Monday, 2 June 2025

கோள்களின் கோளாட்டம் (நிழல் கிரகங்கள்)

 கோள்களின் கோளாட்டம்-.

(நிழல் கிரகங்கள்)




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  நவ கிரகங்கள் மனித வாழ்வை எவ்விதம் வழி நடத்தி செல்கிறது என்பதை ஜோதிட ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் தொடர் பதிவாக எழுதி வருகிறேன்.இன்றைய பதிவில் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் கூடிய ராகு மற்றும் கேது பகவான் ஆனவர் மானிட வாழ்விற்கு தரக்கூடிய மகத்தான பணிகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


    நிழல் கிரகங்களில் ராகு பகவானை கரும்பாம்பு என்றும், கேது பகவானை செம்பாம்பு என்றும் அழைக்கிறோம்.

 எல்லா கிரகங்களும் முன்னோக்கி (cloockwise ) செல்லும் பொழுது நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் மட்டும் பின்னோக்கிச் 

(anticlock wise)செல்லக்கூடிய தன்மை படைத்தது. எனவே தான் நிழல் கிரகங்களுக்கு வக்கிர கதி என்பது கிடையாது


   நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இரண்டிற்கும் சொந்த வீடு என்பது கிடையாது. எந்த வீட்டில் இருக்கின்றதோ அந்த வீட்டையே சொந்த வீடாக கருதப்படுகிறது.


    நிழல் கிரகங்கள் என்பது பருப்பொருள் இல்லாத கிரகங்களாகும் . எனவே இவற்றிற்கு திருக் பலம் என்று அழைக்கப்படும் பார்வை பலம் என்பது கிடையாது. உச்சம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது .திக் பலம் என்பதும் கிடையாது.


   நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது பகவானுக்கு பலன் எடுப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இவற்றிற்கு சொந்த வீடு கிடையாது என்பதால் இந்த கிரகங்கள் இருக்கும் வீட்டின் அதிபதியை போலவும், இந்த கிரகங்களை பார்வை செய்யும் கிரகங்கள் மற்றும் இணைந்து இருக்கும் கிரகங்கள் ஆகியவற்றின் பலன்கள் அனைத்தையும் எடுத்து தனது தசை மற்றும் புக்திகளில் செய்யக்கூடிய தன்மை படைத்தவைகளாக திகழ்கிறது.


நிழல் கிரகங்களில் ராகு பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை மட்டுப்படுத்தும் ஆனால் அதே நேரத்தில் சுப கிரகங்கள் இணையும்போது தான் சுபத்துவமாகி தன்னுடன் இணைந்த சுப கிரகங்களை பாவத்தன்மை அடைய வைக்கிறது. உதாரணமாக ராகு பகவான் குருவுடன் இணையும் பொழுது ராகு குருவால் சுப தன்மையை அடைந்து விடும்.ஆனால் அதே நேரத்தில் ராகு இணைவால் குரு பகவான் பாவ தன்மையை அடைந்து விடுகிறது.எனவே இங்கு ராகு தசை ஆனது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் குரு தசை சிறப்பாக இருக்காது.


ராகு பகவான் எந்த கிரகத்துடன் இணையும் பொழுது அந்த கிரகத்தின் காரக மற்றும் ஆதிபத்தியம் பலன்கள் ஆகிய இரண்டையும் மட்டுபடுத்தி விடுகிறது.வேறு வகையில் சுபர் பார்வை பெறும் பொழுது மட்டும் பலன்கள் மாறிவிடுகிறது.


   ராகு பகவான் பாவ கிரகங்களுடன் இணையும் பொழுது அதாவது சனி செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகியவற்றுடன் இணையும் பொழுது மிகவும் கடினமான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.


   நிழல் கிரகங்களில் செம்பாம்பு என்று அழைக்கக்கூடிய கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை உயர்த்திக் கொடுக்கிறது கொடுக்கிறது..


   கேது பகவான் உடன் குரு பகவான் இணையும் பொழுது "கேள யோகம்" என்று அழைக்கப்படும் கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.


கேது பகவான் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு பாவ கிரகங்கள் உடன் தனி தனியாக இணையும் பொழுது சூட்சும வலுவை தருகிறது.அதே நேரத்தில் கேது பகவான் சனியுடன் இணைந்த நிலையில் செவ்வாய் பார்த்தாலும் அல்லது இணைந்தாலும் சூட்சும வலுவை தராது.மாறாக கடுமையான கெடு பலனையே ஜாதகருக்கு கொடுக்கிறது.


  கேது பகவான் ஆனவர் சனி மற்றும் குரு பகவான் ஆகிய இருவரின் தொடர்பை பெறும் நிலையில் ஆன்மீக தன்மை படைத்தவராக ஜாதகர் காணப்படுவார்.


      நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் திருமண ஸ்தானமான லக்கனம் என்ற ஒன்றாமிடம, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தாளமான எட்டாம் இடங்களில் இடம்பெறும் பொழுது களத்திர தோஷம் என்ற நாக தோஷத்தை தருகிறார் இதனால் கால தாமத திருமணத்தை தருவார்.


   லக்கனத்தில் ராகு பகவான் இருக்கும் பொழுது ஏழாம் இடத்தில் கேது பகவான் இடம் பெறுவார்.இதேபோல இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இடம் பெறும் பொழுது கேது பகவான் எட்டாம் இடத்தில் இடம் பெறுவார்.


 ஏழாம் இடத்தில் ராகு பகவான் இடம் பெறும் பொழுது லக்கினத்தில் கேது பகவானும் , இதேபோல் எட்டாம் இடத்தில் ராகு பகவான் இடம் பெறும் பொழுது குடும்ப ஸ்தானத்தில் கேது பகவான் இடம் பெறுவார் .


    மேற்கண்ட இதே போன்ற அமைப்பானது திருமண தடை அல்லது நல்ல வாழ்க்கை துணை அமைவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றாலும் அந்த வீட்டின் அதிபதி மற்றும் காரக கிரகமான சுக்கிரன் ஆகிய இருவரையும் பொறுத்து பலனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


    சில நேரங்களில் 1,2,7,8 ஆம் இடங்களில் நிழல் கிரகங்கள் இடம் பெற்றாலும் சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஜாதக பலன்களை மாற்றி அமைத்து விடுகிறது.


    புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது இடம் பெற்று இருந்தால் புத்திர தோஷத்தை தர மாட்டார். ஆனால்

 கரும் பாம்பு என்று அழைக்கக்கூடிய ராகு பகவான் இடம் பெற்றால் புத்திர தோஷத்தை தரும் என்றாலும் அந்த வீட்டு அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகியவற்றை பொறுத்து பலன் அமைகிறது.


    ஐந்தாம் இடத்தில் உள்ள ராகு பகவானை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது புத்திர தோஷம் தவிர்க்கப்படுகிறது.


    ராகு பகவான் மேஷம் ,ரிஷபம், கடகம் , கன்னி மற்றும் மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் நின்று அவையே லக்கினத்திற்கு மூன்று,ஆறு ,பத்து ,பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பினை பெற்று தசை நடத்தினால் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகும் யோகம் உண்டாகும்.


  இதேபோல கேது பகவான் சிம்மம் விருச்சிகம் மற்றும் கும்பம் போன்ற வீடுகளில் நின்று இயற்கை சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்று தசை நடத்தினால் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


  நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது, ஸ்தான பலம் கிடையாது, திக்பலம் கிடையாது, பார்வை கிடையாது, வாரத்தின் ஏழு நாட்களில் 

ராகு கேதுவுக்கு இடம் கிடையாது மற்றும் ஓரை கிடையாது.


 ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இரண்டிற்கும் ஒரு நாளில் ராகு பகவானுக்கு ஒன்றரை மணி நேரம் ராகு காலம் ஆகவும் மற்றும் கேது பகவானுக்கு ஒன்றரை மணி நேரம் எம் கண்ட நேரமாக பிரித்து வழங்கப்பட்டு உள்ளது .


    "ராகு பகவான் கெடுத்து கொடுப்பார்" "கேது பகவான் கொடுத்து கெடுப்பார் என்று கூறப்படுகிறது 


     இவை மட்டுமல்லாது 

 "ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை" என்றும் கூறப்படுகிறது.


  ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் குரு பார்த்த நிலையில் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் ஆன்லைன் பிசினஸ், ஷேர் மார்க்கெட், அந்நிய தேசம் செல்லுதல், அந்நியர் மூலம் தன வரவு, அன்னிய மொழி மூலம் பிழைத்தல் ,ரேஸ், சீட்டாட்டம், ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கேம்ஸ் போன்ற வகையிலான சூதாட்டம், அரசு விரோத தொழில் மூலமாக பெரும் தனம் ஓட்டல் போன்றவை ராகு பகவான் காட்டும் தொழில் நிலைகள் ஆகும்.


 கேது பகவான் அதிக சுபத்துவ நிலையில் குறி சொல்பவர், பூசாரி, அருள் வாக்கு,தெய்வ சன்னிதானத்தில் அர்ச்சனை , அபிஷேகம் பொருட்கள் வைத்து கடை நடத்துதல் போன்ற தொழில் நிலையில் ஜாதகரை ஈடுபட வைக்கும்.


   நிழல் கிரகங்களான ராகம் மற்றும் கேது பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களைப் போக்க கீழ்கண்ட ஸ்தலங்கள் முக்கிய ஸ்தலங்கள் ஆகும் இந்த இடங்களில் வெள்ளியின் நாகப்பட வடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 


ராகு பகவானுக்கு சனிக்கிழமை தோறும் 9 முதல் 10.30 வரை காலை ராகு காலத்தில் வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.


  1) புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள பேரையூர்.


     2) கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் 


  3)ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காலகஸ்தி


கேது பகவானுக்கு 


1) கீழ பெரும் பள்ளம் 


2) ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி.


ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு நிழல் கிரகங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த ஸ்தலமாக விளங்குகிறது.


 ராகு பகவானுக்கு சனி கிழமையும் மற்றும் கேது பகவானுக்கு செவ்வாய் கிழமையும் உகந்த கிழமை ஆகும் 


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no


097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

          

அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: