உங்களின் குண நலன்களை முடிவு செய்வது யார்?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!
ஒருவருடைய குண நலன்களை முடிவு செய்வது அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி யார் ? என்பதை பொருத்தும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொருத்தும்,
எந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறது என்பதை பொருத்தும் அமைகிறது.
லக்கனாதிபதியானவர் இயற்கை பாவ கிரகமா ? அல்லது சுப கிரகமா ? என்பதை முதலில் கவனிக்கப்பட வேண்டும் பிறகு அவர் எந்த வீட்டில் இருக்கிறார் அந்த வீடு அந்த கிரகத்திற்கு நட்பா, உறவா, பகையா மேலும் அந்த கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் யார் ? என்பதை கவனிக்க வேண்டும்.
லக்கனாதிபதியோடு இணைந்துள்ள அல்லது பார்வை செய்கின்ற கிரகத்தின் தன்மையைப் பொருத்தும் உங்களுடைய குணநலமும் அமையும்.
லக்கனத்தை இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன்,
தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்க்கின்றதா ? அல்லது இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன், மற்றும் சூரியன் போன்ற கிரகங்கள் பார்க்கிறதா ? என்பதை பொருத்தும் சாதருடைய குணநலன்கள் அமைகிறது. இது போன்று பல விவரங்களை ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
லக்னத்தில் குரு பகவான் இருந்தாலும் அல்லது லக்கனத்தை குரு பார்த்தாலோ லக்கனாதிபதியுடன் குரு பகவான் இணைந்து அல்லது பார்வை செய்திருந்தாலோ சாதகர் நல்ல குணம் படைத்தவராக இருப்பார். அடுத்தவருக்கு உதவக்கூடிய தாரளமான குணம் படைத்தவராக இருப்பார். நீதி ,நியாயம் நேர்மை போன்ற தன்மைகளுக்கு கட்டுப்பட்டவர் அநியாயத்துக்கு நல்லவராகவும் அதே நேரத்தில் ஏமாளியாகவும் இருப்பார்.
லக்னத்தில் சனி பகவான் இருந்தாலும் அல்லது லக்னத்தை சனி பார்த்தாலும் அல்லது லக்னாதிபதி ஆனவர் சனியின் சேர்க்கை அல்லது பார்வை போன்ற முறைகளில் தொடர்பு பெற்றிருந்தாலும் சாதகர் நய வஞ்சகத் தன்மை உடையவராகவும் பொறாமை குணம் படைத்தவராகவும் அடுத்தவர் வளர்ச்சியை கண்டு தாங்கிக் கொள்ளாத மனநிலை படைத்தவராகவும் இருப்பார் குள்ள தன்மை கொண்டவர் நல்ல குணங்கள் அவரிடம் தேடிப் பார்க்க வேண்டும் சற்று சோம்பேறித்தனம் , எந்த செயலை செய்வதற்கு தயக்க குணம் படைத்தவராகவும் இருப்பார். இந்த பலன் மாறுபடவும் வாய்ப்பு உண்டு. ஏன் பலன் மாறியது என்றால் இதுபோன்று லக்னத்தோடு தொடர்பு கொண்ட சனி பகவானை இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறைச்சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை தொடர்பு கொள்ளும் பொழுது மேற்கண்ட பலன் மாறுபட்டு நல்ல பலனை தரும் நிலைக்கு தள்ளப்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது லக்கனத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கனாதிபதி யாகவே செவ்வாய் இருந்தாலும் சாதகர் சற்று வீம்பு குணம் படைத்தவராகவும் மற்றவர்களை பற்றி அலட்டிக் கொள்ளாமல் முரட்டு குணம் படைத்தவராக இருப்பார்.
லக்னத்தில் புதன் பகவான் இருந்தாலும் அல்லது லக்கனத்தை புதன் பகவான் பார்த்தாலும் சாதகர் நல்ல கூர்மையான கவனிக்கும் திறன் உடையவராகவும் அடுத்தவர் மனதை பார்த்தவுடன் படிக்கும் எண்ணம் அல்லது தன்மை படைத்தவராகவும் இருப்பார். எதனையும் யூகிக்க அறியும் தன்மை படைத்தவராகவும் இருப்பார் . எதையும் கணக்கு போட்டு பேசக்கூடிய எண்ணம் உடையவராக இருப்பவர். உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் ஒரு விதமான கணக்கு போட்டு வாழக்கூடிய தன்மை படைத்தவராக இருப்பார்.
லக்னத்தில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது சுக்கிரன் பார்த்தாலும் சாதகர் வேடிக்கையான மனநிலை கொண்டவராக எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியான மனதோடு வாழக்கூடிய கலை ரசனை படைத்தவராக திகழ்வார்.
லக்னத்தில் சூரியன் இருந்தாலும் லக்னத்தை சூரியன் பார்த்தாலும் அதிகார தோரணை உடையவராக இருப்பார். எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றவராகவும் இருப்பார் .அதுவே சில நேரங்களில் அவர்கள் வளர்ச்சிக்கு தடையாகவும் சில நேரங்களில் அமைந்துள்ளது உண்டு.
லக்னத்தில் சூரியன் இருந்து பௌர்ணமி அமைப்பில் இருப்பின் அதிகாரம் தரும் அரசு பதவியில் அமரக்கூடிய யோகம் சாதகருக்கு உண்டாகும்.
லக்னத்தில் சந்திரன் இருந்தாலும் சந்திரன் பார்த்தாலும் குளிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரராக இருப்பார். வேடிக்கை வினோதமாக பேசக் கூடியவராகவும் எல்லாரையும் அன்போடு அழைக்க கூடியவராகவும் இருப்பார்.
லக்னத்தில் ராகு இருப்பின் நயவஞ்சக தன்மை கொண்டவராகவும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கபடதாரியாகவும் இருப்பார் இவர் பேச்சில் இரட்டை அர்த்தம் இருக்கும். தன்னம்பிக்கை அற்றவராக இருப்பார் உடல் மெலிந்த தேகம் உடையவராக காணப்படுவார்.லக்கனத்தில் கேது இருப்பின் எதையும் யூகித்து அறியும் தன்மை படைத்தவராக இருப்பார்.தன்னம்பிக்கை அற்றவராக இருப்பார்.
நன்றி.
Online Astro Consultation
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment