Tuesday, 4 July 2023

புதன் பகவான் தரும் புதுமை கருத்துக்கள்

 புதன் பகவான் தரும் புதுமை கருத்துக்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  புதன் பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் ஆகும்.இவை இயற்கை சுப கிரகங்களுடன் சேரும்போது முழு சுபராக செயல்படுவார்.இயற்கை பாவ கிரகங்களுடன் சேரும்போது முழு பாவராக செயல்படுகிறார். அதாவது உங்களுக்கு புரியிற மாதிரி சுருக்கமாக சொல்லணும்னா " பாவி உடன் சேராத தனித்த புதன் இயற்கை சுப கிரகமாக" கருதப்படுகிறது


   புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு அதிபதியாக திகழ்வார். லக்கனத்தில் புதன் அமர்ந்து திக்பலம் என்ற பலத்தை பெற்றிருப்பார். 12ஆம் இடத்தில் இருந்தாலும் அதை மறைவிடமாக கருத தேவையில்லை.திக் பலத்திற்கு மிக அருகில் உள்ளார் என்று அமைப்பில் பலமடைந்த கிரகமாக கருதப்படும்.


  புதன் பகவானுக்கு மட்டுமே ஏனைய கிரகங்களை போல உச்ச வீடும் , ஆட்சி வீடும் தனித்தனியாக இல்லாமல் இரண்டும் ஒன்றாகவே வருகிறது.ஆம் கன்னியில் புதன் உச்சம், மூல திரிகோணம் மற்றும் ஆட்சி ஆகிய மூன்று நிலைகளில் ஸ்தான வலிமை பெறுகிறார். மீனத்தில் புதன் நீசம் அடைகிறார்


 மீன லக்னத்திற்கு லக்கனத்தில் புதன் பகவான் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும் அவை லக்கனத்தில் திக்பலம் என்ற வகையில் பலமடைந்த கிரகமாகவே கருதப்படுகிறது. ஸ்தான பலத்தை இழந்த கரங்கள் திக்பலம் வரும்போது வலுப்பெற்ற கிரகமாக கருதப்படுகிறது.


   புதன் ஒரு பாவ கிரகத்தோடு இணைந்தாலும் அல்லது பாவ கிரகத்தை பார்த்தாலும் தான் பாவத்துவம் அடைந்து தன்னால் இணைந்த அல்லது பார்த்த கிரகத்தை சுபத்துவ படுத்தும்..


  புதன் பகவான் சூரியனுடன் இணைந்தோ அல்லது சூரியனுக்கு முன் பின் முப்பது பாகைக்குள் இருக்கும். புதன் பகவான் பெரும்பாலும் சூரியனுடன் இணைந்தே காணப்படக்கூடிய கிரகம் ஆகும்.

எனவே புதன் பகவான் பகவானுக்கு மட்டும் அஸ்தங்கமும் ,வக்கிரமும் ஒரே நேரத்திலும் அல்லது தனித்தனியாகவும் நடைபெறும். புதன் உள்வட்ட கிரகமாகும்.

புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது.


 புதன் பகவான் சூரியனுடன் இணைந்து காணப்படுவது " புத ஆதித்ய யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இது கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க கூடியவராக ஒருவரை மாற்றும். அரசாங்க பதவிகளை பாவத்துவம் இல்லாத நிலையில் போட்டி தேர்வு மூலமாக பெற வைக்கும்.


  ஜாதகத்தில் சிம்மமும், சூரியனும் வலுப்பெற்ற நிலையில் நின்று புதன் பகவானும் பலமான அமைப்பை பெற்று இருப்பவர் அறிவால் இந்த உலகை ஆளக்கூடியவராக திகழ்வார்.


   புதன் பகவான் ஒரு அலி கிரகமாகும். ஒரு ஜாதகத்தில் புதன் பகவான் பலமான அமைப்பைப் பெற்று இருக்கும் பொழுது அவருடைய மனமும் ,எண்ணமும், மற்றும் செயலும் அறிவு சார்ந்த பேரின்பத்தை நோக்கிய செல்லும் .காமம் போன்ற சிற்றின்ப விஷயங்களை அதிகமாக எண்ணத்தை செலுத்தாது இருக்கச் செய்யும்.


  ஒருவர் ஜாதகத்தில் புதன் கெட்டால் அவனுக்கு அறிவு கெட்டு விட்டதாக அர்த்தம். எனவே கல்விக்கு மூளையாக செயல்படும் புதன் பகவான் ஒரு ஜாதகத்தில் பலமடைந்து இருக்க வேண்டும். மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் 3 , 6 க்குடைய அவ யோக கிரகமாக இருந்தாலும் அவர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் புதன் பகவான் மறைமுக வலுப்பெற்று இருந்தால் நல்லது .இல்லையென்றால் புதன் பலவீனம் அடைந்தால் புதனுக்குரிய காரக பலன் அவருக்கு கிடைக்காமல் போய்விடும்.


 மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் லக்னத்தில் அமரும்போது ஆறாம் இடத்திற்கு எட்டாம் இடத்தில் அமர்ந்து மூன்றாம் இடத்திற்கு லாபத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஆறாம் இடப்பலனை அதிகமாக தராமல் மூன்றாம் இட பலனை அதிகமாக தரக்கூடிய நிலை உருவாகும்.


   புதன் பகவானுக்கு சுக்கிரன்,சனி நட்பு கிரகமாக செயல்படுகிறார்.சூரியன் அதி நட்பு கிரகமாக கருதப்படுகிறது.


 புதனுக்கு சந்திரன் மட்டுமே பகை கிரகமாக கருதப்படுகிறது.

செவ்வாய் மற்றும் குரு பகவான் எதிர் தன்மையான கிரகம் ஆகும்.


 புதன் பகவான் அறிவுக்கும் மற்றும் திறமைக்கும் மிக முக்கியமான கிரகம் ஆகும். கற்ற கல்வியால் பெறப்பட்ட அறிவுக்கும் மற்றும் பெற்ற ஞானத்தால் வரும் திறமைக்கும் புதன் பகவானே காரகலாவார்.புதன் பகவான் பலமாக 

 பெற்றவர்கள் படித்த அறிவாளிகளும் உண்டு. படிக்காத மேதைகளும் உண்டு.


  வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் உள்ள புதன் பகவான் ஒருவரை ஆக சிறந்த எழுத்தாளராக மாற்றுகிறது சோதிட ஞானம், கம்ப்யூட்டர் அறிவு மிக்கவராகவும் திகழ்கிறார்.. இசையில் புலமை பெற்றவராகவும் விளங்குகிறார்.


    குரு மற்றும் வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் உள்ள புதன் பகவான் டபுள் டெபாசிட்டர் முறையில் வலுப்பெற்று சாத்திரங்கள் அறிந்தவனாகவும், இலக்கண இலக்கியங்களை திறம் பட கற்றவர்களாகவும் மேடை ஏறி பேசக்கூடிய விற்பனராகவும், தமிழில் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவராகவும் திகழ்கிறார். புதன் சார்ந்த தொழிலில் மேன்மை அடைவார்.


    இசை, ஓவியம், கதை ,கவிதை ,கட்டுரை, பாடல்கள், இலக்கணம் மற்றும் இலக்கியம் போன்றவற்றில் புதியன படைப்பவராகவும், கணித அறிவு மிக்கவராகவும் புள்ளி விவரங்களை சேகரிக்க கூடியவராகவும் பல்வேறு செய்திகளை சேகரித்து ஆகச்சிறந்த செய்திகளை தொகுத்து தரக்கூடியவராகவும் சிறந்த தலையங்கம் எழுத கூடியவராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவராகவும் திகழ்வார்.


  புதன் பகவான் பலமாக பெற்றவர்கள் அரசு வங்கி அல்லது பணம் புழங்கும் இடங்களில் வேலை பார்க்கக் கூடியவராக திகழ்வார். மற்றொருடைய வருமான கணக்குகளை நிர்வாகிக்கக்கூடிய வல்லவராக திகழ்வார்.


தொழில்நுட்பம் மிக்க விஞ்ஞானிகளை புதன் பகவான் உருவாக்குவார் .குருவின் பார்வை பெற்ற புதன் பகவான் ஒருவரை நிதி துறை, பொருளாதார துறை மற்றும் வங்கிகளில் புகழ் பெற வைக்கிறார் சிறந்த விஞ்ஞானியாக தொழில்நுட்பத்தில் பல்கலை வித்தகராக நிகழ வைக்கிறார்.


நான்காம் இடத்தில் சுபத்துவமான நிலைகள் இருக்கும் புதன் பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தை பார்த்து புத்தியால் திறம்பட தொழில் செய்யும் நிலையை தருவார் .மேலும் வக்கீல், எழுத்து ,கணிதத்துறை, ஆசிரியர் துறை , புள்ளியில் ,கணினி மற்றும் சோதிடத்துறை போன்ற புதன் சார்ந்த துறைகளில் ஒருவரை புகழ் பெற வைப்பார்.


    பிரபஞ்ச உண்மைகளை கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தக் கூடியவராகவும், கண்டுபிடிப்பாளராகவும், ஆராய்ச்சி புலமை மிக்கவராகவும் திகழ்கிறார்.


 புதன் பகவான் சனி ராகு போன்ற பாவ கிரக தொடர்பை பெறும் பொழுது தான் பெற்ற அறிவை பொதுவெளியில் மற்றவருடைய நாசத்துக்கு பயன்படுத்தக்கூடிய குறுக்கு புத்தி காராகவும் திகழ்வார்.


 புதன் பகவான் ஆலோசனை வழங்குவதில் வல்லவராகவும், மந்திரியாகவும் திகழ கூடியவர்.இசை நுணுக்கங்களை ஆராய்ந்து அதில் மேதமை பெற்றவராகவும் திகழ்வார்.


  படிக்காத மேதைகளாக கூடை முடைதல், பாய் பின்னுதல், சிலை வடித்தல், சிற்பம் செய்தல் ,ஓவியம் வரைதல் போன்ற நூல்களை அறிந்தவர் ஆக திகழ்வதும் புதன் பகவான் வலிமையை பொருத்து அமைகிறது.


   மிதுனம், கன்னி , ரிஷபம், துலாம் ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய சுக்கிரனின் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு இந்த புதன் திசை மிகுந்த யோக திசையாக சாதகருக்கு அமைகிறது.


 குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சகம் ,தனுசு ,மீனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய லக்னங்களுக்கு புதன் பகவான் உப ஜெய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய 3, 6 ,10, 11 ஆகிய இடங்களில் நட்பு நிலையில் இருந்தால் யோக பலனை தரும்.


 மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு லக்கனத்தில் புதன் இருப்பது பலமடைந்த கிரகமாக கருதப்படும். அதே நேரத்தில் மிதுன லக்னத்திற்கு நான்காம் இடத்தில் புதன் உச்சம், ஆட்சி மற்றும் மூல திரிகோணம் போன்ற நிலையில் இருந்தாலும், கன்னி லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் புதன் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் அவை கேந்திர ஆதிபத்திய தோஷத்தை பெரும் பொழுது இந்த புதனுக்குரிய இயல்பான பலனை ஜாதகருக்கு தராமல் போய்விடும்.


 மிதுன லக்னமாக இருந்து நான்காம் இடத்தில் புதன் பகவான் உச்ச, ஆட்சி மற்றும் மூல திரிகோணம் போன்ற வகைகளில் வலுப்பெற்று இருந்தாலும் கேந்திர ஆதிபத்தியம் தோஷத்தை பெற்றவர் என்ற நிலையில் அவருக்கு பள்ளிக்கூடம் என்றால் என்னவென்று தெரியாமல் கணித அறிவே இல்லாமல் ஆடு மாடு மேய்க்கக் கூடிய ஒரு நபராக ஆகி விடுவது கண்டு வியந்ததுண்டு இதற்கு காரணம் அவை கேந்திர ஆதிபத்திய தோஷமே காரணமாக அமைகிறது.


 கேந்திர ஆதிபத்திய தோஷம் பெற்ற புதன் பகவானை சனி அல்லது செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்க்கும் பொழுது அந்த தோஷம் நீங்குகிறது.ஆனால் அதே நேரத்தில் பாவத்துவமும் அடைகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்; 7402570899


Email: masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A,BEd

  ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: