Monday, 6 April 2020

காரக பாவ நாஸ்தி--விளக்கம் தரவும்

"காரக பாவ நாஸ்தி" -விளக்கம் தரவும் ?

வாசகர் கேட்ட கேள்வி.

                     

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     ஒரு ஜாதகத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஸ்தானத்திற்கும்,
 ஒரு "காரகர்" என்ற கிரகம் இருக்கும்.

  ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் அந்த ஸ்தானத்திற்கு உரிய கிரகம் நின்றிருப்பதை "காரக பாவ நாஸ்தி" என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாறு நிற்பதால் அந்த கிரகத்திற்கு உரிய காரகம் பாதிக்கப்படும் என்பது பொதுவான விதியாகும்.

 ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தையும், அந்த ஸ்தானத்திற்கு உரிய காரக கிரகத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் பார்ப்போம்.

   இரண்டாம் இடம் என்பது "தன ஸ்தானம் "ஆகும். தன ஸ்தானத்திற்கு காரகர் "குரு பகவான் "ஆவார்.

   மூன்றாம் இடம் என்பது "சகோதர ஸ்தானம் "ஆகும். இந்த சகோதரர் ஸ்தானத்திற்கு காரகர் "செவ்வாய் பகவான்" ஆவார்.

 நான்காம் இடம் என்பது "மாதுர்‌ஸ்தானம்" ஆகும்.அதாவது தாய் ஸ்தானம் ஆகும்.தாய் ஸ்தானத்திற்கு காரகர் "சந்திர பகவான்" ஆவார்.

  ஐந்தாம் இடம் என்பது "புத்திர ஸ்தானம்" ஆகும்.இந்த புத்திர ஸ்தானத்திற்கு காரகர் "குரு பகவான்" ஆவார்.

     ஏழாம் இடம் என்பது "களத்திர ஸ்தானம்" ஆகும். களத்திர ஸ்தானத்திற்கு காரகர் "சுக்கிர பகவான் "ஆவார்.

  ஒன்பதாமிடம் என்பது "பிதுர் ஸ்தானம்" ஆகும்.அதாவது பிதுர் ஸ்தானம் என்பது தந்தை ஸ்தானம் ஆகும். தந்தைக்கு காரகர் "சூரிய பகவான்" ஆவார்.

   தன காரகன் குருபகவான்  தன ஸ்தானமான இரண்டாம் ஸ்தானத்தில் அமர்வது காரக பாவ நாஸ்தியை தரும் என்றாலும் இதில் சில விதி விலக்குகளும் உண்டு.

   என்ன என்று ஆராய்ந்து நோக்கி பார்த்தால் இங்கு இரண்டாம் இடம் என்பது தனம், தனம் வாக்கு, குடும்பம், நேத்திரம்  மற்றும் கல்வி ஆகிய பாவக பலன்களை கொண்டிருக்கும்.ஆதலால் தன் ஸ்தானத்தில் குரு பகவான் தனம் தொடர்பான காரக பலன்களை மட்டுமே பாதிக்கும்.ஏனைய இரண்டாம் பாவக பலன்களான குடும்பம் வாக்கு நேத்திரம் மற்றும் கல்வி போன்ற நிலைகளை பாதிக்காது.

      சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சகோதர காரகன் செவ்வாய் பகவான் அமர்வது சகோதர ஸ்தானத்தில் மட்டுமே பாதிப்பு உண்டாகும்.

  மாதுர் ஸ்தானமான நான்காம் இடத்தில் மாதுர்காரகன் சந்திர பகவான் அமர்வது அவரது தாய் ஸ்தானத்தை மட்டும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.இதிலும் சில விதிவிலக்குண்டு அந்த நான்காம் வீட்டு அதிபதி பலம் பெற்று, நான்காம் இடத்தை சுப கிரகங்கள் பார்க்கும் பட்சத்தில் காரக பாவ நாஸ்தி அதிகமாக தருவதில்லை.

  அதேபோல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் புத்திர காரகன் குரு அமர்வது புத்திரர் தொடர்பான காரகோ பாவ நாஸ்தியை உண்டாக்குகிறது.

   களத்திர ஸ்தானமான 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திரத்தில் மட்டும் பாதிப்பு உண்டாகிறது.

  பிதுர் ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் தந்தை காரகன் சூரியபகவான்  அவரது தந்தை ஸ்தானத்தில் மட்டுமே பாதிக்கிறது.

  காரக பாவ நாஸ்தி பற்றி "ஜாதக சிந்தாமணி"கூறும் பாடலை கவனிப்போம்.

 "எண்ணிய படியே காரகக்
 கோள்கள்
இயல்புறு தானத்தைச் சேரில்
நண்ணிய பலன்கள் யாவையும் நசிக்கும்
நலனும் சுக்கிரன் தானே
பெண்ணின்கா ரகக்கோள் ஆம்அந்தத் தானம்
பெற்றிடில் உதவிய மனையாள்
திண்ணமாய் நாசம் என்றனர் கணிதத்(து)
இயற்கையா வையும்உளம் தெரிந்தே"

பாடல் விளக்கம்

   காரகர்கள் தங்களின் காரக ஸ்தானத்தில் நின்றிருந்தால் அந்த ஸ்தானம் சார்ந்த நற்பலன்கள் எல்லாம் கெடும்.

  உதாரணமாக சுக்கிரன் களத்திர காரகனாவார் அதாவது மனைவிக்கு பொறுப்பு வகிக்கும் கிரகம்ஆகும். இந்த சுக்கிரன் களத்திர ஸ்தானமாகிய ஏழாமிடத்தில் நின்றிருந்தால் அந்த சாதகனுடைய மனைவிக்கு இன்னல்கள்  நிகழும் என்று ஜோதிட கணித வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

   அதே நேரத்தில் காரக பாவ நாஸ்திக்கு விதிவிலக்காக கல்விக்கு காரகனாகிய புதன் பகவான் கல்வி ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திலும் அல்லது வித்தை ஸ்தானமான நான்காம் இடத்திலும் நின்றிருப்பது காரகோ பாவ நாஸ்தி என்ற பிரிவில் வருவதில்லை.

    மாறாக புதன் பகவான் இரண்டு அல்லது நான்காம் இடத்தில் இருப்பது நல்ல கல்வியும், வித்தையும் சாதகருக்கு மேம்படுத்தும் அமைப்பு தான் ஆகும்.

   ஒரு ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருந்தால் புத்திர ஸ்தானத்தின் கார்கோ பாவ நாஸ்தியை உண்டாக்குவதில்லை.

  உதாரணமாக மீனம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற்று நிற்பது காரக பாவ நாஸ்தியை தருவதில்லை.

 இதேபோல விருசிகம்,கும்பம் மற்றும் மிதுனம் போன்ற ராசிக்கு இரண்டாம் இடத்தில் குருபகவான் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் நிற்பதால் காரகோ பாவா நாஸ்தியை தருவதில்லை.

 இதே போல வாகன காரகனாகிய சுக்கிரன் பகவான் வாகன ஸ்தானமாகிய நான்காம் இடத்தில் நிற்பது  காரக் பாவ நாஸ்தி என்ற வகையில் சேராது.

  அதேபோல் எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள் காரகன் "சனி பகவான்" இருந்தால் அதுவும் காரகோபாவநாஸ்தி தோஷம் ஆகாது .

   காரக பாவ நாஸ்திக்கு இன்னொரு விதிவிலக்கும் இருக்கிறது .அதாவது காரக கிரகம் அந்த காரக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று நிற்பது காரக பாவ நாஸ்தி ஆகாது.

   உதாரணமாக மேஷ லக்னத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் நின்று இருந்தால் அது காரக பாவ நாஸ்தி அல்ல. மேசத்திற்கு ஏழாம் வீடு சுக்கிரன் ஆகிறது. அங்கே சுக்கிரன் நின்றிருப்பது மனைவிவழியில் சாதகனுக்கு நன்மை தரக்கூடிய அமைப்பாகும். மேலும் மனைவிக்கு நன்மை தரக்கூடிய அமைப்பு என்று கூறுவதே சாலப் பொருத்தமாகும்.

   காரக பாவ நாஸ்தி என்பது ஒரு பொதுபலன் ஆகும்.ஆனால் அதே நேரத்தில் சிறப்பு விதி என்ற வகையில் அந்த ஸ்தானத்தை பார்க்கும் மற்றும் சேர்ந்து இருக்கக் கூடிய கிரகங்களை பொறுத்தும் பலன்களில் மாறுபாடு ஏற்படும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

 காரகோ பாவ நாஸ்தி ஏற்பட்டிருப்பதாலேயே அந்த காரகம் சார்ந்த நற்பலன் எதுவும் நடக்காது என்று தீர்மானித்து விடக்கூடாது. ஒருபக்கம் காரக பாவ நாஸ்தி ஏற்பட்டு இருந்தாலும் , இன்னொரு பக்கம் அந்த காரக ஸ்தானாதிபதி நன்னிலையில் இருக்கலாம் . அப்போது அந்த காரககம் சார்ந்த நற்பலன்கள் கிட்டவே செய்யும்.

  கீழ்க்கண்ட உதாரண சாதகத்தில் மேஷ லக்கனத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன் நிற்பது காரகபாவ நாஸ்தி என்ற பொழுதிலும் ஆட்சி பெற்று நின்றிருப்பதால் அவரது இல்லற வாழ்வில் எத்தகைய பாதிப்பு ஏற்படாமல் மனைவி வழியில் நற்பலனே கிட்டியது.


  எனவே ஜாதகத்தில் எந்த மூல விதியை கொண்டு ஆராய்ந்தாலும் அந்த மூல விதிக்குள்  உள்ள  விதிவிலக்குகளையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொல்ல வேண்டும் என்பது நாம் அறிந்துகொள்ளக் கூடிய ஒன்றாகும்.

                


நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
      செல்
    9715189647
       7402570899
                         

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

.............................................

No comments: