Friday, 7 July 2023

யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் வேலை செய்யாததற்கு காரணம் என்ன?

 யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும் வேலை செய்யாததற்கு காரணம் என்ன?

         


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஜாதகம் பார்க்க வரக்கூடிய பல நபருடைய ஜாதகங்களை  ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஒரு சிலருக்கு ஜாதகத்தில் யோக அமைப்புகள் நிறைய இருந்தும் அவை தக்க சமயத்தில் பயன்படாமல் இருந்து விடுகிறது. இவ்வாறு இருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கான விடையைத் தருவதே இந்த பதிவினுடைய நோக்கமாகும்.


  அதாவது ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தர வேண்டுமாயின் அந்த சாதகத்தில் உள்ள கிரகங்கள் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற அதிக ஸ்தான வலிமை பெற்று இருக்க வேண்டும் என்பது கிடையாது.


 சில நேரங்களில் அதிக ஸ்தான வலிமை பெறாத கிரகங்கள் கூட சாதாரண அமைப்பில் இருந்து மிகப்பெரிய யோகங்களை சாதகருக்கு தந்து விடுவது உண்டு. இது போன்ற அமைப்பை பல ஜாதகங்களில்  கண்கூடாக பார்க்க முடிகிறது.


  ஒருவருக்கு கிரகங்கள் நடக்கும் தசை அதிக யோகத்தை தந்து வாழ்வின் உயரிய நிலைக்கு இட்டு செல்ல வேண்டுமாயின் அவர்கள் ஜாதகத்தில் அச்சாணியாக விளங்கும் இலக்கனமும்‌ மற்றும் லக்கனாதிபதியும்  பாவத்துவம் அடையாத நிலையில் பலமடைந்து இருக்க வேண்டும். ஏனெனில் தசை நடத்தும் கிரகம் கொடுக்கக்கூடிய யோகத்தை அனுபவிக்க லக்கனாதிபதியுடைய பலம் என்பது மிக மிக அவசியமாகும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் பௌர்ணமி யோகம் பெற்றவர்கள் அரசின் உயரிய பதவிகளில்,  ஆட்சி கட்டிலில் மற்றும் ஆளுமை தன்மை மிக்கவராக இருப்பார்கள் என்பது சோதிட முக்கிய விதி என்றாலும் சில நிலைகளில் பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்களும் சாதாரண கீழ்மட்ட நிலையில் இருந்து விடுகிறார்கள். இதற்கான காரணங்களை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அவருடைய ஜாதகத்தில் அந்த பௌர்ணமி யோகத்தை தரக்கூடிய அந்த சூரியனுடைய அல்லது சந்திரனோடோ நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுக்கள் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து கிரகண தோஷத்தை அதாவது சந்திர கிரகணம் போன்றவற்றை தந்து விடுவதும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.


  இதே பொளர்ணமி யோக அமைப்பில் வேறு வகையில் பார்த்தால்

சில நேரங்களில் சூரியனுடன்  சனி பகவான் அல்லது சந்திரனுடன் சனி பகவான் இணைந்து அந்த யோக அமைப்பை தவிடு பொடி ஆக்கி  விடுவதும் உண்டு. சூரியனுடன் சனி எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து விடும் பொழுது அவை சூரியனையும் பலமிழக்க செய்வதுடன் சந்திரனையும் பார்வை செய்து பலமிழக்க செய்து விடுகிறது. அதேபோல சந்திரன் உடன் சனி நெருக்கமாக இணையும் பொழுது சந்திரனை பலமிழக்க செய்வதுடன் தனது ஏழாவது பார்வையால் சூரியனை பலமிழக்க செய்து விடுகிறது.


  சில ஜாதகங்களில் இரண்டு மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் போது உச்சத்தை உச்சம் பார்க்கின்ற  நிலையில் அவை பெரிய அளவுக்கு யோகத்தை தந்து விடுவதில்லை. உதாரணமாக மேஷத்தில் சூரியன் உச்சம் மற்றும் துலாத்தில் சளி உச்சம் என்ற நிலையில் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது சனி வக்கிரம் பெறுவதோடு  சூரியன் மற்றும் சனி சம சப்தம பார்வையால் 

தந்தை- மகன் உறவு நிலை ,அரசு வேலை கிடைப்பதில் தாமதம் போன்ற கெடு பலனை ஜாதகருக்கு கொடுத்து விடும்.


 கடகத்தில் குரு உச்சம் பெற்று மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் ஒன்றுக்கொண்று பார்த்துக்கொண்ட சாதகங்கள் பலவற்றை பார்க்கும் பொழுது அதன் தசைகளில் அவை ஜாதகருக்கு யோகத்தை தந்து விடுவதில்லை.


  பல நேரங்களில் நீசம் பெற்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளும்போது கூட அதன் தசைகளில் மிகப்பெரிய யோகத்தை ஜாதகருக்கு கொடுத்துள்ளது.


   உதாரணமாக கடகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் மகரத்தில் குரு நீசம் என்ற வகையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பொழுது அவை நீச பங்கம் பெற்று குரு தசை மற்றும் செவ்வாய் தசையில் சாதகருக்கு நல்ல பலனை தந்து விடுகிறது.


  ஒரு உச்சம் பெற்ற கிரகம் நீசம் பெற்ற கிரகத்தோடு இணையும் பொழுது அந்த உச்சம் பெற்ற கிரகம் தனது வலிமையின் அல்லது ஒளி அளவின் சதவீதத்தை சற்று நீசம் பெற்ற கிரகத்திற்கு கொடுத்து விடுவதால் உச்சம் பெற்ற அந்த கிரகம் அதன் தசையில் சாதகருக்கு எதிர்பார்த்த அளவைவிட குறைவான யோகத்தை கொடுக்கிறது.


  எல்லாவற்றிற்கும் மேலாக  ஜாதகத்தில் ஒரு சில கிரகங்கள் ஸ்தான வலிமை,

  திக்பலம் மற்றும் திருக் பலம்  போன்ற அனைத்தும் பெற்று இருந்தாலும் அந்த தசை அந்த சாதகருக்கு வாழ்நாளில் வராத பல ஜாதகங்களாலும் அந்த யோகம் அவருக்கு செயல்படாமல் போய்விடும்.


ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் ஸ்தான பலம், திக்பலம் மற்றும் திருக் பலம் போன்ற பலம் பெற்ற அமைப்பு இல்லாத கிரகங்கள் பல இருந்தாலும் ஒரு சில கிரகங்கள் மட்டும் நல்ல முறையில்  அமைந்து சுபத்துவம் பெற்ற நிலையில் இருந்து அதன் தசை அவருக்கு தக்க சமயத்தில் வந்து அவரை பெரும் புகழை அடையச் செய்வதும் உண்டு.


 இங்கு ஸ்தான பலம் என குறிப்பிடுவது  உச்சம், மூலதிரிகோணம், ஆட்சி , நட்பு மற்றும் நீசம் போன்ற நிலையில் கிரகங்கள் இருப்பது ஆகும். சில நேரங்களில் ஒரு கிரகங்கள்  ஸ்தான வலிமை இல்லாவிட்டாலும்  அதாவது நீசம் பெற்ற நிலையில் திக்பலம் பெற்று இருந்தாலும் அதனை வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது. திருக் பலம் என்று குறிப்பிடுவது கிரகங்களுடைய பார்வை பலமாகும். அதாவது இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர் பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்த்தால் அந்த பார்க்கப்படும் ஸ்தானமும் மற்றும் அந்த கிரகமும் அதிக சுபத்துவம் அடையும். அதே நேரத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்வை செய்தால் அவை பார்க்கப்படும் ஸ்தானமும்  மற்றும் கிரகமும் பாவத்துவத்துக்கு உட்படும்.இங்கு சுபத்துவம் பெற்ற கிரகங்கள் தசை ஜாதகருக்கு யோக பலனை தருகிறது.ஆனால் பாவத்துவம் அடைந்த கிரகங்கள் தசை கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு சில நேரங்களில் ராசியில் தசை நடத்தும் கிரகங்கள் சுபத்துவம் அடைந்து பலம் பெற்று இருந்தாலும்  நல்ல பலனைத் தராமல் இருப்பதற்கு அவை அம்சத்தில் பாவ வர்க்கம் ஏறி மற்றும் பாவ கிரகங்கள் உடன் இணைந்து வலிமை இழந்து இருக்கும்.


 இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை  மற்றும் சேர்க்கை பெற்ற கிரகங்கள் அதன் தசையில் அதிக யோகத்தை கொடுக்கும் என்றாலும் சில நேரங்களில் அவை பாகை அடிப்படையில் நெருக்கமாக இணையாமலோ அல்லது பார்வையை செய்யாமலோ  உள்ளது . அது போன்ற நிலையில் யோகத்தை சாதகருக்கு அந்த தசைகள் கொடுக்காமல் இருந்து விடுகிறது.


   இது போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு சில சாதகங்கள் பார்ப்பதற்கு அதிக யோக அமைப்பில் இருப்பது போல் தோன்றினாலும் அந்த யோக அமைப்புகள் சாதகருக்கு தக்க சமயத்தில் பயன்படாமல் அல்லது வாழ்நாளில் வராமல் இருந்து விடுவது உண்டு.


   " எல்லாம் அவன் செயல் ".


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 

மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

      


அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

   ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: