இருள் கிரகமும் மற்றும் நிழல் கிரகங்களும் தரும் மாற்றங்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் இருள் கிரகமான சனி பகவானும்,
நிழற் கிரகங்கள் அல்லது சாய கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு மற்றும் கேது பகவானும் எந்த ஸ்தானத்துடன் அல்லது எந்த கிரகத்துடன் எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத நிலையில் தொடர்பு கொள்கிறதோ அந்த ஸ்தானம் அல்லது அந்த கிரகத்தின் வலிமையை குறைத்து நல்ல பலனைத் தர விடாமல் செய்து விடுவதுண்டு.இவை பொது பலன் ஆகும்.
சனி , ராகு மற்றும் கேது தொடர்பு பெறும் ஸ்தானம் அல்லது கிரகமானது தரும் பலன் அந்த வீட்டு அதிபதி, பார்க்கக் கூடிய கிரகங்கள் மற்றும் அவை பெற்ற நட்சத்திர சாரம் போன்ற அமைப்பை பொறுத்து பலனில் மாறுபாடு ஏற்படலாம்.
சூரியன் பகவானிடம் தொடர்புகொள்ள தந்தை மகன் உறவு நிலையை பாதிக்கும். அரசு வேலை கிடைப்பதில் தாமதப்படுத்தும். எதையும் தலைமையேற்று நடத்தும் தன்மை அற்றவராக இருப்பார்.
சந்திர பகவான் உடன் தொடர்பு கொள்ளும் பொழுது உறுதியான மனநிலை அற்றவராகவும் ,
தாய் வழி உறவுகளில் பாதிப்பு அடைபவராகவும், கால தாமத திருமணம் அல்லது கணவன் மனைவி உறவு நிலைகளில் பாதிப்பு போன்றவற்றைத் தரலாம்.
சுக்கிர பகவான் உடன் தொடர்பு கொள்ளும்பொழுது வண்டி வாகன யோகம் அற்றவராகவும், நீடித்த தாம்பத்திய சுகம் அற்றவராகவும் மற்றும் சொந்த வீடு கட்டும் யோகம் இல்லாதவராகவும் இருப்பர்.
செவ்வாய் பகவான் உடன் தொடர்பு கொள்ளும் போது விவசாயம் செய்யும் யோகம் அற்றவராகவும்,சகோதர உறவுகளுக்கு இடையே அன்யோன்யம் அற்றவராகவும் மற்றும் எதையும் துணிச்சலுடன் செய்யும் தகுதியற்றவராகவும் இருப்பர்.
புதன் பகவான் உடன் தொடர்பு கொள்ளும் போது மாமன் வழி உறவுகளில் பாதிப்பை உண்டாக்கும்.பாவியோடு சேர்ந்த புதன் பகவான் பாவ தன்மையை பெறுவர்.கற்ற வித்தையில் நிபுணத்துவம் பெற இயலாத நிலை உண்டாகும்.
இயற்கை சுப கிரகமான குரு பகவானுடன் இணையும் பொழுது குரு சண்டாள யோகம் தந்து அவருக்கு ஆன்மீக தன்மை அற்றவராகவும், புத்திரபாக்கியம் காலதாமதமாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும் சூழலாகவும் அமைகிறது.
லக்கனத்தில் இயற்கைப் பாபக் கிரகமான சனி, ராகு மற்றும் கேது அமரும்போது இருள் கிரகம் என்ற வகையில் இலக்கின ஸ்தானம் பாவத்துவ நிலை அடையும். லக்னத்தில் சனி பகவான் அமரும் பொழுது குள்ள தன்மையுடையவராகவும், சோம்பேறிதனம் உடையவராகவும், களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் என்ற வகையில் காலதாமத திருமணத்தை தரும்.
இதே போல நிழல் கிரகங்களான ராகு பகவான் லக்கனத்தில் அமரும்பொழுது ஏழாம் இடத்தில் கேது பகவானும், லக்கனத்தில் கேது பகவான் அமரும் பொழுது ஏழாமிடத்தில் ராகு பகவானும் இடம்பெறும் என்ற வகையில் களத்திர தோஷம் தந்து திருமண தடையை உருவாக்கும்.
லக்கனத்தில் ராகு பகவானும் வரும்பொழுது மெல்லிய தேகம் உடையவராகவும், மாறுபட்ட வகையில் சிந்திக்கும் தன்மை உடையவராகவும் காணப்படுவார்.
லக்னத்தில் கேது பகவான் நம்பகத்தன்மையை மிக்கவராகவும், அதேநேரத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும் மற்றும் எந்த வேலையையும் ஒத்திப் போடும் தன்மை உடையவராக இருப்பார்.
தனம் ,வாக்கு ,குடும்பம் மற்றும் நேத்திர ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமரும் போது குடும்ப ஸ்தானம் என்ற வகையில் காலதாமதம் திருமணத்தை தரும். நல்லதே நினைத்து சொன்னாலும் மற்றவர்களுக்கு அது கெடுதலாக நினைக்கத்தோன்றும்.
இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும்போது கபட தன்மை உடையராகவும், சூழ்ச்சித் திறன் உடையவராகவும் மற்றும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை அற்றவராகவும் கால தாமத திருமணத்தை தருபவராகவும் இருப்பர்.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் கேது பகவான் அமரும்போது வாக்கு பலிதம் உடையவராகவும் ,குறி சொல்லும் பூசாரியாகவும், அதேநேரத்தில் காலதாமதமான திருமணத்தடை உடையவராகவும் காணப்படுவார்.
இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும்பொழுது எட்டாம் இடத்தில் கேது பகவானும் அல்லது இரண்டாம் இடத்தில் கேது பகவான் அமரும்போது எட்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும் என்ற வகையில் மாங்கல்ய தடை தரக் கூடிய வாய்ப்பு உண்டு.
சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் இராகு மற்றும் கேது பகவான் அமரும்போது சகோதர தோஷம் உடையவராக காணப்படுவார். மூன்றாமிடத்தில் சனி பகவான் அமரும்பொழுது அவை மறைவு ஸ்தானம் என்ற வகையில் கெடு பலன்களை தந்து விடுவதில்லை.
சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சனி,ராகு மற்றும் கேது பகவான் அமரும்போது தன் சுகம் , தாய் சுகம் மற்றும் கல்வியால் சுகம் , வண்டி வாகன யோகம் அற்றவராகவும் இருப்பர்.
நான்காம் இடத்தில் கேது மற்றும் மாந்தி இணைந்து நான்காம் அதிபதியும் கெட்ட சூழலில் வாடகை வீட்டில் வசிக்க கூடிய நிலை உருவாகும்.
புத்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்தில் சனி பகவான் வரும்போது மாமன் வர்க்கங்களுக்கு ஆகாது.
ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் அமரும்போது புத்திர தோஷத்தை உண்டாக்கும். ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமரும்போது ஆன்மீகத் தன்மை உடையவராக இருப்பார்.
ஆறாமிடத்தில் பாவக் கிரகங்களான சனி, ராகு கேது அமரும்பொழுது எதிரியை வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி பகவான் மற்றும் நிழற் கிரகங்களான ராகு கேது இடம்பெறும் பொழுது திருமண வாழ்வில் பாதிப்பை உண்டாக்குகிறது.
ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தில் சனிபகவான் அமரும்பொழுது ஆயுள் பலத்தை தவிர ஏனைய நல்ல பலன்களை தந்து விடுவதில்லை.
மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் ராகு மற்றும் கேது அமர்வது திருமண தடையை உருவாக்கும்.
பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில் சனிபகவான் மற்றும் நிழற் கிரகங்களான ராகு பகவான் மட்டும் அமரும்பொழுது
தான தர்ம குணம் அற்றவராகவும், தந்தைவழி உறவுகளில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
ஒன்பதாம் இடத்தில் கேது பகவான் அமரும்போது ஆன்மீகத் தன்மை உடையவராக இருப்பார்.
பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்ற வகையில் சனி ,ராகு, கேது அமரும்பொழுது அவை சார்ந்த தொழிலை சுபத்துவம் பெற்ற நிலையில் தரக்கூடிய வாய்ப்பு உண்டு.
லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் சனி, ராகு மற்றும் கேது அமரும்போது மூத்த சகோதரர் பாதிப்பு உண்டாகும். அந்நிய தேசம் செல்ல வைக்கும்.
விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும் போது அந்நிய தேசம், அந்நிய மனிதர் மற்றும் அந்நிய மொழி போன்றவற்றில் தொடர்பினை உண்டாக்கும்.
12ஆம் இடத்தில் கேது பகவான் அமரும்போது முக்தி யோகத்தை ஜாதகருக்கு தருகிறது. அதாவது மறு பிறப்பற்ற நிலையை தருகிறது.
நன்றி
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment