Monday, 6 April 2020

சோதிடம் தரும் சூட்சும விளையாட்டு-(1)

சோதிடம் தரும் சூட்சும விளையாட்டு-(1)

                                 

செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு வகைப்படும் என்பார்கள்.

  அதில் சோதிடக் கலையும் ஒன்று ஜோதிடக்கலை என்பது உற்றது உரைத்தல், உறுவது கூறல் ஆகும்.

 கே.பி ஜோதிடம் ,பிரசன்ன ஜோதிடம்,இந்திய வேத சோதிடம் ,நாடி சோதிடம்...என்ற ஜோதிட வகைகளுள் நான் பார்த்து பலன் அளித்து கொண்டிருப்பது  பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் கொண்டு கணிக்கப்படும் இந்திய வேத ஜோதிடம் ஆகும்.

 வாஸ்து சோதிடம், எண் கணிதம், கைரேகை பார்த்தல், மச்ச சாஸ்திரம் ,சகுனம் பார்த்தல், சாமுத்திரிகா லட்சணம், கிளி சோதிடம், ஜோலி உருட்டி பலன் சொல்லுதல். .... போன்ற பலவகை பிரிவுகள் உண்டு.

"காக்கைப்பாடினியார் என்னும் சங்ககாலப் புலவர் காகம் ஏற்படுத்தும் சகுனங்கள் பற்றி அழகாக விளக்குகிறார்.

பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் நகர்வதை தன லாபத்தை தருவதாகவும் இடமிருந்து வலம் வரும்போது தன் நஷ்டத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல ஒருவர் பயணப்பட்டு செல்லும் போது அன்பரை நோக்கி காகம் கரைந்து கொண்டு  வந்தால் அந்த பயணத்தை தவிர்க்க வேண்டும். ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு ஊட்டுகின்ற காட்சியை பார்த்தால் அந்த பயணம் சிறப்பாக அமையும்.

 ஒருவர் பயணத்தின் போது அவரது உடை வண்டி ,குடை அவரது உடல் அல்லது நிழல் காகம் தன் சிறகால் தீண்டினால் அவருக்கு அகாலமரணம் நிகழும்.

ஒரு பயணத்தின் போது அவருடைய உடை ,வண்டி குடை,  அவரது உடல் அல்லது நிழல் ஆகியவற்றில் காகம் தனது எச்சத்தை இட்டால் பயணத்தின் போது உணவு பஞ்சம் இருக்காது.

  ஒரு பெண் தலையில் குடம் வைத்து தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது தலையில் உள்ள குடத்தின் மீது காகம் அமர்ந்திருப்பது போன்ற காட்சி கண்டால் தனலாபம் உண்டாகும்.

காரணமின்றி கரையும் காகம் அந்த ஊருக்கு உணவு பஞ்சம் வரப் போவதையும்,  தேவையில்லாமல் சுற்றித்திரியும் காகத்தை காணும்போது அந்த ஊருக்கு எதிரியால் தொல்லைகள் வரப்போவதையும், இரவில் அசாதாரணமாக சுற்றித்திரியும் காகம் ஆபத்து வரப் போவதையும் சகுணமாக வெளிப்படுத்துகிறது.

ஒருவரின் மேல் தேவையில்லாமல் படும் காகம் அவருக்கு உடல் உபாதைகள் வர போவதையும், ஒரு ஊரு மேல் கூட்டம், கூட்டமாக காகம் பறந்து செல்வதை அந்த ஊருக்கு எதிரிகளால் தொல்லை வரப்போவது என்பதையும் காட்டுகிறது.

மச்சம் இருக்கும் இடத்தை வைத்துப் பலன் அளிப்பது மச்ச  சோதிடம் ஆகும்.

அங்க,அவய அமைப்புகளை வைத்து பலன் அளிப்பதை சாமுத்திரிகா லட்சணம் என்றும் அழைக்கப் படுகிறது.

இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது இப்பொழுது நமக்கு தேவையான இந்திய வேத ஜோதிடம் என்று அழைக்கப்படும் பாரம்பரிய சோதிடமானது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை  அடிப்படையாகக் கொண்டு பலன் அளிக்கப்படுகிறது.

  ஒரு உயிர் பிறப்பானது அவரது ஊழ்வினைக்கு ஏற்ப இவ்வுலகில் கர்ம பலனை அனுபவிக்க பிறப்பாக வந்து பிறப்பு எடுக்கிறது.

 இந்த பிறப்பானது ஊழ்வினைக்கு ஏற்ப எந்த இடத்தில் யாருக்கு எந்த நேரத்தில் பிறப்பாக பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

 அந்த கர்ம வினைக்கு ஏற்ப கர்ம பலனை அனுபவிக்க வானவீதியில் குறிப்பிட்ட இடத்தில் கிரகங்கள் வருகின்ற சூழலில்  வினை பயனை அனுபவிக்கும் பொருட்டு பிறப்பாக இந்த மண்ணில் வந்து பிறக்கிறது.

  ஒருவரது பூர்வ புண்ணிய பலனை கண்டறிய அவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம் கொண்டும் மற்றும் 5-க்கு 5-ஆம் இடமான ஒன்பதாமிடம் கொண்டும் நிர்ணயிக்கப்படுகிறது.

  நாம் இப்பிறப்பில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மற்றும் நிறைவாகவும் வாழ 
முற்பிறப்பில் நாம் செய்த நற்பலன்களே காரணமாக அமைகிறது.

  முற்பிறப்பில் நாம் நற்பலன் செய்திருப்போமா ? அல்லது  பாவபலன்  செய்திருப்போமா? என்பதை முடிவு செய்ய இப்பிறப்பில் நமது  ஜாதக கட்டத்தில் உள்ள திரிகோண ஸ்தானமான 1 ,5, 9ஆம் இடம் துணை புரிகிறது.

  ஒருவரது ஜாதகத்தில் இந்த திரிகோண அதிபதிகள் எந்தவித பாவர்கள் கலப்பின்றி உச்சம், ஆட்சி மற்றும் நட்பு.. போன்ற நிலைகளில் பலமடைந்து அதன் திசை இளம் வயதிலேயே வந்து நம்மை திருப்தி கடலில் ஆழ்த்தியிருந்தால் முற்பிறப்பில் ஏதோ ஒருவிதமான நற்பலனை செய்திருப்போம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். மாறாக இவ்வித அமைப்புகள் பலமிழந்து தரித்திர யோகம் ஆக இருப்பின் அதுவும் முற்பிறப்பில் செய்த பாவம் பலனே ஆகும்.

 யாரொருவர் ஜாதகத்தில் கேந்திர, கோணாதிபதிகள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறி நின்று அவர்களை எவ்வித இயற்கை பாவ கிரகங்களோ அல்லது ஸ்தான அடிப்படையான பாவக்கிரகங்கள் தொடர்பு இல்லாமல் இருந்து அந்தத் திசையானது இளம்வயதிலேயே வந்து அவர்களுக்கு நற்பலனை தருமாயின் அது ஒரு விதமான யோக ஜாதகம் ஆகும்.

  முற்பிறப்பில் ஒரு ஆடவர், பெண்டிரின் உணர்வுகளையும் மதித்து நடந்து இருப்பின் அவர்களுடைய மறுபிறப்பில் அவர்களது ஜாதகத்தில் உள்ள இலக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனுடனும்  எவ்வித பாவர் கலப்பின்றி பலமடைந்து நின்று அவரது இல்லற வாழ்வு இப்பிறப்பில் மகிழ்வாக அமையும்.

  முற்பிறப்பில் நாம் செய்த பூர்வ புண்ணிய பழனின் விளைவாக இப்பிறப்பில் புத்திர பாக்கியம் நமக்கு அமைகிறது .இதற்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ஆம் இடத்தையும், கிரகங்களில் புத்திரகாரகன் குருவையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

  முற்பிறப்பில் தாய் , தந்தைகளை‌ நாம் மதித்து நடந்தவர்களுக்கு இப்பிறப்பில் தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடமும் தந்தைக்கு காரகனான சூரிய பகவானும், மாதுர் ஸ்தானமான 4-ஆம் இடமும் , மாதுர் காரகன் சந்திரனும் வலிமையுடன் அமர்ந்து நல்ல தாய் மற்றும் தந்தையை இப்பிறப்பில் நமக்கு அமைக்கும்.

  முற்பிறப்பில் நாம் செய்த தொழில் கீழ் நிலையாக இருப்பினும் நேர்மையாக‌
உளப்பூர்வமாக செய்திருப்பின் இப்பிறப்பில் பிறர் மதிக்க தக்க நல்ல தொழில் அமையும்.அவரது சாதக கட்டத்தில் ஜீவன ஸ்தான அதிபதியும் கெடாமல் இருக்கும்.

 முற்பிறப்பில் நாம் ஏதாவது கோயில் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு இருப்பின் இப்பிறப்பில் தர்ம மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடமும்,கர்ம அல்லது ஜீவன  ஸ்தானமான பத்தாமிடமும் பலம் பெற்று தங்களுக்குள் பரிமாறிக் கொண்டோ அல்லது ஒன்றுக்கொன்று பார்வை பெற்றுக்கொண்டோ அல்லது  இணைந்தோ நின்று தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருக்கும்.

   இப்பிறப்பு ஒருவருக்கு கடைசி பிறப்பாக இருப்பின் அவரது ஜாதகத்தில் முக்தி ஸ்தானமான 12-ஆம் இடத்தில் கேது பகவான் நின்று  இயற்கைச் சுபக்கிரகமான குருவால் பார்க்கப்பட்டு  ஒன்பதாம் இட அதிபதியும் பலம் பெற்று நிற்கும்.

நன்றி.

தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம், மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையைக் பெறலாம்)

வாட்ஸ் அப்
  9715189647

  செல்
  9715189647
    7402570899
                           

அன்புடன் 
சோதிடர்
 சோ.ப. ரவிச்சந்திரன் 
             M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர்)
 ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: