்காமல் பார்த்தால் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் உள்ள சனி பகவானின் மீது குரு பகவான் பார்த்து சுபத்துவ நிலையை அடையச் செய்து விட்டது எனலாம் ..எனவே தன்னுடைய 3 ,7 , 10 ஆம் சனியின் தீய பார்வையானது குரு பகவானால் கெடுபலன் வடிகட்டப்பட்டு அந்த சனி பகவானுடைய பார்வை சர்வ நாசம் செய்யாது.இங்கு சனி பகவானின் மூன்றாம் பார்வை களத்திரஸ்தானமான ஏழாம் இடத்தையும், ஏழாம் பார்வை லாப ஸ்தானத்தையும் மற்றும் பத்தாம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்கிறார்.
ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருப்பது புத்திர தோஷத்தையும், களத்திர ஸ்தானத்தையும் குடும்ப ஸ்தானத்தில் சனி பார்ப்பதால் கால தாமத திருமணத்தை தர வாய்ப்பு உண்டு.
அதேநேரத்தில் டிகிரி அடிப்படையில் குரு பகவானுடைய பார்வை நிலையை ஆராயும்போது குருபகவான் மீனத்தில் 28 பாகைக்கு மேலாக இருந்தால் தனது ஐந்தாவது பார்வை கடக வீட்டில் முதல் இரண்டு டிகிரியில் உள்ள சனி பகவானை பார்வை செய்யாது. கடக வீட்டில் சனிபகவான் முதல் இரண்டு டிகிரியில் உள்ள குரு பகவானுடைய பார்வை ஐந்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் மீது பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது.
இந்த நிலையில் பகவானுடைய மூன்று மற்றும் பத்தாம் பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்வதால் திருமண தடையை தந்து விடுகிறது.
மேலும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் புத்திர தடையை உருவாக்குகிறது மேலோட்டமாக நாம் பலன் சொல்லும்போது மீனத்தில் குரு பகவான் இருப்பதாக வைத்துக் கொண்டு பலனளிக்க இதுபோன்ற நிலைகளில் நாம் சொல்லும் பலன் தவறாகப் போய்விட வாய்ப்பு உண்டு.
சனி பகவானுடைய கொடூர பார்வையானது சில நேரங்களில் இயற்கைச் சுபக்கிரகங்கள் உடைய வீடுகளில் இருந்து பார்க்கும்போது அந்தப் பார்வையில் கெடுபலன் சற்று குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
மாறாக தன் ஜென்ம விரோதியான வீட்டில் இருந்து பார்க்கும் பொழுது அதன் பார்வை அதிக கெடு பலனை தந்து விடுவது உண்டு.
உதாரணமாக சனி பகவான் சுப வீடுகளான தனுசு மற்றும் மீனத்திலும் சுக்கிர பகவான் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாத்திலும் இருந்து பார்க்கும் பொழுது இயற்கை சுபகிரக வீட்டிலிருந்து பார்வை செய்வதால் அவற்றால் பார்க்கப்படும் ஸ்தானம் அதிக பாதிப்புகளில் இருந்து விடுபடுவது உண்டு.
அதே நேரத்தில் ஒளிக் கிரகங்களான சூரிய , சந்திர வீடுகளிலும்(சிம்மம் மற்றும் கடகம் ) , பாப கிரகமான செவ்வாயின் வீடுகளிலிருந்தும்( மேஷ் மற்றும் விருச்சிகம்) பார்க்கின்ற சனிபகவான் தனது பார்வையில் அதிகமாக கெடுபலனைத் தர வாய்ப்புண்டு.
சூரிய பகவான் தனது ஏழாம் பார்வையால் பார்க்கப்படும் இடத்தில் உள்ள கிரகமான ராகு கேது மற்றும் சந்திர பகவான் தவிர்த்து இருக்கக்கூடிய குரு ,சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களையும் அதி வக்கிரம் அடையச் செய்கிறது.
சூரியன் பகவானுக்கு ஏழாமிடத்தில் சந்திர பகவான் வரும்பொழுது பௌர்ணமி யோகத்தையும் , நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள் கிரகண தோசத்தை தரும் என்பதால் அவை வக்கிரம் அடைவதில்லை.
வளர்பிறைச் சந்திரனுக்கு ஏழாம் பார்வை உண்டு என்றாலும் அதன் ஒளியானது முன்பின் ராசிகளில் விழும் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் சந்திராதி யோகம் வேலை செய்கிறது.வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு ,எட்டு இடங்களில் இயற்கைச் சுபக்கிரகமான குரு, புதன், சுக்கிரன் ஆகியவை இருக்கும் பொழுது சந்திராதி யோகம் பெற்று அதன் தசா காலங்களில் யோக பலனை அள்ளித் தருகிறது.
சனிபகவானுடைய பார்வையானது குரு சந்திரன் மற்றும் செவ்வாய் பகவானை அதிகளவில் பாவத்துவ நிலையை அடைய வைக்கிறது. அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பார்வையானது குரு மற்றும் சந்திரன் மீது விழும் பொழுது நட்பு கிரகம் என்ற வகையில் செவ்வாயின் பார்வை குரு மற்றும் சந்திரர்களை அதிகமாக பாதிப்பதில்லை.
ஒரு இயற்கை சுப கிரகம் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு கேதுவுடன் சேரும் பொழுது பாவத்துவ நிலையை அடைகிறது. இவ்வாறு பாவத்துவ நிலையை அடைந்த கிரகங்களை இயற்கைச் சுபக்கிரகமான குரு ,வளர்பிறைச் சந்திரன் , தனித்தபுதன் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வையைப் பெறும் பொழுது அவை சுபத்தன்மை அடைந்து நல்ல பலனைத் தருகிறது.
இயற்கைப் பாவக் கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரு இடத்தைப் பார்த்தாலும் மற்றும் தனித் தனியாக ஒரு ஸ்தானத்தைப் பார்த்தாலும் அந்த ஸ்தானத்தில் உள்ள கிரகத்தையும் அந்த பாவத்தையும் அதிகமாக பாதிப்படைய செய்கிறது.
மேற்கண்ட வகையில் ஜோதிடர்கள் பல்வேறு பார்வை நுணுக்கங்களை ஆய்வு செய்து பலனளிக்க வேண்டும்.
தசா புக்திகளும் மற்றும் கோசார பலன்களும் ஒரு மனிதன் தனது வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது.
ஒருவருக்கு தசா நடத்தக்கூடிய கிரகத்தின் பலனை துல்லியமாக ஜாதகருக்கு பலன் சொல்ல கிரக பார்வை நுணுக்கங்கள் இன்றியமையாத ஒன்றாகும் . நிச்சயமாக இந்த பதிவு ஜோதிட ஆர்வலர்களுக்கு ஒரு பயனுள்ளதாக இருக்கும் என்று எல்லாம் வல்ல இறைவனை அருளால் நம்புகிறேன்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570899
Email ; masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment