"ஜாதக கட்டத்தில் ஒரு ஸ்தானதிபதியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரக கிரகமும்"-ஓர் ஆய்வு.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் எந்த விஷயம் (matter) பற்றிய பலனைப் பார்க்க வேண்டுமோ, அந்த விஷயம் தொடர்பான ஸ்தானத்தின் அதிபதி மற்றும் அந்த விஷயம் தொடர்பான காரக கிரகம் ஆகிய இரண்டையும் கட்டாயம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஆய்வு செய்து பார்க்கப்படும் போது அவ்விரு கிரகமும் , லக்னாதிபதிக்கு நண்பர்களாக இருந்தால் அந்த விஷயம் சார்ந்த நற்பலன்கள் சாதகனுக்கு முழுமையாக கிட்டும்.
அந்த ஸ்தான அதிபதியும் மற்றும் காரக கிரகமும் லக்னாதிபதிக்கு பகைவர்களாக இருந்தால் அந்த விஷயம் சார்ந்த நற்பலன்கள் ஜாதகருக்கு முழுமையாக கிட்டுவதில்லை.
அந்த ஸ்தான அதிபதியும் மற்றும் காரக கிரகமும் லக்னாதிபதிக்கு நண்பர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உச்சம், ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் முதலிய வகைகளில் பலம்பெற்று நின்றிருந்தால அந்த விஷயம் சார்ந்த நன்மைகளை சாதகன் எந்நாளும் அடைந்து கொண்டிருப்பான்.
உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு மேற்கூறிய "ஸ்தானாதிபதியும் மற்றும் காரகனும்"- என்ற அடிப்படையில் ஆய்வு செய்து பார்ப்போம்.
மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு வாகனம் சார்ந்த பலன்களை பார்க்க வேண்டுமென்று உதாரணமாக வைத்துக் கொள்வோம்.
வாகன ஸ்தானம் என்பது நாலாம் இடம் ஆகும். மேஷலக்னத்திற்கு நான்காம் இட அதிபதி சந்திரன் ஆவார்.
இந்த சந்திரன் லக்னாதிபதியான செவ்வாய்க்கு நெருங்கிய நண்பர் ஆவார். அதேபோல வாகன காரகன் சுக்கிரன் ஆவார். சுக்கிரனும் லக்னாதிபதியான செவ்வாயுடன் பகையோ, நட்போ இல்லாத சமம் என்ற நிலையில் உள்ளவர் .ஆக அடிப்படையில் வாகனம் சார்ந்த நன்மைகளே மேஷ லக்னத்திற்கு எட்ட வேண்டும் என்று ஆகிறது.
ஆனால் இது ஒரு பொதுவான பலன்தான் சந்திரனும் மற்றும் சுக்கிரனும் பலவீனப்பட்டு மோசமான நிலையில் நின்றிருந்தால் வாகனம் சார்ந்த நற்பலன்களுக்கு பதிலாக தீய பலன்களே அதிகம் நடைபெறும்.
இதேபோல மற்றொரு உதாரணமாக மீன லக்னத்தில் எடுத்துக் கொள்வோம். மீன லக்னத்திற்கு நான்காம் இட அதிபதி புதனும் மற்றும் வாகன காரகனான சுக்கிரனும் லக்னாதிபதியான குருவுக்கு ஆகாதவர்கள் ஆவார்கள் . எனவே அடிப்படையிலேயே வாகனம் சார்ந்த கெடுபலன்களை மீன லக்கினத்திற்கு நடைபெற வேண்டும் என்று ஆகிறது. ஆனால் புதனும், சுக்கிரனும் நன்னிலையில் பலம் பெற்றிருந்து இருப்பார்களேயானால் தீய பலன்களுக்கு பதில் நற்பலன்களே மிகுதியாக நடைபெறும்.
இந்த அமைப்பில் என்னதான் நற்பலன்கள் மிகுதியாக நடைபெற்ற போதிலும் அடிப்படையில் வாகன ஸ்தானாதிபதியான புதனும் மற்றும் வாகன காரகனுமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் லக்னாதிபதிக்கு ஆகாதவர்கள் என்பதால் மிகக் குறைந்த அளவில் அதாவது எந்த வகையிலாவது வாகனம் சார்ந்த கெடுபலன்கள் நடக்கவே செய்யும்.
எதைப் பற்றிய பலன் அறிய வேண்டும் என்றாலும் மேற்சொன்ன பொது விதியை கவனத்தில் எடுத்துக்கொண்டு கிரகங்கள் அமைந்திருக்கின்ற விதங்கள், பலம் மற்றும் பலவீனங்கள் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து பலன் நிர்ணயித்தால் பலன்களை கூடுதல் துல்லியத்துடன் சொல்ல முடியும்.
ஒரு ஸ்தானத்திற்குரிய அதிபதியும் மற்றும் அந்த ஸ்தானத்திற்கு உரிய காரக கிரகமும் நட்பு ,ஆட்சி மற்றும் உச்சம் போன்ற பலமான நிலையில் நின்று இருந்தாலும், சுபர்களுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தாலும் , இவ்வாறு இருப்பதோடு மட்டுமல்லாமல் லக்னாதிபதிக்கு இவ்விரு கிரகங்களும் நண்பர்களாக இருந்தால் மட்டுமே அந்த ஸ்தானம் சார்ந்த நற்பலன்கள் அந்த சாதகன் அபரிதமாக அனுபவிக்கும் யோகத்தை பெறுவான்.
ஸ்தான மற்றும் காரக பலன்கள் பங்கப்படுதல்.
ஒரு ஸ்தானத்தின் அதிபதியோ அல்லது காரகரோ இருக்கின்ற ராசியில் உடன் பாவர்கள் இணைந்து இருந்தாலும்,
அல்லது
அந்த ராசிக்கு இருபுறமும் பாவிகள் இருந்து "பாவ கர்த்தாரி யோகம்" அடைந்து இருந்தாலும்,
அல்லது
அந்த ராசிக்கு 5 ,9 எனும் திரிகோண ராசிகளில் பாவர்கள் வீற்றிருந்தாலும்
அல்லது
பாவர்கள் பார்வையிட்டு இருந்தாலும் அந்த ஸ்தானம் மற்றும் காரகம் சார்ந்த நற்பலன்கள் குறைந்து போய்விடும்.
ஆனால் மேற்கண்ட இந்த விதிகளில் சில விதிவிலக்குகள் அடிப்படையில் பலன்கள் மாறுபடக்கூடும்.
1) ஒரு ஸ்தானாதிபதி உடனோ மற்றும் காரகருடனோ பாவர் இணைவது அது சார்ந்த பலன்களை குறைவுப்படுத்தும் என்பது சொல்லப்பட்டிருந்தாலும், ஆனால் இணைவில் ஏதாவது யோக அமைப்பு வலுவாக உண்டாகி இருக்குமானாலோ அல்லது இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு சுபத்துவ நிலை அடைந்திருந்தாலும் அந்த நற்பலன்கள் குறைவதற்கு பதிலாக கூடவே செய்யும்.
உதாரணமாக சந்திரன் ஒரு ஸ்தானத்திற்கு அதிபதியாக வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் பாவக்கிரகம் இணைந்து விட்டது. எனவே இந்த ஸ்தானத்தில் பலன்கள் பாதிக்கப்படும் என்று முடிவுகட்டி விடக் கூடாது. ஏனெனில் சந்திரன்+செவ்வாய் சேர்க்கை என்பது
"சந்திர மங்கள யோகம் என்ற பிரிவின்கீழ் வரும் இவ்விரு கிரகங்களும் நல்ல ஆதிபத்தியம் பெற்று நல்ல ஸ்தானங்களில் பலமாக நின்று இருந்தால் சந்திரமங்கள யோகத்தின் பலன்கள் நன்முறையில் நிச்சயம் கிட்டும் எனவே இந்த சேர்க்கையை நன்மைகளைத் தரும் சேர்க்கையாக கருத வேண்டுமே அல்லாமல் தீமைகளை மிகுதியாக கொடுக்கும் சேர்க்கையாக எண்ணிவிடக்கூடாது.
2) பாவ கர்த்தாரி அமைப்பு
ஸ்தான அதிபதி அல்லது காரக கிரகத்தின் இருபுறமும் பாவ கிரகங்கள் இடம் பெறும்போது அவை பாபகர்த்தாரி அமைப்பை பெற்று அந்த கிரகம் பலவீனம் அடையும் என்பது பொதுவிதி.
உதாரணமாக வாகனத்தை பற்றி ஆய்வு செய்யும் மேஷ லக்னத்திற்கு நான்காம் இடத்தில் சந்திரன் ஆட்சி பெற்ற நிலையிலிருந்து, மிதுன வீட்டில் சனியும் மற்றும் சிம்ம வீட்டில் ராகுவும் அமர்ந்து இருக்கும் பொழுது பாபகர்த்தாரி அமைப்பு பெற்றாலும் அந்த சந்திரன் ஆட்சி போன்ற ஸதான நிலையில் இருப்பதால் அவை பாதிப்புக்குள்ளாவது இல்லை. எனவே நற்பலன்களை தரும்.
3) இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை தொடர்பு பெற்ற அமைப்பை பெருமானால் அந்த பாவ கிரக சேர்க்கை சுபத்தன்மை அடைந்து நன்மையை தந்துவிடும்.
3) வந்து சேருகின்ற பாவ கிரகத்தின் ஆதிபத்தியத்தை எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .
உதாரணமாக ஒன்பதாம் அதிபதி யோடு ஒரு பாவ கிரகம் இணைவதாக கொள்வோம். அந்தப் பாவ கிரகமானது ஸ்தான அடிப்படையில் பத்தாம் இடத்து அதிபதியாக இருந்தால் அந்த சேர்க்கையில் "தர்ம-கர்மாதிபதி யோகம் ஏற்பட்டு விடும். அந்த அடிப்படையில் அந்த சேர்க்கையானது நற்பலன்களை மிகுதியாக வழங்கும்.
எனவே ஒரு விஷயத்தில் பலனை அளிக்க
முற்படும் பொழுது பல கூறுகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் ஒவ்வொரு விதிகளுக்குள்ளும் ஒரு விதிவிலக்குகளும் மற்றும் சூட்சும உண்மைகளும் இருக்கும் என்பதை அனுபவ பூர்வமாக ஆராய்ந்து உணர்ந்து பலன் அளிக்கப்பட வேண்டும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.aatroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment